Montag, Dezember 08, 2003

அவர்க்கென்று ஓர் குடில்.....

ன்று நாகர்கோயில் கப்பல்த் திருவிழாவில் தீர்க்கப்படுவது போன்று பாரிய சத்தத்துடன்; பலாலி இராணுவ முகாமிலிருந்து ஷெல்களும் றொக்கட்டுகளுமாய் தீர்த்தவண்ணமிருந்தார்கள்.

அச்சுவேலி , ஆவரங்கால் , புத்தூர் , சிறுப்பிட்டி , நீர்வேலி போன்ற இடங்களில் சரமாரியாக ஷெல்கள் விழுந்து வெடிக்கத் தொடங்கின.

“ஆமி பலாலி முகாமை விட்டு வெளிக்கிடப்போகுது போல கிடக்கு . . . ”
மக்கள் எல்லோரும் பரவலாகப் பேசிக்கொண்டார்கள்.

மக்களும் எத்தனை தடவைகள் என்றுதான் பங்கருக்குள்ளே இறங்கி ஏறுவார்கள். வயதானவர்களுக்கு இது ஒரு கொடுமையான தண்டனை. பாட்டி சிறீமாவோ இப்படி ஒரு தண்டனையை ஒருநாளுக்கு அனுபவிக்க நேர்ந்திருந்தால் அன்றே பரலோக யாத்திரையை ஆரம்பித்திருப்பா. இது தன் குட்டியைத்தானே தின்னும் இன முதலைகள் ஆளும் நாடு. ஓரு விடியல் ஏற்படும்வரை அப்பாவிகள் அனுபவிக்கத்தான் நேரும்!

சதா பங்கருக்குள் எப்போதும் முடங்கியிருப்பது எத்தனை நாளுக்குத்தான் சாத்தியம்? வெளியில் வந்து இருந்தாலும் விழுந்து வெடிக்கும் ஷெல்லின் கூறுகள் ஆளைச் சீவிக்கொண்டு போகலாம். வீட்டிற்குள் இருந்தாலும்தான் . ‘ஜிவ் ’; வென்று கூவிக்கொண்டு வரும் ஷெல்கள் கூரையில் விழுந்து வெடித்துச் சிதறலாம். மக்கள் தூக்கமின்றி தவித்தார்கள்.

மார்கழிப் பனியின் குளிர்மை இன்னும் காற்றில் கலந்திருந்த மென்காலை நேரம். சிற்பாசாரி ஆனந்தரங்கர் சந்தியாவந்தனம் முடித்துக் கொண்டு தன் கலைக்கூடத்துள் நுளைந்தார். அதன் நடுவிதானத்தில் மொறீசியஸ் நாட்டிற்கு அனுப்புவதற்காகத் தன் நாலைந்து மாத உழைப்பில் உருவாகி முடியுந்தறுவாயில் கொலுவாய் நின்ற தேவியின் சிலைகளை கைகளைக்கட்டிய வண்ணம் பார்த்துக்கொண்டு நின்றார்.

சரிவிகிதத்தில் அம்சமாகச் சமைந்துவிட்ட அங்கங்கள் , நீண்ட விழிகளில் சுடர்ந்த தீட்சண்யம் , நடுவில் இன்னொரு தீபமாய் வளர்ந்த நாசி , வீணையெனத் ‘திடு’ப்பென ஒடுங்கிப் போகும் இடை . . . . . இவைகளையெல்லாம் ஒருங்குசேரப் பார்க்கப் பார்க்க அவருக்குத் தன் சிருஷ்டிப்பாற்றல் மீது கர்வம் வளர்ந்தது!

அவர் மனைவி சாந்தாம்மாள் பனை வெல்லத்துடன் தேனீர் கொண்டுவந்து கொடுத்தார். அதைக் குடித்துவிட்டு தன் ஆயுதப் பெட்டியைத் திறந்து பல தினிசில் அரத்தாள்களை எடுத்துவைத்துக் கொண்டு தேவியை ‘பொலிஷ்’ செய்ய ஆரம்பித்தார். அவர் உதடுகள் அவரையுமறியாமல் ‘கனகதாரா’ ஸ்லோகங்களை உச்சரிக்கத்தொடங்கின.
மீண்டும் மழை பொழிவதைப் போல் ஷெல்கள் விழத் தொடங்கின. யாரோ தெருவில் ‘ஆமி அச்சுவேலி , தோப்புப் பக்கமாய் வந்திட்டுதாம் ’ என்று பேசிக் கொண்டு போனார்கள். ‘இருக்காது சும்மா வதந்தியாயிருக்கும் ’ என்று நினைத்தபடி மீண்டும் அவர் தன் கருமமே கண்ணாயினார்.

‘படா’ரென்று ‘ஷெல் ’ ஒன்று விழுந்தும் , அதைத் தொடர்ந்து மரங்கள் முறிந்தும் கேட்டன. அவர் மனைவி பங்கருக்குள் அவரையும் “ஓடியாங்கோ . . . . ஓடியாங்கோ” என்று அழைத்தபடி ஓடிப்போய் நுழைந்தார். வேகமாக வந்து பங்கருக்குள் புகுந்து கொண்ட ஆசாரியாருக்கு மூச்சிரைத்தது. ஒரு பத்து நிமிடங்கள் இடைவெளி விட்டது மாதிரி ஓய்வாயிருந்தது. ‘வெளியே போகலாமா’ என்று அவர்கள் எண்ணவும் ‘ஷெல்’ ஒன்று விழுந்து வெடித்து நிலமே அதிர்ந்தது. ஒரு பனை உயரத்திற்கு மண் மலைபோல எழும்பி வேறென்ன அழிவு நடந்ததென்றே பார்க்கமுடியவில்லை. செவிப்பறையும் நெஞ்சும் அதிர்ந்து வலிக்க........
‘ஈஸ்வரா . . . . ! ’ என்று அரற்றினர் இருவரும்.
புழுதி சற்றே அடங்கியதும் ஆசாரியார் வெளியில் வந்து பார்த்தார். அவர்கள் வீட்டில் பாதியும் உடைந்து சிதறிப் போயிருக்க தரையெல்லாம் கூரை ஓட்டின் சிவந்த சில்லும் சிதறல்களும். இடிபாடுகளைக் கடந்து கலைக்கூடத்தினுள் எட்டிப்பார்த்தவருக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சி! ஓயிலாக ஒரு நடன பாவத்தில் விரல்களில் ‘டோலஹஸ்த்த’ முத்திரையை எழிலாகப் பிடித்தபடி செல்லமாக கீழ் நோக்கி வளைந்திருந்த தேவியின் இடது கை ஒடிந்து தரையில் கிடக்கிறது . . . ஆசாரியருக்கு பேச்சேதும் வரவில்லை.............. உதடுகள் மாத்திரம் துடிக்கின்றன. ‘இவர்கள் உயிருடன் இருக்கிறார்களோ’ எனப் பார்க்க வந்த சில அயல் சனங்களும் நடந்த விபரீதம் கண்டு பேச்சடைத்து நிற்கின்றனர்.

