Dienstag, November 23, 2004

பகையே ஆயினும்...............

பொ.கருணாகரமூர்த்தி

ந்த வீட்டுக்கு ஆறுமாசத்துக்கு முன்னர் குடிவந்திருந்தோம். வரும் போதே எதிர்வீட்டுத் துருக்கிக்காரன் மாடிப்படிகளில் பெரிய பலகை ஒன்றை வைத்து இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தான். தரையெங்கும் திட்டுதிட்டாக இரத்தமும், இறைச்சியும், எலும்புத் துகள்களும் பறந்திருந்தன.
“ஏன் உள்ள வைச்சுத்தான் வெட்டிறதுக்கென்ன?”என்றேன்.
“சுவர் பழுதாகிவிடாதா.......?” என்று பதில் கேள்வி போட்டான்.
“எல்லாருமே படியில வைச்சுத்தான் இறைச்சி வெட்டுவாங்களோ இங்கே........?”என்றேன்.
அவன் ஒரு கருடப்பார்வை பார்க்க....... மனைவி சொன்னாள்: “ அவனோட என்னத்துக்கு வீண் பேச்சு........ துஷ்டனைக் கண்டால் தூரவிலகென்றிருக்கு....... இந்த வீடு எமக்குத்தோதுப்படாது....... வேற வீடு பார்த்துப்போயிடுவம்....” தளபாடங்களை ஏற்றி இறக்கின என் தேக நோ எடுபடவே இன்னும் மாதமாகும் போல இருந்தது, இந்த வீடு எடுக்கப் பட்ட மாய்ச்சல் ஒன்றும் அவள் அறியாததல்ல.இருந்தும் ஏதோ நூறுமார்கிற்கு டசின் வீடு கிடைப்பதான பாவனையில் பேசினாள்............. “முடிஞ்ச வரைக்கும் சமாளிச்சுப்பார்ப்பம்........ அறவே ஏலாமப்போனால் பிறகு பார்ப்பம்.....” “ம்ம்ம்ம்ம்ம்.......எல்லாம் உங்களுக்கு பிறகு பார்ப்பந்தான்......”
கழுத்தை நொடித்தாள் பெரிய அம்மாமி மாதிரி!

அடுத்த சனிக்கிழமை முழுவதும் சுவரில் எலெக்றிக் டிறில்லரால் தொளைகள் போட்டுக்கொண்டிருந்தான். சத்தம் நாராசமாய் காதைத்தொளைக்கவும் இளையவள் சாம்பவி (ஆறுமாதம்) பயந்து வீல் என்று அலறினாள். இன்றைக்கு வீட்டில் இருக்கமுடியாதென்று தோன்ற......‘கனகாலமாய் எங்களைத் தங்களிடம் விசிட் பண்ணுவதேயில்லை’ என்று குறைப்பட்டுக்கொண்டிருந்த நண்பன் ஒருவனுக்குப் போன்பண்ணினேன். “உனது நெடுங்காலத்தைய குறை இன்று தீர்க்கப்படுகிறது.”
மனைவி ஓடிவந்து ரிசீவருக்கு மறுபுறமிருந்த காதில் கிசுகிசுத்தாள். “சொல்லாமல் கொள்ளாமல் போய் நிக்கப்போறம்...... கறிபுளி இருக்கோவென்றெல்லாம் கேளுங்கோ”
“சாய் கேட்டாலுந்தான்........ இல்லையென்டு ஆரும் சொல்லுவினமே.....எதுக்கும் வழியில இறங்கி மீன் வாங்கிக்கொண்டுபோவம்”. போனோம்.
சனி விடுமுறைநாள் முழுவதாய் நண்பன் குடும்பத்துடன் முடிந்தது.
மறுநாள் ஞாயிறு பிள்ளைகளுக்கு தமிழ்ப்பள்ளிக்கூடம்.
மனைவி கூட்டிப்போய்விடுவார். நான் வீட்டில் தனியே சாம்பவியைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவளோ தூங்க மறுத்து ஈரத்துவாலையைப் பிழிவதைப்போல் உடம்பை முறுக்கிக் காட்டி என்னைப் பயமுறுத்திக் கொண்டிருந்தாள்.
போதாக்குறைக்கு துருக்கிக்காரன் பாக்கியிருந்த தொளைகளைப் போடத்தொடங்கினான். அந்த டிரில்லரோ நிமிடத்திற்கு 500 தடவைகள் அடித்து அடித்து தொளைபோடும் வகையானது.
சைரன் பிடித்தது போல் சத்தம் வரவும் சாம்பவி மீண்டும் பயந்து அலறினாள்! நேரே அவனிடம் போனேன். “உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா......... குழந்தைதூங்கமுடியாமல் அழுகிறது....... நேற்றுப்பூராவும் வீட்டிலேயே இருக்கமுடியாதபடி பண்ணினாய்..... போதாக்குறைக்கு இன்றைக்கு வேறு ஆரம்பித்துவிட்டாய்! ஓய்வுநாளில் அமைதியைக் கெடுக்கக்கூடாதென்று சட்டமிருக்கு......... தெரியாதா உனக்கு? "

“சட்டத்திற்கு எனக்கு இன்றைக்கு மட்டிலுந்தான் இதுகள் பண்ண நேரம் கிடைக்குமென்ற சங்கதி தெரியுமா?”
அதிபுத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பதில்கேள்வி போட்டான். இனி இவனோடு குஷ்தி போடுவதில்தான் வாழ்வின் பெரும்பகுதி கழியப்போகிறது என்று எண்ணிக்கொண்டேன். யார்தான் போன் பண்ணினார்களோ............ சற்று நேரம் கழித்து 2 பொலிஸ்காரர்கள் வந்து அவனை விசாரித்து இரையவேண்டாமென்று எச்சரித்து விட்டுப்போனார்கள்.

பொலீஸ் போனதும் பஸ்ஸர் ஒலித்தது. கண்ணாடியினூடு பார்த்தேன். இறைச்சி வெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு துருக்கி நிற்கிறார்.

என்னிடமும் திரிசூலமொன்று ஒன்றரை மீட்டர் நீளப் பிடியுடன் ( பண்ணைகளில் உருளைக்கிழங்கு கெலிக்கப்பாவிப்பது) கூரிய இலைகளுடன் இருந்தது , அதை எடுத்துக்கதவின் பின்னே தயாராக வைத்துவிட்டு கதவைத்திறந்தேன்.
“பொலிஸிலேயா கொம்பிளெயின் பண்ணிறாய்................பாக்கிஸ்த்தானி.........? இன்னொரு தரம் பண்ணினேயென்றால்.........சொருகிவிடுவேன்....சொருகி..!” என்றுவிட்டுக்கத்தியின் வாதாரையை செளவுரக்கத்தியைப்போல் உள்ளங்கையில் தடவிக்காட்டினான்.

“என்னட்டும் இருக்கடா ஐட்டம்......”

லபக் எனத்திரிசூலத்தை எடுத்தேன். “நீ கத்திசொருகிற ஆளென்றால் நான் உன் குடலையே பிடுங்கி உன் கழுத்திலேயே போட்டுவிடுற டைப்பாக்கும்......” என்றுகொண்டு சூலத்தின் முனையை அவன் வயிற்றில் வைக்கப்போனேன் . மிரண்டுபோனான்.........!

“உன்னை பிறகு கவனிக்கிறமாதிரி கவனிக்கிறன்..........”

“உப்பிடி எத்தனையோ வீரசிங்கங்களைக் கண்டிருக்கிறன் ........ நீ மாறு.........!” தரையில் காலை ஓங்கி உதைத்துவிட்டு வந்தவேகத்திலேயே திரும்பிப்போனான்.
கடைக்குப் போயிருந்த மனைவியிடம் துருக்கி ஆவேசம் பொங்கிக் கெம்பின விஷயம் நான் சொல்லவேயில்லை. சொன்னால் வேற வீடு....... என்று உடனேயே ஆரம்பித்து விடுவாள்!

அடுத்த நாள் மாலை நான் வேலையால் வந்தும் வராததுமாய் மகன் கிரிதரன் ஓடி வந்து சொன்னான்: “இன்றைக்கு ஹாஸன்ட பப்பா ஒரு பெரீய்ய்ய ஆடு வாங்கியாந்தவர்.........!” (துருக்கிதான்).
“என்னடா உளர்றாய்........?” “ஒன்றும் உளறேல்ல.......உம்மை...... வேணுமென்டால் அக்காவையும் கேட்டுப்பாருங்கோ.......... "
அக்கா ஆர்த்தி உடனே ஓடி வந்து தம்பிக்கு சாட்சிக்கு ஆஜரானாள்.

“ஓமப்பா...... உசிர்ர்ர்ர்...... ஆடு......! இவ்வளவு உயரம்.”என்று கையை தரையிலிருந்து இரண்டடி உயரத்தில் பிடித்துக்காட்டினாள்.
“அவை ஆடே வாங்கியிட்டினம்..... நீங்களெனக்கு இன்னும் நாயிக்குட்டி வாங்கித்தரேல்லை யென்னா.......?”தன் நீண்ட நாள் ஆதங்கத்தை முன்னூற்றிமூன்றாவது தடவையாகக் என்னிடம் கொட்டினான்

அன்றிரவு முழுவதும் அவர்கள் வீட்டு பாத்றூம் 'கடாமுடா' என்று குருஷேஷ்திரக் களேபரமாயிருந்தது. மறுநாள் காலை குப்பைக் கொன்ரயினருள் ஆட்டின் மண்டையோடும் , தோலும் , கொம்புகளும் , நகங்களும் கிடந்தன. ஹவுஸ் வார்டனிடம் புகார் செய்தேன.

அவனுமோ “நானும் பல தடவைகள் அவனுக்கு எடுத்துச்சொல்லியாயிற்று...... அழிச்சாட்டியம் பிடிச்சபயல் கேட்கிற மாதிரியில்லை..... துருக்கிக்காரன் ஆட்டை உள்ளுக்குக் கொண்டு வர்றதைக்கண்ட இரண்டு உறுதியான சாட்சிகள் இருந்தால் நாங்கள் பொலிசில முறைப்பாடு கொடுக்கலாம்.........கொடுப்போமா ?"என்றான்.