எல்லோர் வீட்டுப் படலைகளிலும் விடுதலைப் போராளிகள் தட்டிச் சொல்லிக்கொண்டு போகிறார்கள். “ஆமி வடக்கை ‘மூவ்’ பண்ணுகிறான்.................. றொக்கட்டால அடிக்கப்போறான்.............. எல்லோரும் உடன் வெளியேறி மட்டுவில் பக்கமாய் போங்கோ............... ” வீதியில் லோஞ்சர்களும்;;;;;, ஏ. கே 47 களும் படபடத்தன. ஜனங்கள் சிதறித் தறிகெட்டு ஓடினார்கள். இவர்களுக்கும் ஓடவேண்டும் என்பதைத் தவிர அக்கணம் வேறொன்றும் தோன்றவில்லை. இருவரும் பின்வேலிக் கதியால்களை நீக்கிக்கொண்டு தபாற்கந்தோர் ஒழுங்கைக்குள் ஓடினர். மூச்சிரைத்தது. நாலா திசையிலும் மேலும் பல ஷெல்கள் விழுந்து வெடிக்கவும் இன்னும் வேகம் பிடித்தனர். ஒழுங்கையில் மிதத்திக்கொண்டிருந்த கல்லொன்று ஆனந்தரங்கரின் காலை மோதிப் பெருவிரல் நிகத்தை இரண்டாகக் கிழித்தது! வேதனை தாளமாட்டாமல் விரலைப் பொத்தியபடி அமர்ந்துவிட்டார். இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்ததைப் பார்த்துப் பதைத்த சாந்தம்மாள் தன் சேலைத் தலைப்பை கிழித்து விரலைச் சுற்றிக் கட்டுப்போட்டுவிட்டார். தொடர்ந்தும் காலைக் கெந்தியபடியே நடந்து பிரதான வீதிக்கு வந்தால்....................... இருபத்தைந்து திருவிழாக் கூட்டம் ஒன்றாக அணிவகுத்தது போல யாரும் தம் வாழ்வில் காணாதபடி ஜனக்கூட்டம் சாரிசாரியாகச் சென்றுகொண்டிருந்தது. புத்தூர் சந்தியால் ஜனத்திரளுடன் சேர்ந்து திரும்பிச் சாவகச்சேரி வீதியில்..............................

ஒரு அரை மைல் நடந்திருப்பார்கள்................... றோட்டில் ஒரு இடத்தில் ஆடுகள் பலியிட்ட இடம்போல இரத்தம் ஓடி உறைந்து கிடக்கிறது. வேலியோரமாக தொடையளவில் அறுபட்ட மனிதனின் காலொன்று தனியாகக் கிடந்தது. மேலும் பல மனித அவயவங்களும் மாமிசத் துண்டங்களும் வீதியில் அங்குமிங்கும் சிதறிக் கிடக்க வேறோரிடத்தில் தனியான சிறு குவியலாகவும் மாமிசம் கொஞ்சம் குவிந்து கிடக்கிறது. எல்லா மாமிசமும் ஷெல்லின் பகுதிகள் பட்டுக் கறுப்பாய் வேகியிருந்தன! அவர்களைத் தாக்கிய ஷெல்களின் கூறுகள் எவ்வளவு உஷ்ணமானவையாய் இருந்திருக்கவேண்டும்?

இவைகளைப் பார்த்து மயங்;கி விழப்போன சாந்தம்மாளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் ஆனந்தரங்காச்சாரியார். அவளுக்குத் தெளிக்கக்கூட ஒரு கோப்பை தண்ணீர் எவரிடமும் இல்லாதிருந்தது. முன்னே போய்க்கொண்டிருந்த மக்கள் திரள் மீது ஷெல் விழுந்து வெடித்ததாக சொன்னார்கள். சிதறிப் போனவர் எவரென்றோ எத்தனை பேரென்றோ யாருக்கும் தெரியவில்லை! இந்த அனர்த்தத்தையே பார்த்துக்கொண்டிருந்தால் மேலும் ஷெல்கள் அங்கே விழலாம்.

ஜனக்கூட்டம் வேகமாக நடக்க ஆரம்பித்தது.

மக்கள் கூட்டம் கடகங்களுடனும், சு10ட்கேஸ்களுடனும், சுருட்டிய பாய்கள், அலுமினியப் பாத்திரங்களுடன், நடக்கமுடியாத முதியோரையும் நோயாளரையும் வண்டிகளில் ஏற்றித் தள்ளிக்கொண்டும் அந்திரானை வெளியை அண்மிக்கவும் பத்துப் பதினைந்து ஹெலிக்கொப்டர்கள் இராட்சதக் கழுகுகளெனப் படபடத்துப் பதிந்து வானில் வட்டமிட்டன. ஜனங்கள் “ ஐயோ.............. அழிவான்கள்.............. சுடப்போறாங்கள்................! ” என்று அலறியபடி வயல் வெளியூடாகவும், தரவை வெளியாலும் தறிகெட்டு நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

தாம் பிறந்த மண்ணிலேயே ஏதிலிகளாய் நொந்து வெளியேறும் அப்பாவி மக்களிடத்தில் மரண பயத்தை உண்டாக்கி மகிழ வந்த கிரஹாதர்கள் மேலும் சில வட்டங்கள் அடித்துவிட்டுத் திரும்பிப் போயினர்.