மனைவி மீண்டும் தொணதொணக்கத் தொடங்கினாள்.
“இனிக் குஷ்திபோடிறதே சீவியமாயிருக்கப்போகுது......... பொலிசும் கையுமாகத்திரியத்தான் இனி உங்களுக்கு நேரம் சரியாயிருக்கும்........பேசாமல் வேற வீடு பாருங்கோப்பா..........நல்ல அயலான் அமையிறதுக்கும் கொடுப்பினை இருக்கவேணும்.......!” பெருமூச்செறிந்தாள்.

துருக்கிக்கும் ஆடு அடிக்கிறது , புல் தரையில் கிறில்மூட்டி இறைச்சி வாட்டிறதையும் தவிர வேறு வேலையேதும் இருப்பதாகத் தெரியவில்லை. சதாகாலமும் வீட்டிலேயே கிடந்தான்.
ஒரு முறை இரவுநடுச்சாமம் தன் வீட்டிலிருந்த அப்புறப்படுத்த வேண்டியிருந்த ஒரு பழைய அலமாரியையும், ஸெற்றியன்றையும் எப்படித்தான் நகர்த்தினானோ, நகர்த்திக்கொண்டு போய் கீழே வீட்டின் பிரதான நுழைவாசல் அருகில் வைத்துவிட்டுப் போய் போர்த்துக்கொண்டு படுத்துவிட்டான்(முறைப்படி முனிசிப்பாலிட்டி லாரியை வரவழைத்து அவர்கள் தரும்தேதியில் அவர்களிடத்திலேயே கையளிக்கவேண்டும், அல்லது அதற்கென்றான இடத்தில் கொண்டுபோய் போடவேண்டும் மீறி அங்கேயிங்கே போட்டால் அபராதம் எல்லாம் உண்டு). மேற்படி கைங்கரியம் பிதாமகருடையதுதான் என்பதைக் கண்டுபிடிக்க ஹவுஸ்வார்ட்டுக்கும் சிரமமிருக்கவில்லை.
விடிந்ததும் விடியாததுமாய் போய் அவனிடம் சத்தம் போட்டான்!அவனோ அவைகள் 'தன்னுடையதேயில்லை.... தான் போடவேயில்லை' என்று சாதித்தான்.
பின்னேரம் முகத்தில் ஆத்திரம் பிரவகிக்க வந்து கதவைத்தட்டினான்.“என்ன...?”

“ஹவுஸ்வார்ட்டிடம் என்னைக் காட்டிக்கொடுத்தது நீதானே......? ஒரு வெளிநாட்டுக்காரனாய் வேண்டாம் ஒரு இஸ்லாமியச்சகோதரனாய் இப்படி நீ செய்யலாமா.......?”

“கொஞ்சம் பொறு..... நீ சொல்றபடிக்கு நான் எதையாவது செய்திருந்தால்..... நீ சொல்வது நியாயம் என்றாகும்...... நான்தான் எதுவுமே செய்யவில்லையே.......!”
“சும்மா புழுகாத....... முந்திப் பொலிஸ{க்கும் போன் பண்ணின ஆளல்லா நீ....!”“உன்னட்ட திட்டு வேண்ட வேண்டியிருக்கிறதும் எந்நேரம் பார்.....! முந்தி நீ எவ்வளவுதான் சத்தம் போட்டபோதும் நான் சகித்துக் கொண்டேன்.... பொலீஸ{க்குப போகவேயில்லை...... இப்பவும் நீ அலமாரியைத்தான் வெளியே போட்டியோ...... ஆட்டுத் தலையைத்தான் போட்டியோ எனக்குக் கவலையில்லை ஹாஜி....!”

என் வார்த்தைகள் எதையுமே நம்பவில்லை என்பதை 'உர்' ரென்ற அவன் உறங்குட்டான் முகம் காட்டியது. “இந்த வீடு நமக்குச் சரிப்பட்டு வராதெண்டு இன்னுமாப்பா உங்களுக்குப்புரியேல்லை.......?” “புரிஞ்சு போச்செண்டுதான் வையுமன்..... இப்ப என்னை என்ன செய்யச்சொல்லுறீர்........?”

“ஆங்ங்........ ஆனந்தி வீட்ல போய்ப் படுக்கச்சொல்றன்.........!”

ஆனந்தி, என் கல்லூரி சகமாணவியருத்தி. என் இலக்கிய சிநேகிதி.
அவ பெயரே இவள் நான் சொல்லித்தெரிந்து கொண்டதுதான்.
பாத்திர அறிமுகம் போக அதற்குமேல் மீதிக்கற்பனைகள், இயக்கம் , தயாரிப்பு எல்லாம் இவளது! எனக்கு ஆத்திரமூட்டவென்று எண்ணும்போதெல்லாம் இவள் ஆனந்தி சஹஸ்ரநாமம் உச்சரிப்பதுண்டு. சமயங்களில் .துருக்கிக்காரனே தேவலை .

எங்களுக்கு வீடு கிடைத்துவிட்டதென்று பார்க்க வந்துவிட்டு “.....பழசுதான் புது வீடென்றில்லை...... கட்டிப் பத்துவருஷமென்டாலும் இருக்கும்...... ஆகப் பெருத்துப்போச்சு............., ஹைசுங் (கணப்புக்கானஎரிபொருள்) காசெல்லே கனக்க வரப்போகுது........., “ “ ஊ-பாணுக்கு(சுரங்கரயில்) இன்னும் கொஞ்சம் கிட்டவெண்டால........... சோக்காயிருக்கும்........ “. என்றெல்லாம் விமர்சனங்களை அள்ளித் தெளிப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் தவறாது மனைவி துருக்கிக்காரன் பண்ணுகிற நட்டணைகளையும் சொல்லிவைக்க அவர்களும் “இதென்ன எங்கட தேசமே......... விரும்பின இடத்தில வீடுகட்டி குடியிருக்க..... எங்கையும் ஒரு நெகரிவ் பொயின்டும் இருக்கத்தானே செய்யும்” என்று சொல்லி உள்@ர மகிழ்ந்தனர்.
துருக்கி இப்பொழுதும் வாசலிலோ, லி·ப்டில் கண்டாலோ வழியில் எதிர்ப்பட நேர்ந்தாலோ, ஒரு Guten Tag (வந்தனம்) சொல்வதோ, அல்லது ஒரு மைக்கிறோ மீட்டராவது புன்னகைப்பதோ கிடையாது. பார்வையை வேறெங்காவது திருப்புவான். எதிராளியைக் கண்டுவிட்ட முள்ளம்பன்றியை மாதிரிச் சிலிர்த்துக்கொள்வான்.
வீட்டின் கொம்பவுண்டினுள் சிறுவர்களுக்கான ஒரு விளையாட்டிடம் உண்டு. ஒரு மணற்குழியும் , சறுக்குச்சாய்வும் அங்குண்டு. எங்கள் பிள்ளைகள் அங்கே எப்போதாவது விளையாடப் போனால் நாங்கள் யாராவது கண்காணித்தபடி இருக்க வேணும் அல்லது அடுத்த பத்தாவது நிமிஷத்துள் ஹாஸன், தலையில் மண்ணை அள்ளிக்கொட்டிக் கொட்டிவிட்டானென்றோ அல்லது பாக்கீர் (அவன் பிள்ளைகள்தான்) நிக்கருக்குள் தண்ணீரை வார்த்துவிட்டானென்றோ திரும்பி வருவார்கள் .சின்னக்குஞ்சுகளென்றாலும் பெரியவர்களையும் மரியாதை பண்ணத்தெரிந்தே வைத்திருந்தார்கள். வழியிலோ , படியிலோ கண்டால் முந்தையரை மறந்துவிடாது நினைவுறுத்தி முகத்தை அஷ்டகோணலாக்கி வலிச்சம் காட்டவோ, முழு நாக்கையும் வெளியே நீட்டி பழிப்புக்காட்டவோ தவறுவதில்லை.மனைவி சொல்லுவாள: “ விரியனின் குட்டி நாகம்....... அதன் குட்டி நட்டுவக்காலி........... ஆரேனும் எங்கட தமிழ்ப்பிள்ளையளாய் இருந்திருக்கோணும் அதிலேயே துவைச்சுக் காயப்போட்டிருப்பன் ..............! “.
“பாவம் அவர்கள்......... குழந்தைகள்! பெரியவர்களே பண்பாட்டு விழுமியங்களை அறியாதவர்களாக இருக்கும்போது குழந்தைகள்தான் என்ன செய்யும்.......?”
“ஐயோ......ஐயோ.........இந்த மனுஷனை வேற வீடு பார்க்கச்சொன்னால்....... விளங்காத மாதிரி என்னென்னவோ எல்லாம் புசத்துதே..........! கோத்திரத்தில ஆருக்கும் இந்தமாதிரி மேற்படியான் பிசகியிருந்திருக்கோ என்று ஆராயாமல் அப்பார் அவசரப்பட்டுக் காலைவிட்டிட்டாரே.......... ஐயோ ஐயோ ஐயோ!” அடித்துக்கொண்டு புலம்புவாள்.
யானையிடமிருந்தும் தப்பித்துவிடலாம்........ நுளம்பிடம் முடியுமோ....?. இவ்வாறு பரிதவித்துக் கொண்டிருக்குங்காலம்............................ஒரு ஞாயிறு காலை தூக்கமும் விழிப்பும் கலந்த மோனநிலையில் பெட் கா.·.பிக்கான காதலுடன், கட்டிலிலிருந்தபடியே குலாம் அலிகானின் கஜல் இசையில் கிறங்கியிருக்கிறேன்..........................