சு10ரியன் கன்னப்பொட்டை எரிக்கத் தொடங்கினான். எல்லோருக்கும் தாகம் எடுத்தது. சின்னக் குழந்தைகளும், சிறுவர்களும் தண்ணீர் கேட்டு அழுதனர். வீரவாணி அம்மன் கோவில் கிணத்தில் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தண்ணீரை அள்ளிக் குடித்துப் பார்த்தால் ஓங்களிக்கக்கூடிய அளவுக்கு உப்புக் கரித்தது!

குழந்தைகளைச் சமாதானம் பண்ணிக்கொண்டே மேலும் நாலு மைல்கள் நடந்து வந்த மக்கள் மட்டுவில் கண்ணகை அம்மன் கோவிலை அடைந்ததும் மக்கள் கேணிப்படிகளில் தடதடவென இறங்கிப் பாசிகளை விலக்கிவிட்டுத் தண்ணீரை மொண்டு மொண்டு குடித்தனர்.

நடமாடமுடியாத முதியவர்களையும், நோயாளிகளையும் கோயில் பிரகாரத்திலும் மேற்கு மடத்தின் திண்ணைகளிலும் கிடத்தினர். இவ்வளவு தூரத்தையும் நடந்தே வந்ததால் ஆனந்தரங்காச்சாரியரின் விரலில் இருந்து ஏராளம் இரத்தம் வெளியேறியிருந்தது. அவருக்குத் தலைலைச் சுற்றியது. மடத் திண்ணையில் சாய்ந்ததுதான்................ அயர்ந்து தூங்கிவிட்டார்.

சாந்தம்மாள் ‘அடையாள அட்டைகளையும், வீட்டினுள் இருந்த இருநூற்றுச் சொச்ச ரூபாய் பணத்தையுமாவது எடுத்து வந்திருக்கலாமே’ என்று அரற்றிக்கொண்டிருந்தார். இந்த அம்மன் சந்நிதானத்திலும் பல விக்கிரகங்களும், வாகனங்களும் ஆசாரியாரின் கைவண்ணத்தில் உருவானவைதான். கண்ணகை அம்மன் கோவில் முகாமையாளரைத் தவிர மட்டுவில், சாவகச்சேரியில் அவர்களுக்கு அவ்வளவு பரிச்சயம் வாய்ந்தவர்களோ உறவினர்களோ இல்லை. கோவிலைச் சுற்றியும் பிரகாரத்திலும் குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் எத்தனை பேர் அவருக்கு வேண்டியவர்களாகவும், நண்பர்களாகவும், உறவினர்களாகவுமிருப்பார்கள். யாருக்கென்றுதான் அவர் இப்போ உதவக்கூடும்?
‘யாருக்கும் போய் தொந்தரவு கொடுக்கப்படாது.............. யாருக்கும் சங்கடம் ஏற்படுத்தவுங்கூடாது........’ என்று நினைத்தவர்கள் அவரைப்போய்ப்பார்க்கவேயில்லை!

மாலை மூன்று மணியானதும் மெல்ல ஆசாரியருக்கு விழிப்பு வரமுதலே கால் வலியும், பசியும் விழித்துக்கொண்டன. மீண்டும் சு10ழலின் அவலமும் அசௌகரியங்களும் கௌவ்வ மனதில் அந்தகாரம் சு10ழ்ந்துகொண்டது. இவைகள் எவையையும் உணராத நிலை தூக்கம். மரணத்தைப் போலும் தூக்கம். மரணித்துவிட்டால் நல்லது போலிருந்தது. தன்னை நம்பியிருக்கும் சாந்தம்மாள் எங்கே போவாள்? ஓரு பிள்ளையிருந்தாலாவது அது கவனிக்கும் என்று கண்ணை மூடிவிடலாம்.
மனிதனால் எதனைத்தான் சாதிக்க முடிகிறது . . . . ? வாழ்ந்தது போதும் இனி இறப்போம் என நினைத்தபோதுதான் இறக்கமுடிகிறதா? பட்டுக்கம்பளம் விரித்ததைப் போல, சிலசமயங்களில் சரிவில் இறங்குவதைப் போல, பின் ஏறுவதைப் போன்ற சிரமமாக, கல்லும், பெரியகொத்துக்கட்டிகளும் கொண்டு கிடப்பதான கொழுவி இழுக்கும் முட்களும் புதர்களும் கொண்டு வேதனை தருவதாக, அபூர்வமாக தென்றலும் பரிமளமும் வீசுவதாக . . . . . யாரோ ஒருவன் தன் இ}ஷ்டப்படி போட்டுத் தரும் பாட்டையில்தான் நடக்கிறோம் என்று பட்டது அவருக்கு. சதுரம் தானாக ஓயும் வரையில் வாழ்வைத் தவிர அவருக்கு வேறு எதுவும் செய்யமுடியும் போல் தெரியவில்லை!

ஏதிலிகளுக்கு உதவும் தன்னார்வக் குழுக்கள் சில எங்கிருந்தோ சமைத்த உணவுகளாய் பொட்டலங்களில் கொண்டு வந்து மக்களுக்குப் பரிமாறினர். இருவருக்குமே உணவின் மணம் நாசியைத் தொட்டதும் குடலைப் பிடுங்குவதைப் போல அகோரமாய் பசித்தது. ஆசாரியாரோ வெளியிடங்களில் சாப்பிட்டுப் பழக்கமில்லாதவர். கௌரி தீட்சை பெற்றவர். ரொம்பவும் ஆச்சார அனுட்டானங்களைக் கவனிப்பவர். ஆசாரத்தைக் கடைப்பிடிக்காத உறவினர் வீடுகளிலேயே கை நனைக்க மறுப்பவர் . . . . மனைவியின் முகத்தைப் பார்த்தார். அது வாடிய பஷன் பழத்தின் தோலைப்போல சுருங்கியிருந்தது. அவரும் புருஷனைப் பார்த்து உள்@ரப் பயத்துடன் ‘சாப்பிடுவோமா’ என்று ஜாடையாகக் கேட்டார்.

“சந்தியா வந்தனம் வந்தனம் செய்யலாமா . . . . ? ”

அவரும் மெல்ல இறங்கி வந்திருப்பதை உய்த்தவர்,

“காலுடைந்து கிடக்கு என்ன மசிராண்டிச் சந்தியாவந்தனம் . . . . ? ” என்று எரிந்துவிழுந்தார்.

வாழ்வே ஒரு தாம்புக் கயிற்றில் தொங்கும் போது, ஆசாரமும் அனுட்டானமும் எதுவரையில் சாத்தியம்? உணவுப் பொட்டலங்களை வாங்கிச் சாப்பிட்டனர். அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு எந்த உத்தரவாதமுமில்லை. மேற்கொண்டு எந்தத் திசையில் நடப்பதென்றுந் தெரியவில்லை. அவருடைய மூன்றுமாதக் கடுமுழைப்பில் சிருஷ்டிக்கப்பட்டுக் கையுடைந்துபோன தேவி கண்முன் வந்து வந்து மறைந்தாள். மீண்டுமொருமுறை மெல்லக் கண்ணயர்ந்து உறக்கமோ இல்லை விழிப்போ என்று கூறமுடியாத நிலையில், அவருக்குத் தான் விளைந்து குலுங்கும் ஒரு வயல் நடுவே நிற்பதைப் போல் இருந்தது. மெதுவாகக் காற்று வீசவும் நெற்கதிர்கள் அலை அலையாகக் தாழ்ந்தும் உயர்ந்தும் சந்தத்துடன் விளையாடின. பின் நிஜத்திற்கு மீண்டதும் சிறிது நேர மௌனத்தின் பின் மனைவியைக் கேட்டார்:

“வவுனிக்குளத்திற்குப் போவமேப்பா. . . . . ? ”

வவுனிக்குளம் என்றதும் சாந்தம்மாளுக்குப் பெருமூச்செறிந்தது. ஒரு காலம் அங்கே அவர்களுக்கு அரசின் குடியேற்றத் திட்டத்தில் வழங்கிய 5 ஏக்கர் காணி நீர்ப்பாசன வசதியுடன் இருந்தது. சிறப்பாக மழை பெய்து குளம் நிரம்பியிருக்க வேணும் இரண்டு போகமும் விதைக்கலாம். போகத்திற்கு 200 புசல் நெல் விளையும். எழுபதுகளின் ஆரம்பத்தில் இரண்டு மூன்று வருடங்கள் பருவ மழை தவறி போகங்கள் பொய்த்துவிட ஏற்பட்ட விரக்தியில் அவ்வூர் வாசியான நாகுமணி என்பவனுக்கு வாய்த்த விலைக்கு விற்றுவிட்டு ஊரைப்பார்த்து வந்துவிட்டார்.

“எமக்கொரு விடிவு வரும் வரையில் ஒரு குடில் போட்டுக்கொண்டு பிழைச்சிருக்க நாகமணி அப்பிடியொரு அரை ஏக்கர் காணி தன்னும் தரமாட்டானோ.............. ? ” அவர் நம்பிக்கையுடன் கேட்கவும் சாந்தம்மாளுக்கு அதைவிட வேறு மார்க்கம் ஏதும் தோன்றவில்லை. சம்மதித்தார்.

எழுந்து மெல்லக் கெந்தியபடி ஆசாரியார் நடக்கத் தொடங்கவும் சீதையெனச் சாந்தம்மாளும் பின் தொடர்ந்தார். மாலைக் கருக்கலில் சாவகச்சேரியை அடைந்தால் அந்நகர் திருவிழாக் கூட்டமொன்றில் ‘பவர்கட்’ ஏற்பட்டது போல் மக்களும் சந்தடியுமாய், ஆனால் இருளில் மூழ்கிப் போயிருந்தது. டிறிபேர்க் கல்லூரி வளவு, பஸ் நிலையம், சந்தைக் கட்டிடங்கள், நீதிமன்ற வளவு, எதிரில் இருந்த தேவாலயம், புகைவண்டி நிலையம் எங்குமே மக்கள் மக்கள் மக்கள்...............! பெரிய தேனீக்கூட்டில் தேனீக்கள் இயங்குவது போல் மக்கள் எல்லாத் திசையிலும் சாரியாகவும்;, தனியனாகவும் இயங்கிக்கொண்டிருந்தனர்.

செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவரை அடையாளங்கண்டு விரல் காயத்தைக் காட்டி முறையிட்டபோது, அவர் இன்னுமொருவரை முதலுதவிப் பெட்டியுடன் கூட்டி வந்து காயத்தைக் கழுவி மருந்திட்டுக் கட்டிவிட்டார். நீதிமன்ற வளவின் காரை பெயர்ந்த திண்ணையில் ஒரு சிறிய இடம் கிடைத்தது. போட்டுப் படுக்க ஒரு சணல் சாக்குக் கூடக் கிடையாதபடிக்கு ஒரே நாளில் வாழ்வு பறித்தெடுக்கப்பட்டு பஞ்சைப் பராரிகளாக்கப்பட்டதை நினைத்துச் சிரிக்கவோ அழவோ முடியாமல் அவர் மனது விச்ராந்தியாக மிதந்து கொண்டிருந்தது.

அதிகாலையில் சு10ரியோதயத்திற்கு முன்னமே எழுந்து கிளாலியை நோக்கி நடக்கத் தொடங்கிய சனக்கூட்டத்துடன் இவர்களும் சேர்ந்துகொண்டு மெல்ல மெல்ல நடந்தார்கள். கிளாலியை வந்தடைய மாலையானது. அங்கும் ஏதிலி அகதிகளுக்கு உதவுவோர் , மற்றும் பல தன்னார்வத்தொண்டர்கள் அங்கு வந்து சேர்ந்த மக்களுக்கு கஞ்சி வார்த்தனர். களைப்பிலும் பசியில் புறப்பட இருந்த உயிர்கள் இழுத்து மீண்டும் கட்டப்பட்டன. இரண்டு நாட்கள் காத்துக் கிடந்த உயிர் பிழைத்து கிளாலிக்கடலைக் கடந்து ஆலடிக்கு வந்தனர். கால் தூக்கிவைத்து நடக்க முடியாதபடிக்கு உபாதை தந்தது.