தற்செயலாக முன்னராக எழுந்துவிட்ட கிரிதரனுக்கும் ஆர்த்திக்கும் யார் முதலில் 'கேம் போயை' விளையாடுவது என்பதில் பெரும் போர் மூண்டது. இருவரும் கட்டிலில் கட்டிப்பிடித்துப் புரண்டு இழுபறிப்படுகையில் ஆர்த்தி சட்டெனத் தன் பிடியைச் சற்றே தளர்த்தவும் கிரிதரன் நெற்றியில் இடித்துக்கொள்ள நேர்ந்தது. இதனால் கடுஞ்சினமுற்ற தாய் ஓடிவந்து ஆர்த்தியின் முதுகில் -பொளாச்- என்று சாத்தினாள். சாத்தலில் துடித்துப்போனவள் விசித்துக் கொண்டு போய் தன் அறைக்குள் ஸோலோவாக 'வயோலா' வாசிக்க ஆரம்பித்தாள். கஜலில் துய்க்க முடியாதபடிக்கு ஆர்த்தியின் நீண்ட ஆலாபனை எரிச்சலூட்டிக்கொண்டிருக்கவும்............. பஸ்ஸர் வேறு 'கிர் கிர்' என்கிறது.
'ஆர்த்திக்கண்ணா போய் கதவைத்திறவடா- என்றேன.;
“ங்ங்ங்ங்ங்........ நான் இன்னும் அழுது முடிக்கேல்ல டாடி......!” என்று விட்டு விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள.
இன்று ஞாயிறு கடிதங்கூட வராதே..... யாரயிருக்கும்.......? யோசனையுடன் எழுந்து சாரத்தை இறுக்கிக் கட்டிவிட்டு , ஒரு ஷர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு போய் கதவைத்திறந்தால்..............நான் என்றுமே காணாதபடி 'டிப் டொப்' கோட்சூட் கெட்டப்பில் துருக்கியும் , ஏற்றாற்போல் மெட்டாக உடுத்திய மனைவியும், பிள்ளைகளுமாக ஸ்ரீசோமாஸ்கந்தக்கோலத்தில் எங்கேயோ தொலைப்பயணம் புறப்பட்டவர்கள்போல் காட்சிதந்தனர்! எதுக்கிப்ப இங்க வாறான் கசுமாலம்........... கைமாத்துக் கேட்கப்போறானோ? நான் ஒன்றுமே புரியாதபடிக்கு நெற்றியைச் சுருக்கவும்.....................

"நாங்கள் ஊருக்குப் புறப்படுகிறோம்...... அதுதான் குட் பை சொல்ல வர்றோம்........"என்றபடி கையை நீட்டினான். நீண்ட அவன் கைகளைப் பற்றிக் குலுக்கியபடியே கேட்டேன்:
“என்ன Urlaub (விடுமுறையா)பா..... துருக்கிக்கா......?” என்றேன்.
“keinen Urlaub aber fuer immer!"( விடுமுறைக்கல்ல..... நிரந்தரமாய்......! ) முகம் ஓடிக்கறுக்கிறது.

“ Oh was(என்ன)!!!!-"

Ja....... Kollege எங்கள் அகதி விண்ணப்பம் மூன்றாவது தடவையும் ஜெர்மன் இறுதி நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டு விட்டது.............................இனி அப்பீல் எடுக்கமுடியாது.......... கிளம்புவதைத்தவிர வேறு மார்க்கமேயில்லை.......”. அவன் குரல் உடைந்து கரகரத்தது.
என் கண்முன்னேயே பாரிய பனிமலை ஒன்று தகர்ந்து தண்ணீராய் ஓடும் அவலம். இதயம் இனம்புரியாத வலியில் துவண்டு புரண்டது. அவன் மனைவி “உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால்..........எங்களிடமுள்ள சில பொருட்களை உங்களுக்குத் தரலாமென்று விரும்புகிறோம்......”என்றபடி ஒரு பிளாஸ்டிக்பை ஒன்றை மனைவியிடம் நீட்டினாள். தயங்கி அவள் என்னைப்பார்க்க
"பரவாயில்லை வாங்கும்" என்றுவிட்டு அந்தவாரம் முழுவதையும் ஓட்டுவதற்காக இருந்த ஐம்பது மார்க்கை அவனுக்குக் கொடுக்கலாமா வாங்குவானா என்று சிந்திக்கவும்

“Danke.” (நன்றி)
என்றபடி பையைவாங்கிக்கொண்டு உள்ளே போனவள் வேறொரு நல்லகாரியம் செய்தாள்.
கிரிதரனுக்கு பாடசாலை ஆரம்பிக்கும்போது பாவிப்பதற்கு வாங்கிய புதியசெற் உடுப்பொன்றை இன்னொரு பிளா ஸ்டிக்பையில் வைத்துக் கொண்டுவந்து ஹாஸனிடமும் , ·பிறிட்ஜிலிருந்தவொரு சொக்கலேட்பாரை பாக்கீரிடமும் தந்தாள்.

மீண்டும்"குட் பை" சொல்லியபடி கைலாகு தந்தான், துருக்கியர் பாணியில் என்னைக் கட்டிப்பிடித்து இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டான். எல்லோர் கண்களுமே தளும்பி நின்றன.

பகையேயாயினும் பிரிவு இன்னாததுதான்!

அவர்களை பிரிந்து போவதை புள்ளியாகி கண்மறையும் வரையில் எம்வதியும் அறை ஜன்னலால் எட்டிப்பார்த்துக் கொண்டு நின்றோம்.
பின் மனைவி அவர்கள் தந்துவிட்டுப்போன பையை ஆராய்ந்தாள்.
அடியில் கனதியாக இருப்பது உருளைக்கிழங்கும் வெங்காயமுமென்று ஊகத்திலேயே புரிந்தது. மேலே பிரித்தும் பிரியாமலும் சில மா , சீனிப்பக்கெட்டுக்கள், கொஞ்சம் வாட ஆரம்பித்துவிட்ட காய்கறிகள், சூரியகாந்தி சமையல் எண்ணைய்ப் போத்தல்களின் நடுவே வெள்ளியென பளபளத்து நிறுதிட்டமாய் நீட்டிக்கொண்டு நிற்கிறது அவனது கத்தி!

- அம்மா - ( Paris ) ஆனி. 1997


Montag, November 22, 2004

ஆமோ........ அ.·.தோ சங்கதி!

பொ.கருணாகரமூர்த்தி

டைநடுச் சங்க கவிகளிடையே காமம் அதிகம் கொண்டு விளங்கியவராகக் கருதப்படும் கவிஞர் மொத்தினார்க்குமினியர் ஆவர். இவர் பன்னிய ' புலுணிவிடுதூதெனும் ' காதலருங்காப்பியத்தின் முதல் அத்தியாயாத்தில் வரும் 31வது பனுவல் தற்கால வழக்கில் அச்சிட முடியாத பல வார்த்தைகளைக் கொண்டிருப்பதாகப் பழந்தமிழ் வல்லாளர் கூறுவர்.அல் (இரவு) + கொல் => அல்கொல் என்பதே மருவி அல்குல்லாகியது என்பதை ஆய்ந்து நிறுவியவரும் இவரேயாவர்.
அவர் தம் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான சம்பவமொன்றுண்டு.
கற்றவருக்கான பொதுவிதியாக இப்புலவருக்கும் வருமானமோ மிகக்குறைவு.
அவருக்கு ஊருக்கு வெளியில் போய் விவசாயமோ, வாணிகமோ உடலாலான ஊழியமோ புரிந்து பொருளீட்டிவரும் வல்லபங்களும் கிடையாது. சும்மா வீட்டையும் மனைவியையுமே வளைய வந்துகொண்டிருப்பார்.
ஒரு நாள் புலவர் மனைவிதான் அயலவர் வீடொன்றில் போய் கொஞ்சப் பணம் கடன் வாங்கிக்கொண்டு போய் கடற்கரையில் மீன் வாங்கிவந்து அதை அரிந்து வைத்துவிட்டு அதைச் சமைப்பதற்காக புதுமிளகாயை எடுத்து வந்து வீட்டின் தலை வாசலை ஒட்டியுள்ள திண்ணையில் அமைந்திருந்த அம்மிக்கட்டில் கூட்டு அரைக்கலானார்.
பொழுது போகாத புலவர் மனைவியின் அருகில் போய் காற்பலகை ஒன்றைப்போட்டு அமர்ந்து கொண்டு தன் கவித்துவத்தைப் பற்றியும், தன் கவிதைக்குப் பொருள் சொல்லமுடியாமல் திணறித்தோற்றுப்போன புலவர்களைப் பற்றியும், தான் எந்தெந்த மன்னர்களி;ன் சபைகளிலெல்லாம் போய் கவிதைகள் பாடிப் பரிசுகள் வென்று வந்தேனென்றும் பழங்கதைகளைப் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்க வேறு வகையில்லாத மனைவியோ புலவர்பிரான் கூறியவற்றுக்கு " ஊம் " கொட்டிக்கொண்டிருந்தார். திடீரெனப் புலவருக்குத் நீர்த்துளி ஒன்று தெறித்துத்தன் கண்ணில் விழுந்தாற் போலிருக்கவேஅவர் அலறலானார்:
"ஐயைய்ய............ ஐயைய்ய.......... அடியடியயடியடியடியடி......... பத்தி எரியுதடி பத்தி எரியுதடி என்னிரு கண்களுமே பத்தி எரியுதடி"
" என்னாச்சு உங்களுக்கு......... ஐயோ என்னாச்சு உங்களுக்கு? "மனைவியும் பதறலானார்.
"அனலாய் அழத்துதடி அப்பாலே தெரியாமல்பக்கத்தில் நானிருக்கும் சித்தமேயற்று நீயும் மொத்தினார்க்கு மினியன் மேலே காரப்புதுமிளகாய் சேர்த்தரைத்த செந்நீரை எத்திவிட்ட பாதகத்தி செப்பு இனி இயல்பதாக எப்படி நான் கவிதை செய்வேன்? எப்படி நான் கவிதை செய்வேன்?இன்றெனக்கு அவையிலே பட்டளித்து மன்னன் தரும் பொற்கிளியும் புண்ணாச்சு போ! "
என்று புலம்பித் துடித்தார்.
மனைவியோ " ஐயகோ ஏனிந்த அபாண்டம் சொன்னீர்............. நானெங்கே சுவாமி உங்கள் மேல் நீர் தெளித்தேன்? அது கோழியின் திருவிளையாடல்........... இங்கே எனக்கும் இரண்டொரு துளிகள் பட்டிருக்கு" என்று சொல்லி " கீழே பாருங்கள் " என்று கையைக் காட்டினார்.
வீட்டின் தாழ்வாரத்திலிருந்து வழிந்து ஒரு பழைய மட்பாண்டத்தில் தேங்கியிருந்த மழைநீரை அங்கே சில கோழிகள் குடிப்பதுவும் தலையைச்சிலுப்பி அலகால் பக்கவாட்டில் தெறிப்பதுவுமாக இருந்தன. அப்போது மேலும் சில துளிகள் அவர் மேல் தெறித்தன.
"ஆமோ........... அ·தோ சங்கதி! நானேதோ நீர்தான் மிளகாய்கூட்டுத்தண்ணீர் தொட்டகையைத்தான் என்மேல் உதறினீரோ என்று எண்ணிவிட்டேன்............. அது போகட்டும்............ நீர் விரைவாய் சமையும் " என்றார் புலவர்.




இடை

பொ.கருணாகரமூர்த்தி

அது பெர்லினில் இருபத்துநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் ஒரு றெஸ்ரோறன்ட். கோப்பியில் மட்டும் பதினெட்டு வகைகள். நாம் தேர்ந்தபடி நொடியில் அரைத்து கமகமக்கப்போட்டுத் தருவார்கள். வீதியில் ஐந்று மீட்டருக்கு மிதந்துவரும் கோப்பியின் மணம் ஷேர்ட்டில் பிடித்து ஆளை சும்மா உள்ளே இழுக்கும். அது இருக்கும் வழியாக நானும் வரவேண்டியிருக்கவே மேலே கடந்து போகமுடியாதுள்ளே இழுபட நேர்ந்தது.கிறில் பண்ணிய 'றிப்'பும், தொட்டுக்கொள்ளக் காரமான பாபெகியூ ஸாசும், கோப்பியும் வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
நாலு இளம்பெண்கள் ஏதோ இடை அழகைக்காட்டுவதற்கான ஒருபோட்டியில் பங்குபற்றிவிட்டு நேரே வருபவர்கள் போலொரு கோலத்தில் பேரிடை முழுவதும் தெரிய உடுத்திக்கொண்டு நடக்கையில் முக்கோண ஜட்டிகள் தில்லானா ஆட அட்டகாசமாக உள்ளே நுழைந்தார்கள். கோடை காலம் இளசுகளின் உடைகள் கொஞ்சம் மனதை அலைக்கழிப்பதாகத்தான் இருக்கும். ஆனாலும் இது அநியாயாத்துக்கும் அதிகம். அன்று நான்தான் அதிகம் வதைபடவேணுமென்று நியதியாக்கும், அல்லது அத்தனை காலியிருக்கைகள் இருக்க அவர்கள் ஏன் அமர்வதற்கு என் ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையைத்தான் தேரவேண்டும்?
அந்த நால்வரிலும் மேசையின் ஓரப்பக்கமாக என் பார்வை முழுதாய்ப்படும்படியான இடத்தில் இருந்தவள் அச்சில் வார்த்தெடுத்துப் பொலிஷ் செய்துவைத்தவொரு பதுமையைப்போல இருந்தாள். எந்தவொரு ஜெர்மன் அழகுப்பாரம்பரியத்தின் நீட்சியோ இல்லை ஏதும் இடைக்கலப்பால் விளைந்த அதிசயமோ நோக்குவோரை மூர்ச்சையாக்கவல்லதொரு எழிலைக் கொண்டிருந்தாள்.170செ.மீ உயர தேகத்தில் பெயருக்காவது ஒரு மறுவோ , பருவோ , புள்ளியோ இருக்கவேணுமே? அரையில் நேவி நீலநிறத்தில் ஒன்றரை சாணே இருக்கக்கூடிய ஸ்கேட்டும் , மேலே தலையணை உறை மாதிரி கையோ கழுத்தோ இல்லாத ஒரு மெல்லிய மீள் தகவுள்ள மார்புக்கச்சையும் (ஸ்றெட்ச் டொப்பிற்கு எப்படி நம்தமிழ்!) பற்றியிருக்க மீதிவனப்பு முழுவதும் காற்றாடிக் கொண்டிருக்கிறது. சின்ன வெள்ளிமணி மாட்டியிருந்த தொப்புளில் ஆரம்பித்து மிகமிக ஆழங்களில் பரவிய கற்பனைகளில் என் மனது சுகித்துத்தியங்க அவர்கள் ஓடர் பண்ணிய சாப்பாடுகள் வந்தன. அவர்கள் ரசித்துச் சாப்பிடத் தொடங்கினார்கள்.
நானுந்தான் பார்க்கிறேன் அவள் சாப்பிடக் குனிகையிலாவது வயிற்றில் சின்ன மடிப்புக்கள் விழவேண்டுமே..........ஊகூம்!குற்றவாளிகளுடன் விவாதிக்கவேண்டியதில்லை. அவர்களுக்கு தம் குற்றங்களின் முழுப்பரிமாணங்களும்; தெரிந்தேயிருக்கும்.அவளைப் பார்க்கப் பார்க்கப் பார்க்க என் மனது முழுக்களவாகி வன்மமாக வளர்ந்து நான் முழுத்திருடனாகிவிட்டிருந்தேன்.
ஒரு யௌவனப்பெண் பார்வையில் பட்டவுடன் ஒரு ஆடவனின் மனதில் தூண்டப்படும் மின்னேற்றங்கள் சமிக்கைகளாகி அவை வேண்டிய ஹோமோன்களைச் சுரக்கவைத்து அவனது இதயத்துடிப்பை அதிகரிக்கப்பண்ணும் வரையிலான தாக்கங்கள் பற்றியும் அவை கடத்தப்படும் வழி பற்றியும் இடையே சிறிது சிந்திக்கிறேன். மாற்றங்களின் இரசாயனம் புரிகிறது. ஆனால் ஆதியிலிருந்தே ஆண்களைப் பெண்களிடம் பிணைத்து வைத்திருக்கும் அவ்வதிசயச் சமிக்கைகளை இந்தப் பெண்களால் மாத்திரமே உற்பத்தியாக்க முடிவதுதான் விந்தையாக இருக்கிறது. ஆனானப்பட்ட அறிவியல் மேதைகளுக்கே பிடிபடாத விஷயந்தானெனினும் அவர்கள் நிரையில் ஞானும் அதுபற்றிச் சற்றே சிந்தித்து வைத்தேன்.
என்னுள் இத்தனை ஹோமோன்களையும் குதித்தோடச்செய்தொரு தீயை வளர்த்துக்கொண்டிருந்தவள் ஏதோ ஞாபகம் வந்தவள்போல் கடித்த பேகரைப் தட்டில் வைத்துவிட்டு கைப்பையுள்ளிருந்து பேனாவைப் போலிருந்த எதையோ எடுத்தாள். அதன் முனையைத் திருகித்திறந்தாள். என்னைக் காந்திக்கொண்டிருந்த பட்டு இடுப்பில்; நிதானமாகக் குத்தி மருந்தை உள்ளே செலுத்தினாள். Diabates Melytus type -1` வியாதியின் குணப்படுத்தமுடியாத கட்டத்துக்கு வந்துவிட்டவர்களுக்கே தாமேபோட்டுக் கொள்ளும் இவ்வகை இன்சுலின் ஊசியைக் கொடுத்திருப்பார்கள்.இப்பொழுது என்மேல் ஒரு நயாகராவே கொட்டியது, என்னுள் ஓங்கிய தீயின் நீண்ட கங்குகள் ஒடுங்கிஇல்லாமற்போயின.
இவைகள் எதையுமே அறியாமல் தன் பேகரைச் சாப்பிடத்தொடங்கினாள் அவள்.
30.08.2004 பெர்லின்.

ஆத்தி

பொ.கருணாகரமூர்த்தி

அந்த
மரத்தை ஆத்தி என்று அவ்வூரில் சொன்னார்கள். எமக்கு வவுனிக்குள நீர்ப்பாசன நிலக்குடியேற்றத்திட்டத்தின் மூலம் யோகபுரத்தில் கிடைத்த காணியில் அரசே கட்டித்தந்த சிறிய வீட்டு முன்றலில் நின்றது. நெடிதுயர்ந்த பெரிய விருட்ஷமென்று சொல்லமுடியாது. தெருவிலிருந்து நோக்கையில் வீட்டை மறைத்துக்கொண்டு நிற்கப் போதுமானது. சின்னத்தம்பிப்புலவர் வீட்டுவாசலில் நின்றிருந்த

பொன்பூச்சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின் பிரபைவீசு புகழ் நல்லுர்ரான் வில்லவரா யன்கனகவாசலிடைக் கொன்றை மரம்.
மாதிரிக்கு யாருக்கும் எமது வீட்டை அடையாளங்காட்டிக் குறிப்புச்சொல்லி விடுவதற்கும் உதவியாய் நின்றது அம்மரம்.