இரண்டு சைக்கிள் இளைஞர்கள் அவர்களை காரியரில் இருத்தி கிளிநொச்சியில் கொண்டு வந்துவிடுவதாகவும் அறுநூறு ரூபாய்கள் தரும்படியும் பேரம் பேசினர். கடைசியாக ஐநூறு ரூபாய்க்கு அரை மனதுடன் சம்மதித்தனர். கிளிநொச்சி வந்ததும் (சைக்கிள் இளைஞர்களிடம் தெரிவித்தபடியே) சாந்தம்மாளின் காதுத் தோடுகளை விற்பதற்காக ஒவ்வொரு இடமாக அலைந்தனர். யாரிடமும் அதை வாங்குவதற்குப் பணமில்லை. சிலர் அறாவிலை கேட்டனர். களைத்துப் போன இளைஞர்களில் ஒருவன் கேட்டான்:

“பெரியவரே . . . . இந்தத் தோடு என்ன நிறையிருக்குமென்றீர்? ”

“முக்கால் பவுணுக்கு மேலிருக்குப்பா . . . . திருடன் கையில் கொடுத்தாலும் இரண்டாயிரம் ரூபாய் தருவானே . . . . ”

“சரி இப்ப என்னதான் விலை வேணுமென்றீர் . . . . ? ”

“ இப்போதைக்கு ஐநூறு கழிச்சுத்தான் கொடுத்தாலும் பரவாயில்லை . . . ”

“ இன்னும் நமக்கு உங்களோட அலையேலாது. ஏங்கள் பிழைப்புக் கெட்டுப் போகும் . . . அதனாலை ஒரு தோட்டைத் தாங்கோ . . . . போய்க்கொண்டேயிருக்கிறம் . . . . ”

இளைஞர்கள் சென்று மறைந்துவிட்டார்கள்!

சைக்கிளில் இருந்து நெடுந்தூரம் வந்தது கால் ‘விண்’ ‘விண்’ணென்று வலித்தது. முதலில் ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். அங்கும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் நம்பர் எடுத்துக்கொண்டு மரநிழலிலும், தாவாரங்கள் வழியேயும் காத்துக் கிடந்தார்கள். இரண்டோ மூன்று டாக்டர்கள்தான் அவ்வளவு பேரையும் கவனித்தார்கள். மதியம் திரும்பி மூன்று மணியாகியும் இவர்கள் முறை வரவில்லை. கால் வலி தாங்கமுடியாதிருக்கவே வேலியில் இருந்து பிடுங்கப்பட்டது போலத் தெரிந்த பாதிக்கம்பிக் கட்டை ஒன்றை நிலத்தில் போட்டு அதில் தனது காயம் பட்ட வலது காலைச் சற்றே உயரமாக வைத்துக் கொண்டு இருந்தார். வலி சற்றுக் குறைவதைப் போல இருந்தது.

சரியான சாப்பாடும் உறக்கமும் இல்லாது இவ்வளவு தூரமும் கால் நடந்த களைப்பால் வெட்டி வெய்யிலில் போட்ட பூசனிச்செடியைப் போல துவண்டு போயிருந்த சாந்தம்மாள்................. சிவந்த அந்த மனிதன் நாலைந்து நாள் வெயிலில் வாடி வதங்கி மழிக்காத கன்னங்களுடன் பரிதாபகரமாய் கால் வலியால் அவதியுறுவது கண்டு வழிந்த தன் கண்ணீரை ஆனந்தரங்க ஆச்சாரியார் காணாதபடிக்கு இரகசியமாகத் துடைத்துக் கொண்டார்.
ஆசாரியார் ஏன் அம்மரக்கட்டையைக் காலுக்கு உயரமாக வைத்திருக்கிறார் என்பதை உணராத, சட்டை ஒன்றுமே போட்டிராத ஒரு ஏழெட்டுமாதச் சிசுவை மார்போடு இடுக்கிக் கொண்டிருந்த ஒரு ஏழ்மைப் பெண் “ஐயா . . . ஐயா . . . அந்தக் கட்டையைத் தாறீங்களா . . . . ஒரு வேளை பொங்கிப்பேன் ” என்று யாசித்தாள்.

அவரின் காலைப் பரிசோதித்த டாக்டர், கிழிந்து போயிருந்த நகங்களை கொறட்டால் பற்றியபடி “பெரியவர் விறைப்பூசியில்லை கொஞ்சம் தாங்கிக் கொள்ளுங்கோ ” என்றபடி பிடுங்கிவிட்டார்.
“ஆஆஆஆ . . . . ” என்று அலறியபடி மயங்கியே போய்விட்டார் ஆசாரியார்.
சற்றுத் தெளிவு வந்து கண்முன்னே வெண்பஞ்சுகள் பறந்துகொண்டிருந்தபோது “ஆஸ்பத்திரியில் இடமேயில்லை . . . . நீங்கள் வெளியில்தான் அட்ஜஸ்ட் பண்ணித் தங்கிக்கொள்ள வேணும் . . . . ” என்று டாக்டர் சொல்வது ஆழக்கிணற்றிலிருந்து வரும் குரல்போலக்கேட்டது.

அவர்க ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் வரவும், வழியில் யாரோ ஒரு பெண் மீதமிருந்த அவர்களின் தனித் தோட்டைத் எண்ணுhறு ரூபாய்க்குக் கேட்டாள்.

“சரி . . . . கொடுத்திடு” என்று சைகையால் காட்டினார் ஆனந்தரங்கர். அப்பணத்தில் ஒரு சட்டியும், பானையும், கொஞ்சம் அரிசியும் வாங்கினர். இப்போது விறகு தேடவேண்டியதாயிற்று. விறகு வாங்கப் போன சாந்தம்மாள், கூடவே கொஞ்சம் வெங்காயமும் வெண்டைக்காயும், பிஞ்சு மிளகாயும், உப்பும் வாங்கி வந்தார். வீதியோரமாகக் கல்லு வைத்து அடுப்பு மூட்டிச் சாதம் பொங்கிவிட்டு வெங்காயத்துடன் வெண்டிக்காய் மிளகாய், உப்பு, நீர்விட்டு அவித்துச் சாப்பிட்டார்கள்.