அனேகமாக காடுகளை வெட்டும்போது ஒரு காணியின் வீதிப்பக்க எல்ல¨யிலோ , இரண்டு காணிகளுக்கிடையில் அமையக்கூடிய எல்லை நிரையிலோ வரும் மரங்களைத் தறிக்காது விட்டுவைப்பது வழக்கம்.
அந்தக் காணி காடாக இருந்தபோது அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டிய நல்ல மனிதர்;களுக்கு என்னதான் தோன்றியதோ வீட்டுக்குத் தெற்காக நின்ற அந்த மரத்தையும் வளவின் வடகிழக்கு மூலையில் ஒரு கொண்டல் மரத்தையும் விட்டு வைத்துவிட்டார்கள்.
கொண்டலின் கிளை பூராவும் தங்கமஞ்சளாகப் பூத்துத்தொங்குகையில் ஒரு அழகுதான். 'கொண்டல் வண்ணன்' என்று சிவனை அழைத்ததுவும் ரம்யமானதொரு கற்பனைதான். நன்கு முற்றிய கொண்டல் பழத்தை உடைத்தால் உள்ளே சொக்கிளேற்றுகள் போலும் சிறிய சிறிய வில்லைகள் அடுக்கில் காணப்படும். அதன் தித்திப்போ விபரிக்கமுடியாது. ஆனாலும் சாப்பிடமுடியாது. அன்னமுன்னா பழம் மாதிரித் திகட்டி வயிற்றைப்புரட்டும் ஒரு வகை இனிப்பு.
இந்த ஆத்திமரத்தின் பூ மெல்லிய றோசாவை விரும்பிய கத்தரி நிறத்திலிருக்கும், பெரிய அழகென்று கொண்டாடமுடியாது. அவரைக்காயைப்போல் மெலிதாக புளியங்காய்போல் வளைந்து நுனியில் விரியும் சிறிய ஒலிபெருக்கியைக்கொண்டு தலைகீழாகத் தொங்கும். அவரைக்காயைப் போலவே சற்று வைரமாக இருக்கும் அதன் காயைப் பிடுங்கி வெற்றிலைபோல் வாயிலிட்டுச் சப்பிக் குதப்பிவிட்டுத் துப்புவோம். ஆத்தியின் இலையை ஆடுமாடுகளும் விரும்பித் தின்னுகின்றன, இந்தமரம் வேறு தொன் கணக்கில் காய்த்துத்தள்ளுகிறதே, இதன் காயிலிருந்து முழுமனிதகுலத்துக்கும் பயன்படவல்லமாதிரி ஒரு உணவை ஏன் தயாரிக்கமுடியாதென்று அப்போதே எனக்குள்ளிருந்த விஞ்ஞானிக்கு சிந்தனைகள் முகைத்ததுண்டு.
ஆத்தி மரத்தின் புறப்பட்டை தடிமனான தக்கையைக் கொண்டிருக்கும். அத்துடன் அக்கோறைமரம் வாகாக திட்டுகளையும் மொக்குகளையும் தன்னுடலெங்கும் கொண்டிருந்ததால் பதின்மூன்று வயதுச் சிறுவனாக இருந்த நான் அதில் அடிக்கடி ஏறி இறங்குவேன். அம்மரத்தின் கிளைவேர்கள் ஆலமரத்தைப்போல் தரைக்கு வெளியாகவே ஆரம்பித்து நாலு திசையிலும் நீண்டுசென்று தரையுள் புகுந்தன.
அன்றும் மாலையில் அவ்வேர்களினிடுக்கில் சிறு ஓடக் கவிவைப்போலும் உட்கவிந்திருக்கும் சார்மனையில் ஒரு சாக்கை விரித்துப் படுத்துக்கொண்டு வானத்தைப்பார்க்கிறேன். உலகத்திலுள்ள நிறங்களையெல்லாம் கரைத்து யாரோ அங்கே ஊற்றிவிட்டதைப் போலிருக்கிறது.
அதன் கீழாக சில வெண்முகில்கள் ஒன்றையன்று துரத்தியபடி சென்றுகொண்டிருக்கின்றன. லேசாக வீசிக்கொண்டிருக்கும் காற்று குளிரைக் கொண்டிருக்கிறது. வவுனிக்குளத்திலிருந்தோ பாலியாற்றிலிருந்தோ கொக்குகளும், நாரைகளும், நீர்க்காகங்களும், கூழைக்கடாக்களும் மன்னார்க் கடலை நோக்கிப் பறந்துகொண்டிருக்கின்றன.
" மரத்துக்க பாம்பைப்பூச்சியிருந்தாலும் எழும்பி வீட்டுக்குள்ள வா." என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்.
எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் அனைவருமே " இந்த ஆத்தி பாருங்கோ கோறைமரம்........... பாம்பைப் பூச்சியைக் குடிவரும், தறித்துவிடுங்கோ " என்று தவறாது அறிவுரை சொன்னார்கள்.அம்மரம் முற்றத்தில் ஏராளமாய் சருகுகளையும் உலர்ந்த காய்களையும் கொட்டிப் பெருக்குவதற்கு சிரமம் பண்ணியதேயல்லாமல் அதன் ஆயுளில் எமக்குப் வேறொரு நட்டணையும் பண்ணி யாமறியோம்.
நான் ஊருக்குப் போயிருந்த ஒரு நாளிரவு அம்மா வைத்துக்கொண்டு படுத்திருந்த தலையணைக்குக் கீழே ஏதோவொன்று நழுக்கு பிழுக்கென்று நழுவிச்சாம். எழுந்து விளக்கை ஏற்றிப்பார்த்தால் கருநாகமொன்று 'எஸ்' ஸாக வளைந்து படுத்திருக்குதாம்.அம்மா தும்புக்கட்டையை எடுத்து அடிக்க ஓங்கவும் அது தன் ஓட்டமட்டிக் நிக்கோனை எடுத்துப் படமெடுக்குதாம்.
அம்மாவின் மனத்திலூறிய ஏராளம் ஜீவோபகாரத்துடன் உள்ள மெயின், உப , கடவுளர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தோன்றி பாம்பை அடிப்பதினின்றும் தடுத்தாட்கொண்டுவிட்டனர். அந்தப் பயங்கரமான அனுபவத்தின் பின்னர் ஒரு நாள் அம்மாவும் "ஆத்தியைத் தறிக்கத்தான் வேணும்" என்றார்.
அப்பாவுக்கு லோகாயத விஷயங்களில் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் எதுவும் கிடையாது. அவர் பெரும்பான்மையரின் கருத்தை எதிர்த்து மல்லுக்கட்டவெல்லாம் போகமாட்டார்.ஆத்தியைத் தறிப்பது என்று முடிவெடுத்தான பின்னரும் யாரும் அதை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டாதிருக்கவே நான் ஒரு நாள் எங்கள் கோடா¢யை எடுத்து வேருள்ள பக்கமாக போட்டுப்பார்த்தேன். அக்கோடரியும் கள்ளி, மொந்தன், பெருங்கதலி இனங்களைத் தறிக்க மட்டுமே தயாரிக்கப்பட்டதாயிருக்கவேணும் , அதன் வெட்டு வாதாரை சுருண்டு திரும்பி என்னைப் பரிதாபமாகப் பார்த்தது. மரம் தறித்தல் அப்போதைய பதின்மூன்று வயதுப் பையனுக்கான வேலையாகவும் படவில்லை, அப்போதைக்கு விட்டுவிட்டேன்.
அது 1963ம் ஆண்டு, ஒரு சித்திரை மாதம். காலபோக அறுவடைக்குப் பின்னால் யோகபுரத்தில் எல்லோர் வீடுகளுள்ளும் நெல்லுச்சாக்குகள் நிறைந்திருந்த நேரம். சித்திரை சிறுமாரி என்றே சொல்வார்கள். இது மாறாக ஒருவாரமாகத் தொடர்ந்து வன்னிப் பிரதேசமெங்கும் அடைமழையாகப் பெய்துகொண்டிருந்தது.
அப்போது அது எட்டுப் பத்து வருஷங்களுக்குள்ளான குடியேற்றத்திட்டந்தான்.இன்று போலவே அன்றும் எங்கும் தார் போடப்படாத பாதைகள் , மழை பெய்தால் டிராக்டரைத் தவிர வேறெந்த வாகனம்தானும் அப்பாதைகளில் செல்லமுடியாது. குறைந்த பட்ஷம் ஒரு டிராக்டர் வைத்துக்கொள்ள வசதி உள்ளவர்கள் மட்டும் வெளியில் வந்து நடமாடித்திரிய ஏனையவர்கள் வீட்டுக்குள்ளே அடைந்து கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு போத்தல் மண்ணெய் வாங்குவதானாற்கூட மூன்று மைல் தொலைவிலுள்ள மல்லாவிக்கோ அன்றேல் ஏழு மைல் தொலைவிலுள்ள வவுனிக்குளக்கட்டுக்குப் போனாலே சாத்தியம். கஞ்சியோ பொங்கலோ ஆக்கிச் சாப்பிட்டுவிட்டு பொழுது சாயவும் ஏதோ ஊரடங்கு அமுலில் இருப்பதைப்போல மக்கள் படுத்துக்கொண்டார்கள்.
சூரியன் தொலைவில் காட்டுக்குள் பதுங்கிவிடவும் வானத்தின் வர்ணங்கள் மெல்ல மெல்ல விடைபெறத்தொடங்கின. அது வானிலை அவதானிப்புகளோ , அவற்றை மக்களிடம் எடுத்துச்சென்று எச்சரிக்கவல்ல ஊடகங்களோ வளர்ச்சி அடையாதிருந்த நேரம். அப்பாவிடம் ஒரு சுருட்டுக்குப் புகையிலைவாங்க வந்த அயலிலுள்ள சின்னத்தம்பிக்கிழவன் நெற்றியைச்; சுருக்கிக்கொண்டு வானத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்: " திக்குகள் நல்லாய்க் காணன்.................ம்ம்ம் , கெட்ட ஊதற்காற்றொன்று தெல்லுமாறிமாறி வீசுதுகாண்.............. புயலொன்று இறங்கலாங்காண்."
அக்குடியேற்றக் கிராமத்தில் யாருக்கும் காய்ச்சல் , குணங்கல் என்று வந்தால் பார்வை பார்த்து, " விடுவிடு சங்கரி........... இறுஇறு சங்கரி........... பொறுபொறு சங்கரி.......... கடுகடு சங்கரி............ நறுநறு சங்கரி "என்று விபூதி மந்திரிச்சுக்கொடுப்பது கிழவன்தான்.
கிழவன் வீட்டுக்குப் போய் ஒரு கால் மணியாகியிராது.
நாலைந்து மழைத்துளிகள் என் முகத்தில் குளிர்ந்தன.
" அட மழை வருகுது உள்ள வா .. .. .." என்று அம்மா மீண்டும் கூவினார். தென் மேற்கில் மின்னித்தெரிய மழை மெல்ல மெல்ல இறங்கத்தொடங்கியது. சற்றைக்கெல்லாம் பலமான காற்றும் வீசத்தொடங்கியது. மழை மெல்ல வலுக்கத் தொடங்கியதும் காற்றும் ஆர்ப்பரித்துப் பலமாக வீசத்தொடங்கியது. கொலனி குடியேற்ற வாசிகளுக்கு ஐம்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் இலவசமாக கட்டித்தந்த இரண்டு அறைகளும் முன்பின்னாக ஆளோடியாக ஒடுங்கிய இரண்டு விறாந்தைகளையுங்கொண்ட சிறுவீடுகள் அவை. அனேகமானோர் வீட்டின் முன்னுக்கும் பின்னுக்கும் அமைந்த விறாந்தைகளில் சாய்வு பத்திகள் இறக்கியிருந்தார்கள். உள் அறைகளில் ஒன்றுக்கு மட்டுமே நிலத்திற்கு சீமெந்து இடப்பட்டுள்ளதால் அனேகமானோருக்கு அதுவே படுக்கை அறை. காற்று வேகம்பிடிக்க ஜன்னல்கள் படபடவென அடிக்கத்தொடங்கின. திறாங்குகள் உடைந்துபோயிருந்த ஜன்னல்களை அவை திறந்து திறந்து அடிக்காதபடிக்கு இழைக்கயிற்றால் வரிந்து கட்டினோம்.முதலில் காற்று கிழக்கு மேற்காக வீசியது. எமது வீட்டின் கிழக்குப் பக்கமாக ஆடுகள் கட்டவும் விறகு சேமித்து வைத்திருக்கவும் போட்டிருந்த ஒத்தாப்பின் கூரை கப்புகளுடன் பிடுங்குப்பட்டு வீசப்பட அங்கே கட்டப்பட்டிருந்த ஆடுகள் பயந்து அலறிக்கொண்டு மேற்கு விறாந்தைக்கு வந்து சேர்ந்தன. அம்மா விறாந்தையிலிருந்த மேசை ஒன்றைச் சரித்துப் போட்டு எரிப்பதற்காக வைத்திருந்த இரண்டு புறவெட்டுப் பலகைகளையும் மேசையுடன் சேர்த்து ஒரு மாதிரி அண்டைகட்டி ஆடுகளை அதற்குள் நிற்பதற்கு வசதி பண்ணிவிட்டார்.ஒரு கணம் காற்று வேகம் குறைவது போலிருந்தது. அடுத்து பத்து நிமிஷத்தில் நான் சும்மா என்பதுபோல் காற்று மீண்டும் ஆர்முடுகித்தன் திசையையும் மாற்றி இப்போது தென்மேற்கிலிருந்து அசுரத்தனமாக வீசியது. அச் சிறுவீடுகள் தனியார் ஒப்பந்தக்காரர்களால் பாலியாற்றுக் குறுமணல் நிறைவீதத்தில் கலந்து அரிந்த கொங்கிறீட் கற்களால் கட்டப்பட்டவை.அணை ஒன்றைத் திறந்துவிட்டதைப்போல வானம் பிரிந்து சாய்கோணத்தில் சாந்து பூசப்படாத அச்சுவர்களில் கொட்டவும் கேட்பானேன், மழைநீர் சுவரூடாக தங்குதடையின்றி நுழைந்து வீட்டுக்குள் பெருகியது.
போதிய கோணிசாக்குகள் இல்லாததால் கடந்தபோக அறுவடையின் நெல்லு ஐம்பது புசல் வரையில் சீமெந்துத்தரை அறையில் தரையில் கொட்டப்பட்டிருந்தது. சுவர் ஊறி உள்ளே வந்த நீரால் நெல்லு நனைவதைத் தவிர்க்க முடியவில்லை. அம்மா துக்கம் தாளாது அழவேதொடங்கிவிட்டார்.
அதற்குள் முன் விட்டு மணி ஆறு பிள்ளைகளுடன் என்னதான் செய்தாளோ அவள் புருஷனும் யாழ்ப்பாணம் போய்விட்டார், பக்கத்து வீட்டு நல்லையர் குடும்பம் என்ன செய்துதுகளோ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார். இரண்டு வீடுகளும் ஒரு நூற்றைம்பது மீட்டர் தள்ளியே இருந்தன. காற்று வீசிய வேகத்தில் வெளியே கால் வைத்தால் உருட்டிச் செல்லப்பட்டுவிடும் அபாயம். அவர்களைப் போய் பார்க்கவும் முடியவில்லை.அதற்குள் அப்பாவும் பூநகரிக்கோ முறிகண்டிக்கோ கரி சுடப்போயிருந்தார்.மன்னார்க்கடலிலிருந்து பிரளயக்கூவலுடன் வீசிய சூறாவளியில் ஆத்தி மரம் தலையைச்சுற்றி அருள் வந்ததுபோல் ஆடியது. அதன் சுழற்சிவேகத்தில் நுனிமரம் சுழன்று சுழன்று தரையை அடித்தது. சற்றைக்குள் ஆத்தி வேருடன் பிடுங்கப்பட்டு காற்றிலே ஒரு துரும்பைப்போலும் பறப்பதைப் பார்ப்போம் என்றிருந்தது. மரம் வீட்டில் வேறு மோதித்தொலைத்தால் என்ன விபரீதம் நடக்குமோவென்று பயமாகவுமிருந்தது.
அத்தனை அமளிதுமளிக்குள்ளும் அம்மா குசினிக்குள் புகுந்து சோற்றுப்பானையையும் , கறிச்சட்டிகளையும் மற்ற அறைக்குள் தூக்கிவந்து காரமான ஆரதக்கறிகள், தயிருடன் கொஞ்சம் சோறு குழைத்து எனக்கு கையில் தந்தாரென்பது ஞாபகம். எல்லோரது அம்மாக்களைப்போலவும் எனது அம்மாவும் ஆரதக்கறிவகைகள் சமைப்பதில் மிகவும் கெட்டிக்காரி. சாப்பாடான பின் சூடாக தேனீர் குடித்தால் இன்னும் தெம்பாக இருக்கும்போலிருந்தது. அடுப்புக்கால்கள் உட்பட குசினி நனைந்து தெப்பலாயிருந்தது.
நான் நனையாத நெல்லை அறையின் மற்றப்பக்கத்திற்கு மண்வெட்டியால் வாரிவிட்டு அதன்மேல் பாயைப்போட்டு படுக்க முயற்சித்தேன்.
அம்மா டிரங்குப்பெட்டியைத் திறந்து தோய்த்து உலர்ந்த தனது நூல்சேலைகள் இரண்டை எடுத்துத் தந்து " நல்லாய் போர்........." என்றார்.
காற்று மீண்டுமொருமுறை தன் திசையை மாற்றவும் தெற்கு விறாந்தையின் ஓடுகள் எடுத்து வீசப்பட்டுத் தரையில் விழுந்து படபடவென நொருங்கும் சப்தம் கேட்டது.
ஜலப்பிரளயம் வந்துவிட்டதாக எண்ணிய அம்மா
"காக்க காக்க கனகவேல் காக்கநோக்க நோக்க நொடியி னோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க........."
என்று கந்தசஷ்டிகவசத்தைப் பாடலானார்.
வடக்கின் குடியேற்றக் கிராமங்களிலெல்லாம் மணிக்கூடுகள் அவ்வளவுக்கு புழக்கத்திலிருக்கவில்லை. நேரம் தெரியவில்லை. "அம்மா இரண்டு மணியிருக்கும்'' என்றார். பளீரென்று ஒரு பெரு மின்னல் தெறித்து வானந்தான் பற்றி எரிந்ததோ உலகமே பளீர்சிவப்பாகியிருக்க நீண்ட நேரத்துக்கு இடி இடித்து எதிரொலித்தது. சற்றுநேரம் எத்திசையில் நோக்கிலும் கண்களில் சிவப்பே தெரிந்தது.காற்று ஒருவித தாளகதியுடன் தன் வேகத்தை ஏற்றியிறக்கிக்கொண்டு 'ஓ.. .. ஓ.. .. .'.வென்று வீசவும் ஆத்திமரம் தன் கேசத்தை வீசிப்பேயாடுவதுபோல் சுழன்றாடுவதைப் பார்க்க படுபயங்கரமாக இருந்தது. மீண்டும் ஒருதரம் வான வாவி தலைகீழாகப் புரண்டு கொட்டவும் பெருவெள்ளம் வீட்டினுள் இதோ நுழைகிறேன் நுழைகிறேன் என்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் கடல்போலவே தெரிந்ததில் பாக்குக்கடல்தான் மன்னாரை மேவியிங்கு வந்துவிட்டதோ என்றிருந்தது. இந்த அவலம் வன்னியில் யோகபுரத்துக்கு மட்டுமேயானதா இல்லை முழு உலகத்துக்குமாவென்றுந் தெரியவில்லை. இனி வீட்டின் சுவர்கள் சரிந்துவிடக் காற்றில் அடிபட்டுவிடுவோமோ? கெடுதியும் அவலமும் விளைவிக்கவென்றே அவதாரம் எடுத்த ஒரு அசுரனைப்போலவும், ஊழிக்காற்றாக வந்து சுழன்றாடிக்கொண்டிருக்கும் புயல் மேலும் என்னவெல்லாம் செய்ப்போகிறது என்று தெரியாததால் நான் உள்ளுரப் பயத்தால் உறைந்துபோயிருந்தேன். அனேகமாக அப்பா இனி எங்களைப் பார்க்கமாட்டார், எனது அடுத்த பிறந்த நாள் இனி வரவேவராது என்று நம்பினேனாயினும் வெகு இயல்பாக இருப்பது போலும் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு புயலை அனுபவிப்பது வாழ்வில் இதுதான் முதன்முறை.காணிநிலம் இல்லாத எளிய மக்களுக்கே குடியேற்றக்காணிகளைப் பங்கீடு செய்வதில் முதலிடம் கொடுப்பார்கள். அப்படிக் கிடைத்த காணியில் குடும்பமாக குடியேறியிருந்து விவசாயம் செய்யாவிட்டால் அக்காணியின் பெர்மிட்டை ரத்துச்செய்துவிடுவோம் என காணிக்காரியாலய அதிகாரிகள் பயமுறுத்தவும், யாழ்ப்பாணக்கல்லூரி ஒன்றில் ஒழுங்காகவே படித்துக்கொண்டிருந்த என்னை கல்லூரி அதிபர் எவ்வளவோ தடுத்தும் கேளாது அப்பா விடுத்துக்கொண்டுவந்து மாணவர்கள் அமர்ந்து படிக்க கதிரை மேசை வசதிகள்கூட இல்லாத யோகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சேர்த்துவிட்டார்.