ஒரு மாட்டுவண்டிக்காரரிடம் அவர் வைக்கோல் அடைய வைத்திருந்த இரண்டு சாக்குகளையும் விலை கொடுத்து வாங்கினார்கள். அவர்கள் சமைத்த இடத்திற்குப் பக்கமாக இருந்த வீரை மரத்தடியில் இரவு படுக்கலாமென எண்ணியிருந்தனர். சாப்பாடு முடித்து கொண்டு சாக்கையும் கொண்டு அம்மரத்தடிக்குப் போனபோது மலையகத்தவர்கள் போலும் அங்கே இரண்டொரு பிள்ளைகளுடனான வேறொரு குடும்பம் அவ்விடத்தைக் கூட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தது.
அதுதான் அவர்களது வாடிக்கையான பள்ளிகொள்ளுமிடம் போலும்!
இவர்கள் அங்கே தயங்கி நிற்கவும் அவன் அழைத்தான். “ஐயா வாங்க . . . . இங்கை இதில தூங்கிக்கலாம் . . . . நமக்குத்தான் இதெல்லாம் பழகிப்போன வாழ்க்கை . . . . இடம் . . . . புதிசா வர்ற விருந்தாளிங்களை உபசரிக்க வேணாமோ . . . . . ? ”


ஆசாரியாருக்கு வெட்கமாயிருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். இன்னும் பலர் கையில் கிடுகுகளையும், உரப்பைகளையும் வைத்துக்கொண்டு வாகனப் போக்குவரத்து அற்ற வீதியிலே இரவைக் கழிக்க ஆயத்தமாவதைக் கண்டார். ஒரு காலம் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் தம்மால் தாழ்த்திவைக்கப்பட்ட ஏழைக் குடியானவர்களுக்கு அளித்த ஆசனங்கள்தான் கிடுகும், சாக்கும்!

மலையகத்திற்குக் கூலிவேலை செய்து பிழைக்க வந்த, இழித்துப் பழிக்கப்பட்ட ஒரு அன்பன் வெறுங் கட்டாந்தரையைப் பங்குபோடவே - என்ன வெள்ளை மாளிகை விருந்துக்கு உபசரிப்பதைப் போலல்லவா உபசரிக்கிறான்.

தயங்கித் தயங்கி அவர்கள் மரத்தடிக்குச் செல்லவும், அவன் பெண்டாட்டி சொன்னாள், “ தோ............. இந்த ஐயாதான் அப்போதெ இந்த வெறகு கட்டையைத்
தந்தது............... ” அவள் கண்களில் இன்னும் நன்றி மின்னிட்டது.

மரத்தடிச் சந்தோசம் சில மணிகள்தான் நீடித்தது. யாரா மழை வேண்டித் தவமிருந்தது போலும்.............. சாமமாகவும் மழை கொட்டத் தொடங்கியது. மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். ஆசாரியாரும் சாந்தம்மாளும் ஆஸ்பத்திரி வளவினுள் நுழைந்தனர். கட்டுப்படுத்த முடியாதபடி ஆஸ்பத்திரியின் எல்லா அறையினுள்ளும் ஜனங்கள்! ‘தூங்க இடம் வேண்டாம். கால் காயம் நனைந்துவிடாதபடி வைத்துக்கொள்ள ஒரு இடமிருந்தால் போதும்’ என்றிருந்தது.
“இலங்கையிலும், இந்தியாவிலும்;, ஆசியாவிலும், ஏன் முழு உலகத்திலுமே மழைக்கு வெயிலுக்கு ஒதுங்க இடமில்லாத எத்தனை பாவிகள் இருப்பார்கள்?” என ஆனந்தரங்காச்சாரியார் எண்ணிப் பார்த்தார். ‘கொஞ்ச நாட்களாகவே தனக்கு ஏற்படும் அனுபவங்களும், அதைத் தொடர்ந்து வரும் புதிய சிந்தனைகளும்.................’

அவருக்குச் சிரிப்பு வந்தது.

இத்தகு ரம்யமான பொழுதுகளுடன் நுளம்புக் கடியோடு ஜோராகப் பொழுதைக் கழித்துக்கொண்டு மூன்றாம் நாளும் ஆஸ்பத்திரிக்குப் போய் காவலிருந்து காயத்திற்கு மருந்து கட்டிக்கொண்டு வருகையில் யாரோ ‘ கிளிநொச்சி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு டிராக்டர் வவுனிக்குளம் - துணுக்காய் புறப்படவிருப்பதாகவும் ஆளுக்கு 250 ரூபாய் வசு10லிப்பதாகவும் ’ பேசிக்கொண்டதை அறிந்து இருவரும் போய் அதில் இடம் பிடித்துக் கொண்டனர். 15 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்போ, தார் போடுதலோ இல்லாமல் குன்றுங் குழியுமாக இருந்த பாதை தூக்கித் தூக்கிப் போட்டது. டிராக்டர் வளைந்தும், மடங்கியும், சேறை வாரிப் பெரிய டயரினால் பின்னால் தெளித்துக் கொண்டும் ஓடிக்கொண்டிருந்தது.
குடியேற்றத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை ஒரு குடும்பத்தின் அங்கத்தினருள்ளும், இரத்த உறவுடைய சகோதரங்களுக்கும் கையளிக்க முடியுமேயன்றி - வெளியார் எவரிடமிருந்து வாங்கவோ விற்கவோ முடியாதென்று இலங்கைக் குடியேற்றக்காணிச் சட்ட விதிகளில் ஒரு ஷரத்து உண்டு. இவர்களது காணியை வாங்கமுதலே இது நாகமணிக்கும் தெரியும். காணிப்பதிவு விடயமாகக் காணிப்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போது காணிப்பதிவாளர் சொன்னார் “உனது நிலைமை எனக்குத் தெரியுது . . . . நீ ஆனந்தரங்காச்சாரியரின் பிறந்த மாவட்ட உபபிரிவான புத்தூருக்குப் போய் அவர்களின் கிராம சேவகரிடம் நீ ஆனந்தரங்காச்சாரியாரின் இரத்த உறவினன்தானென்று ஒரு சத்தியக் கடதாசி பெற்று வந்தால்தான் என்னால் மேற்கொண்டு எதுவும் செய்துதரமுடியும். ” நாகமணி விழுந்தடித்துக் கொண்டு புத்தூர் கிராமசேவையாளர் துரைசிங்கத்திடம் ஓடினான். நாகமணியின் விண்ணப்பத்தை முழுவதும் கேட்ட கிராம சேவையாளர் அமைதியாகவே சொன்னார்.