அங்கு வந்த ஆரம்பத்தில் அப்பா செய்வித்துத்தந்த நாலுசில்லு வண்டியைத் தரதரவென இழுத்துக்கொண்டு திரிவதில் ஏதோ "·பெறாறி ஸ்பைடரில்" உல்லாசிப்பதுபோலும் எனது புலன்கள் அனைத்தும் ஒன்றிச் சுகித்திருந்தன. பின் அவ்வன்னிப்பிரதேசத்தில் அடிக்கடி மிகமலிவாகக் கிடைக்கக்கூடிய மான், மரை, பன்றியிறைச்சிகளில் என் கவனம் திருப்பப்பட்டிருந்ததில் எனது கல்வியின் இழப்பு அவ்வளவாகத் தோற்றவில்¨லை. பின்னர் அப்படித்தான் படிப்புத் தொலைந்து போனாலும் ஒரு டிராக்டரை வாங்கிவைத்துக்கொண்டு அங்கேயே பிழைத்துவிடலாமென்று பாமரத்தனமாக என்னை நானே சமாதானம் பண்ணிக்கொண்டேன்.
வாரவிடுமுறைகளை ஊரில் அனுபவிக்கவேண்டி வெள்ளிக்கிழமை மதியமே யாழ்ப்பாணத்துக்கு பஸ் ஏறிவிடும் ஆசிரியர்களின் கைப்பையையோ, பொதியையோ மல்லாவிச்சந்திக்குச் சுமக்க நேர்கையில் பல தடவைகள் அப்பாவின் தொலைநோக்கில்லாத செயலுக்காக மனம் வருந்தியதுண்டு.
தவணைவிடுமுறைகளின் போது ஊர் செல்லும்போதெல்லாம் பாட்டி "அடுத்த ஆண்டு அவனை இங்கேகொண்டு சேர்த்துவிடுங்கோ நான் பார்த்துக்கொள்றன்" என்பார். எனக்கும் கண்களில் முட்டிக்கொண்டு வந்துவிடும்.
நாளைய நமது இருத்தல் பற்றித்தெரியாதபோது வவுனிக்குளம் வர நேர்ந்தமை எனக்குள் மீண்டும் இப்போது அழுகையைக்கொண்டு வந்தது.
இருந்த அத்தனை சேலைகளால் போர்த்தியபோதும் ஊசிக்குளிரால் உடம்பு வெடவெடத்தது. நான் படுத்திருந்த பாயில் உட்கார்ந்திருந்த அம்மா அதுவரை ஊறாதிருந்த இரண்டு அறைகளையும் பிரிக்கும் ஊடுசுவரின்மீது ஒரு சாக்கினால் போர்த்துக்கொண்டு; ஒருக்களித்துச் சாய்ந்திருந்தார். அவர் வாயில் இன்னும் கந்த சஷ்டிகவசம். 'இவ்வளவு துன்பம் செய்கிற கடவுளை எதற்குத்தான் பாடுகிறாரோ' என்றிருக்கிறது எனக்கு. இவ்வளவு பயங்கரத்துள்ளும் தூக்கம் வேறு வந்துவந்து போய்க்கொண்டிருக்கிறது. எப்போதுதான் அயர்ந்தேனோ, கண்விழித்தபோது காற்றும் மழையும் சற்றுக் குறைந்திருந்தன. அம்மா "இனி புயல் ஓய்ந்துவிடும்" என்றார். மேலும் ஒரு மணி நேரத்தில் காற்றின் வேகம் தணிந்தது ஆனாலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது.நிலம் வெளுத்த பின்னாலும் மழை பெய்துகொண்டிருந்ததால் அயலவர்கள் என்னசெய்கிறார்கள் என்று போய்ப்பார்க்க முடியவில்லை. ஒருவாறாக ஏழு மணிவரையில் மழை ஓய்ந்தது. சூரியனும் வெளியில் வந்து ஊரைப்பார்க்கத் தயங்கிக்கொண்டிருந்தது.சின்னத்தம்பிக்கிழவன் கையில் அவரது கைப்பிடியில் எலிசபெத்மகாராணி எடின்பறோ கோமகன் இணையின் படம் போட்ட, நாற்பதாம் ஆண்டில் கறுப்பாயிருந்த குடையுடன் வந்தார்.
"என்னுடைய குடிலையும் நாம்பனுகளையும் காணேல்லை" என்றவர் "இராசையாவின் பட்டறைக்கொட்டில் கூரைத்தகரங்கள் கிழிக்கப்பட்டுப் பணியாரக்குள கலிங்கில அங்கங்கே விசிறப்பட்டுக்கிடக்காம்" என்றார்.வெள்ளம் வடிய சனங்கள் மெல்ல மெல்ல சகதிக்குள்ளால் வெளியில் நடமாடத்தொடங்கினர். அனேகமானோரின் வீடுகளின் கூரை ஓடுகள் முக்காற் பங்கும் காற்றில் பறந்துவிட்டிருந்தன.ஊர் குருசேஷ்த்திரமாகி பெருமரங்கள் எல்லாமே சாய்ந்திருந்தன. பிடுங்கப்பட்டவை முறிக்கப்பட்டவை ஏதோவொரு ஒழுங்கில் ஒன்று கூட்டப்பட்டு ஆங்காங்கு குவிக்கப்பட்டிருந்தன. முருங்கைகள் வாழைகளின் கதைகள் சொல்ல வேண்டியதில்லை.ஊர் முழுவதற்கும் பயன் தந்துகொண்டிருந்த இராசையா ஆசாரியார் வீட்டு ஜம்புநாவலும், கறிவேம்பும் சாய்ந்திருந்ததைக் கண்டு அவர் தாயார் தலையிலடித்துக்கொண்டு அழுதார். அவர்களிடம் திருத்த வேலைக்கு வந்திருந்த மாட்டுவண்டிகள் அடித்துத் தள்ளப்பட்டுக் கொண்டுபோய் முள்ளுக்கம்பிவேலிக்கு அப்பால் கவிழ்த்துப் போடப்பட்டிருந்தன.எங்குதான் வீசப்பட்டுதோ வளவுக்குள் நின்ற கொண்டல் மரத்தை அங்குரத்துடன் காணவில்லை. வாழைகள் குட்டியும் குலையுமாக முறுக்கித் திருகப்பட்டு நார்களாக்கப்பட்டிருந்தன.கூரைகளோ, பத்திகளோ இறக்கப்படாது தனித்து நின்ற வீடுகள் பலவும் கூரைஓடுகளை முற்றாகவே இழந்திருந்தன.
எமக்கு தெற்கு விறாந்தையில் இரண்டு நிரை (இருபத்தைந்து முப்பது) ஓடுகளைத் தவிர ஆத்திமரம் ஒதுக்கமாய் நின்றிருந்த வடக்குப் பக்கத்து ஓடுகள் அப்பிடியே இருந்தது யோகபுரத்தில் எல்லாருக்கும் படு ஆச்சர்யம்.
'வங்காளவிரிகுடாவில் திடீரென ஏற்பட்ட பவனமணடல அமுக்க மாற்றத்தால்கிளம்பிய புயலே இப்படி வடமேற்காகச் சுழன்று குமரிமாவட்டத்திலும் , வன்னியிலும் கிழக்கு இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் காரணமாம்.'
இப்புயலின்போது இராமேஸ்வரத்தையும் தனுஷ்கோடியையும் இணைக்கும் பாம்பன்பாலம் தகர்ந்துபோனது.இலங்கை - கிழக்கு மாகாணக் கடற்கரையோரத்தில் குடிசை போட்டு வாழ்ந்த பல மீனவக் குடும்பங்கள் உட்பட அங்கே பத்தாயிரம்பேர்கள் வீட்டையும் கூரையையும் இழந்தார்கள்.வவுனிக்குளப் பிரதேச குடியேற்றத்திட்டத்தின் பிதாமகரான அப்போதைய அரசாங்க அதிபர் ஆழ்வார்ப்பிள்ளை நேரில் வந்து சேதங்களைப் பார்வையிட்டார். அவருடன் கூடவந்த அலுவலர்கள்; பட்டாளம் சிறுசிறுகுழுக்களாகப் பிரிந்து எல்லா கொலனி யூனிட்டுகளுக்கும் சென்று ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் ஏற்பட்ட நஷ்டங்களைக் கணக்கெடுத்தார்கள்.
இரண்டு மூன்று நாட்களில் முதல் நிவாரணமாக பல லொறிகளில் ஓடுகளும், மூலை ஓடுகளை வைத்துக்கட்ட சீமெந்தும், கோதுமைமா மூடைகளும் வந்திறங்கின. மாங்குளம் துணுக்காய் கிறவல் வீதியைத் தவிர்த்து யோகபுரம், ஒட்டன்குளம் , கொத்தம்பியாகுளம், துணுக்காய் எப்பகுதியுள்ளுமே லொறிகள் போகமுடியாதாகையால் யோகபுரம் முதலாம் யூனிட் பல நோக்க கூட்டுறவுச் சங்க வளவினுள்ளும், இரண்டாம் யூனிட் நெற்சங்க வளவிலும் , மூன்றாம் யூனிட் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டு மைதானத்திலும் அவை இறக்கப்பட்டு கொலனிவாசிகளுக்கு விநியோகிக்கப்பட மக்கள் மாட்டு வண்டிகளிலும், தலைச்சுமையாகவும் அவற்றை எடுத்துச் சென்றார்கள்.
எமக்கும் நாற்பது ஓடுகள் தந்திருந்தார்கள், அவற்றையரு சாக்கில் போட்டுக்கட்டி சைக்கிளில் இரண்டு நடைகளில் சகதியில் தாண்டிமிதந்து எடுத்து வந்திருந்தேன். புயலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இவ்வுடனடி நிவாரணம் ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.
இவ்வேளை பாலியாற்றங்கரைக்கு மேற்காகவுள்ள பாண்டியன்குளத்தில் காடுவெட்டுவதற்கு வந்த (அப்பாவுக்குத் தெரிந்த) ஒப்பந்தக்காரர் ஒருவர் புயல் அனர்த்தங்களுடன் சற்று ஓய்வுவேண்டிப்போலும் தன் பட்டாலியனுடன் காடுவெட்டும் நீண்டபிடியுடனான கத்திகள், பளபளவென மின்னும் கோடாரிகளெனப் பல ஆயுதங்களை எங்கள் வீட்டில் வைத்துவிட்டு எங்கேயோ போயிருந்தார். அவற்றுள் பளீரென்று வாதாரை மின்னிக்கொண்டிருந்த கூரிய கோடரியைப் பார்த்ததும் மீண்டும் எனக்குள்ளான சைத்தான் உயிர்பெற்றுக் கைகளைப் பரபரக்க வைக்கவும் கோடரியில் ஒன்றை எடுத்துச்சென்று ஆத்தியில் இடுப்பில் போட்டேன். பச்சை வெட்டுச்சிராய்கள் 'ஷ்யுக்... ஷ்யுக்' என்று பறக்கப் பறக்க கோடரி 'சதக்...சதக்'கென்று இறங்குகிறது. ஒரு சுற்று இறங்கியதும் மேற்பட்டையை அடுத்துள்ள உட்பகுதியிலிருந்து பாலும் உதிரமும் கலந்தது போல் திரவம் வடியவும் மனதை ஏதோ பண்ணுகிறது.மீசை கறுக்காதா, கிருதா நெடுக்காதா என்ற ஏக்கங்கள் படிந்திருந்த பருவத்தில் மரத்தைத் தனியாக வெட்டுவதுதென்பது ஒரு வித ' பெரியஆள்த்தனமாகவே' படுகிறது. தொடங்கிய காரியத்தை இடைநிறுத்துவதா? தொடர்ந்து வெட்டினேன். பச்சையும் உயிருமாயிருந்த ஆத்தி காற்றில் 'ஓ' வென்று இரைந்துகொண்டு பாட்டில் சாய்கிறது.
பாட்டத்தில் சாய்ந்த ஆத்தியைப் பார்க்கவும் நெஞ்சில் கழிவிரக்கம் பிறக்கிறது. அதன் இருப்பின் கம்பீரம் இல்லையென்றாகி அவ்விடத்தில் பாழ்வெளி! மனது ஒப்புகின்றதில்லை , பிசைபடுகின்றது. ஜடமோ உயிரோ ஒன்றின் வீழ்ச்சியை பார்க்க நேர்வது அவலம். கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ........? நெஞ்சில் ஒருவகை அவசமும், அந்தகாரம் நிறைகிறது.
உட்பாவாடை அணியாமல் சேலை கட்டுவதற்கோ, பாடி இல்லாமல் ரவிக்கை போடுவதற்காகவோ அம்மாவால் தனியாக ஓரங்கட்டப்பட்டு அடிக்கடி அர்ச்சிக்கப்படும் அயல்வீட்டுத் திலகம்மாமி மரம் சாய்ந்ததும் இதற்காகவே காத்திருந்தவர்போல விரைந்து வந்து தன் ஆடுகளுக்காக இலைகளை ஒடித்துச் சாக்குகளில் அடைந்தார்.
வயலுக்குப் போய் வரம்புகளை வெட்டி வெள்ளத்தைக் கடத்திவிட்டுவந்த சின்னத்தம்பிக்கிழவன் மட்டும் ஆத்தி சாய்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு " சின்னப்பெடியா!" என்றார்." என்னப்பா?" "என்னொரு மடைவேலை செய்துபோட்டாய் காண்.......... திடீரெண்டு என்ன வந்ததுனக்கு?" " இல்லையப்பா அது புயல்ப்போது சுழன்றாடின ஆட்டத்துக்கு முறிஞ்சிருந்துதேயென்றால் வீட்டையரு பக்கம் பெயர்த்துக் கொண்டு போயிருக்கும்........? "
" ஆனால் அது அப்பிடி ஒன்றுஞ்செய்யேல்லையே கிளி........ வீரையென்றால் கிழிஞ்சிருக்கும்...... முதிரையென்றால் முறிஞ்சிருக்கும்...... பாலையென்றால் சரிஞ்சிருக்கும்...... இந்த ஆத்தி நார்மரமாயும் கோறையாய் இருந்ததாலுந்தான் இந்தப்புயலிலே அப்பிடிக் கசங்கியும் பிழைச்சு நிண்டது காண் ................"
"ஆமோ......?"" ஆத்தியின்ரை ஒதுக்கிலதான் உன்ரை வீட்டு ஓடுகள் தப்பினது காண்.........!"பண்ணியது முழுமுட்டாள்த்தனந்தான். சின்னத்தம்பிக்கிழவன் "காண் காண் காண்" எனவும் எனக்குள் துக்கம் அதிகரித்தது.
'அவள் நினைவுகள் என்னால் ஒதுக்கிவிட முடியாதபடி என்னுள் தோன்றித்தோன்றித் துன்பம் செய்கின்றனவே........... என்றோ ஒருநாள் நான் அறியாமல் செய்துவிட்ட ஒரு பாவத்தைப்போல........' என்று ஒரு உருதுக் கவிதையின் வரிகள் வரும். (நன்றி. அப்துல் ர·குமான்)
பச்சைமரத்தின் அருமை புரிந்த நாள்முதலாய் என் நினைவில் தொடர்ந்தும் படர்ந்தும் வரும் அவ் ஆத்திமத்தின் பவிசு இப்போதும் என்னை வருத்தாத நாளேயில்லை.
மூடாப்பு மந்தாரம் குறைந்து சற்றே வெய்யில் மினுங்கவும் மக்கள் தம்மிடம் நனையாதிருந்த தானியங்களுடன், கிழங்கு போன்றவற்றைப் பண்டமாற்றுச்செய்து உணவுப்பிரச்ச¨யைச் சமாளித்துக்கொண்டிருந்தார்கள்.
புயல் அடித்து ஓய்ந்து ஒரு வாரம் ஆகியிராது.
" நட்டாங்கண்டல் , வவுனிக்குளம் , மூன்றுமுறிப்பு, பன்றிவிரிச்சான், இரணைக்குளம் , பனங்காமம், ஆத்திமோட்டை, இலுப்பைக்கடவை, பகுதிகளில் இன்றைக்கு மீண்டும் லேசாய் புயலடிக்கப்போகுதாம்." என்ற செய்தி விதானையார் வீட்டு டிரான்சிஸ்டர் றேடியோவிலிருந்து வவுனிக்குளப்பகுதி முழுவதும் பரவியது.
முன்னரைப்போல பல பயங்கரமாய் இருக்காதெனும்........ மன்னார், கள்ளியடி, வெள்ளாங்குளம் மீனவர்களைக் கடலுக்குப் போகவேண்டாமென்று எச்சரிக்கப் பட்டிருப்பதாவும் சொன்னார்கள்.
சுட்ட கரியை லொறி வியாபாரிகளுக்கு விற்றுவிட்டு எமக்கு என்னாச்சோ ஏதாச்சோவென்ற பரிதவிப்போடு அப்பாவும் வந்துசேர்ந்திருந்தார்.ஊரில் யாருமே ஓடுகளை அதற்குள் வேய்ந்திருக்கவில்லை. எமக்கு இரண்டு நிரை ஓடுகள்தானே கொண்டுவந்தவுடனேயே அப்பா எடுத்து ஒவ்வொன்றாக மேலே தரத்தர நான் வேய்ந்து முடித்துவிட்டேன்.மக்கள் பத்திகளையும் ஒத்தாப்புகளையும் சரிசெய்து தாம் சேகரித்த சொற்ப விறகுகளையும், தானியங்களையும், மழையிலிருந்து காப்பதில் மும்முரமாக இருந்தார்கள்.
மாலையானதும் மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நடுவானத்திலிருந்து தரையைத்தொட வெளிர் நீலத்தில் இறங்கிய நீண்ட மின்னற்கொடிகள் செவ்வூதாவாகி செஞ்சிவப்பாகிப் பொறித்ததில் பர்வதமொன்று பிளந்து உருண்டதுபோலும் அண்டம் உலுக்கப்பட்டு அதன் அதிர்வுகள் வியாபித்து வாழ்ந்தன. மழை மெல்ல மெல்ல வலுத்து நடுநசியில் உக்கிரமாகியது. சூறாவளியும் தன்னை மக்கள் சீக்கிரத்தில் மறந்து விடுதலாகாதென்று பின்னிரவில் மீண்டும் கோதாவுக்கு வந்திறங்கித் தன் வீரப்பிரதாபங்கள் அனைத்தையும் காட்டிச் சுழன்று சுழன்று சமராடியது.
வடக்குத் தெற்காக வீசிக்கொண்டிருந்த சூறாவளி ஒரு தரம் உச்சிவிட்டு தெற்கு வடக்காக சுழன்று பாட்டத்தில் கிடந்த ஆத்தியை உருட்டி வளவின் மூலையில் எங்கோகொண்டுபோய் ஒதுக்க, எங்கள் வீட்டு ஓடுகள் முழுவதும் காற்றுடன் அப்பளமாய் எழுந்து பறக்குந்தட்டுக்களாய் பறந்து முற்றத்தில் 'கலிங் கலிங்' கென விழுந்து நொறுங்கிக்கொண்டிருக்க, வானச்சமுத்திரம் தலைகீழாகப் புரண்டு வீட்டினுள் நேராகப் பிரவகித்தது.
.. .. .. .. .. .. ..
03.02.2001 பெர்லின். (காலம் மே- 2002-- கனடா)