“நீர் ஆனந்தரங்க ஆச்சாரியாரின் உறவினரல்ல என்பது நான் மனசார அறிந்த விஷயம் . . . . என் மனசாட்சிக்கு விரோதமாக ஒரு சத்தியக் கடதாசி என்னால் தரமுடியாது! யாராவது காசு வேண்டிக்கொண்டு அப்படிச் செய்துதரக்கூடிய கிராம சேவையாளர் யாரும் மாற்றலாகி புத்தூருக்கு வருவினம்தானே . . . . ? அப்போது நீர் உமது காணியை மாற்றிக்கொள்ளலாம். நீர் அவசரப்படத்தேவையில்லை. ஆசாரியர் ஆனந்தரங்கரை எனக்குப் பலகாலமாய் தெரியும் . . . . மிச்சம் நேர்மையான மனிதன் . . . . அவர் என்றைக்குமே உம்மிடம் வந்து எனது காணியைத் திருப்பித் தா . . . என்று நிற்கப் போவதில்லை! ”

இருவருக்கும் டிராக்டர் குலுக்கியடித்ததில் பொருத்துப் பொருத்தாகத் தேகம் நோ எடுத்தது. மாலையாகவும் டிராக்டர் மல்லாவிச் சந்தியில் வந்து நின்றது. அவர்களுக்கு இன்னும் இரண்டு மைல்கள் உள்ளே யோகபுரத்திற்குப் போகவேண்டும்.

பழைய நண்பர்கள், பழகியவர்கள், தெரிந்தவர்கள் என்று ஒரு சனமுமே அவர்களுக்குக் கண்ணில் படவில்லை. இளம் தலைமுறையினருக்கோ அவர்களை யாரென்றே தெரியவில்லை. இங்கும் அகதிகள்தான் நீக்கமற நிறைந்திருந்தார்கள். மற்றப்படி இருபது வருடத்திற்கு முன்பிருந்தது போலவே இன்னுமே கிடுகாலே வேய்ந்த ஏழெட்டுக் கடைகள்தான் இருந்தன.
நாகமணிக்கும் குழந்தைகள் இருக்குமோ இல்லையோ, ஒரு விசுக்கோத்துப் பெட்டி வாங்கிக்கொண்டு போகக் கூட இயலாதபடி அவர்களிடம் பணமெல்லாம் தீர்ந்துவிட்டிருந்தது. மெல்ல நடக்கத் தொடங்கினர். சில அகதிகள் மரநிழல்களில் அங்கத்தைய காடுகளிலும் வயல்வெளிகளிலும் கிடைக்கக்கூடிய கொவ்வை, முசுட்டை, சுண்டைக்காய், முளைக்கீரை, பனங்கீரை, புதினா, அகத்தியிலை என்பவற்றில் கறி சமைத்துக்கொண்டிருந்தனர். ஆசாரியாருக்கு சில மர நிழல்களில் இளைப்பாறுகின்றபோது மற்ற அகதிகளிடம் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேசவேண்டும் போல் இருந்தது. ‘நானே பரதேசி . . . இதில் இவர்களை விசாரித்துத்தான் என்னாகப் போகிறது ’ என்று மேலே நடந்தார்.


ஆனந்தரங்காச்சாரியாருக்கு எப்போதும் தன் கலைத்துவத்தின் மீதும் சிருஷ்டியாற்றல் மீதும் அளவிடமுடியாத வித்துவச் செருக்கு இருந்தது.

கலைத்துவம் செறியாத எந்தப் படைப்பையும் அவர் ஆராதித்தது கிடையாது!

எவனொருவனிடம் கலை ரசனையில்லையோ. . . . . அவனால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதென்பது அவர் நம்பிய தத்துவம்!

அவர் கலைக்கூடத்தில் சாதாரண மேசை, கதிரை போன்ற பொருட்களைச் செய்விக்க வந்தோரிடம்,

“தம்பி . . . இது பட்டுக்குஞ்சம், விளக்குமாற்றின் வேலை பார்க்காதென்றோ, அம்மி கொத்திறதுக்குச் சிற்பி எத்தகையனே? ”என்றோ சொல்லி அனுப்பிவிடுவார்.
இன்று, ‘சு10ரியர், சந்திரர், பந்துக்கள், சபையோர், அக்னி சாட்சியாக இறுதிவரையிலும் ஏழு முழம் புடவையும், ஆகாரமும் தந்து வெயிலிலிருந்தும், குளிர், பனி, மழையிலிருந்தும் காப்பேன்’ என்று உறுதியளித்துக் கைப்பிடித்தவளின் பசியைப் போக்க முடியாமல்............... கிருஹஸ்த தர்மத்தையே கடைப்பிடிக்கமுடியாத நிலை வந்து விடுமோ என எண்ணுகையில் முதன் முதலாக வாழ்;கை பற்றியும், அது காட்டும் கோரப்பற்களைக் கண்டும் பயந்தார்!

“நாகமணி அரை ஏக்கர் நிலம் எமக்குக் குத்தகைக்காவது தருவான். அதில் ஒரு குடில் சமைத்துக் கொண்டு, ஒரு ஏர் செய்ய வேண்டும். ஓரிணை மாட்டைக் கூலிக்கேனும் பிடித்து இந்த ஈரம் மாற முதலே உழுதுவிட வேண்டும். கொஞ்சம் எள்ளு, கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் மரவள்ளி, கொஞ்சம் நிலக்கடலை அங்கே போடவேண்டும், சாந்தம் வேணுமென்றால் வாய்க்கால் கரையோரமாகப் பயத்தம் விதைகளையும் பூசணி விதைகளையும் ஊன்றட்டுமே! ”

மெல்ல நடந்து வந்து நாகமணியின் காணி முனைக்கு வந்தபோது, அவருக்குக் கண்ணன் மாளிகையைக் கண்ட குசேலரின் பரவசம் பிறந்தது. பொழுது நன்கு மறைந்துவிட்டிருந்தது. அந்தியின் கருக்கலில் மேற்கு வானம் சிவப்பாகவும், மன்னார்க் கடற்காற்று துரத்தி வந்த சில மழை மேகங்களையும் கொண்டிருந்தது. பதிவாகச் சில கூழைக் கடாக்களும், நாரைகளும் வவுனிக்குளம் நோக்கிப் பறந்துகொண்டிருந்தன.

படலையில் போய் நின்று ‘பவ்’ யமாக அழைத்தார்.

“தம்பி . . . . நாகமணி! ”

“யாரது? ” என்றபடி வந்த நாகமணிக்கு இவர்களைப் பார்த்ததும் முகம் இறுகிப் போனது. ஒரு சம்பிரதாயத்திற்காவது “வாங்கோ” என்று சொல்ல மறந்து மலைத்துப் போய் நின்றான்.

“கெட்டுப் போனவன் கிழக்கே போ என்பார்கள்................. நான் கொஞ்சம் தெற்காக வந்துவிட்டேன் ” என்றார் ஆச்சாரியார் புன்னகையுடன்.

எப்படியும் உள்ளே அழைப்பான் என்ற நம்பிக்கையில் உள்ளே பார்த்தனர். அவரே வைத்து விலாட்டு, அம்பலவி, செம்பட்டான் எல்லாம் பெருவிருட்சங்களாக வளர்ந்தும் கனிந்தும் நின்றன. வேலியோரம் நாட்டிய முருங்கை மரங்கள் சடைத்தும் ஆயிரக்கணக்கில் காய்த்தும் பறிக்கப்படாத காய்கள் முற்றிவெடித்துச் சிதறியுமிருந்தன.

நடுவளவில் இன்னுமொரு கிணறு வெட்டிக்கட்டியிருந்தான்.

நாகமணி தொண்டையைச் செருமிவிட்டு வேறொரு திசையில் பார்த்துக்கொண்டு வேகமாகப் பேசினான்.

“ஆசாரியார் வயதில பெரியவர் நீங்கள். என்னைக் குறைவிளங்கப்படாது.............. இந்தக் காணிப் போமிற்று இன்னும் என் பெயருக்கு மாற்றப்படவில்லையென்ற விஷயம் உங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்களிப்ப உங்கடையூரை ஆமி பிடிச்சுப்போட்டானென்று வந்திருக்கிறியள்............. வந்த ஆமி திரும்பிப் போறதென்றது இன்டைக்கோ, நாளைக்கோ, அடுத்த வருஷமோ இல்லை ஒருநாளுமில்லையோ ஆரும் அறுதியிட்டுக்கூறேலாது.................. நானும் உங்கடை நிலைமையைப் பார்த்து ஒரு பக்கமாயிருங்கோ என்று சொல்லிவிட....................... நாளடைவில எந்த மனிசருக்கும் மனது மாறிறது சகஜம்தானே.................... போமிற்றை வைச்சிருக்கிற நீங்கள் போய் இயக்கத்தில நான் இந்த ஆண்டிப் பயலைக் காணியைக் கவனிக்கச் சொல்லியிருத்தின்னான்..................... இப்ப எழும்பிறானில்லை என்றொரு வழக்கைக் கொடுக்க...................... நான் வெளியேறிற நிலை வரக்கூடாது பாருங்கோ............... ! ”

“சீ............... அப்படியொரு அயோக்கியனென்றா இந்த ஆனந்தரங்கனை நினைத்துக்கொண்டிருக்கிறாய்................ அற்ப மானிடா! ” என்று கேட்கவேணும் போல் இருந்தது. வலிந்து அவர் மௌனம் காத்தார்.

“இரண்டு லட்சம் பெறக்கூடிய காணியை பதினையாயிரத்தை எறிஞ்சு அமுக்கின கொள்ளைக்காரனெல்லே நீ................! ”

ஆவேசப்பட்ட சாந்தம்மாளை அடக்கினார்.

“ஏய்............. சாந்தம்! அப்படியெல்லாம் நாம பேசக்கூடாது, விலை தலை எல்லாம் முடிஞ்சுபோன கதை. தன் காணியை நாம மீண்டும் பிடித்து விடுவோமோ என்ற பயம் அந்த மனுஷனுக்கு இருக்கும் போது, மேலும் நாம தர்க்கித்து, அதனால் மேலும் அவர் மனக்கிலேசத்தை வளர்க்கப்படாது............... அது நமக்கு நன்மையும் தராது............... தர்மமுமில்லை ! ”

மெல்ல நடந்து அவர்களின் பக்கத்துக் காணிக்காரரும், பழைய தோஸ்துமான நடராசாவின் படலையில் போய் நின்று கூப்பிட்டார்கள்.

“நடராசா . . . தம்பி . . . நடராசா! ”

பதினெட்டு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் வெளியில் வந்தான்.

“தம்பி நீர் நடராசாவின் மகனோ................. ராசா ஐயா வீட்டில நிக்கிறாரே? ”

“ஐயாதானே போனமாதம் போட்டார்! ”

“எங்கை ராசா? ”

மேலே வானத்தைக் காட்டினான்.

இருவருக்கும் மேலொரு மின்னல் இறங்கிய அதிர்ச்சி!

“ஏனப்பு........... என்ன நடந்தது..............? ஒரு காய்ச்சல் தடுமல் என்று படுத்தறியாத மனுஷனாச்சே! ”

“கொஞ்சக்காலமாய் அவருக்கு மெல்லிய டயபிட்டீஸ் பிரச்சினையிருந்தது.................... ஒவ்வொரு நாளும் ஊசி போடுவிக்க வேணும்................ இப்பத்தான் ஆஸ்பத்திரியளில மருந்து மாயங்களில்லையெண்டது தெரியுமே................... ஒரு நாள் தலையைச் சுத்துதென்று படுத்தார். அடுத்தநாள் போயிட்டார்.................. ”

“நீங்கள் யாரென்று.................? ”

“ஐயாவுக்கு எங்களைத் தெரியும்!”

ஏக காலத்தில் இருவரிடமும் நீண்ட பெருமூச்சுக்கள் எழுந்தன.

இப்போது தம்மை அகதியாய் மட்டுமல்ல அனாதைகளாயும் உணர்ந்தனர். கால் போன திசையில் நடக்கத் தொடங்கினார்கள்.

அவர்களுக்கென்றொரு குடில் கிடைக்காமலா போகும்?


கணையாழி - 10.04.1996.
-----------------------------------------















Keine Kommentare: