Dienstag, November 29, 2005

பால்வீதி

1.


மாலைச்சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள்.உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும் பொன்மஞ்சளாய் ஜொலித்துக்கொண்டிருந்தது.நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்.எம்பாதையில் மண்குளித்து விளையாடிக்கொண்டிருந்த வால்நெடுத்த கெண்டைக்குருவி ஒன்று எழுந்து பறக்கப்பஞ்சிப்பட்டு எமக்கு முன்னே தத்தித்தத்திச்சென்றது.நாமும் விடாது தொடரவும் கீசி வைதுவிட்டு எழுந்து பின்னோக்கி அரைவட்டமடித்துப் பறந்துபோய் மீண்டும் அதே இடத்தில் மண் குளித்தது.
தொடுவானத்திலிருந்து இன்னும் பெயரிடாத ஆயிரம் வர்ணங்கள் மையம் நோக்கி மெல்ல வந்து சேர்ந்தன. வழமையான நீலம் விடுப்பில் சென்றிருந்தது. குறுக்குமறுக்காக போர்விமானங்கள் கோடிழுத்துச்சென்றது போல் அடிவானத்தில் பல கோலங்கள் உண்டாயின. வெளிர் மின்னற்கொடிகள் சிலதோன்றித் துளிர்த்துதழைத்தோங்கி சடுதியில் மறையவும், நடுவானம் அரிந்து வைத்த கறுத்தக்கொழும்பான் மாம்பழமென செஞ்சிவப்பாகியது. நவீன ஓவியங்கள் போலும் சில கட்டமைப்புக்கள் தோன்றின. அடிவானத்தில் ஒளிரும் நியோன் விளக்குகள் போலும் குண்டுகுண்டாக ஊதாவர்ண எழுத்துக்களாலான தெளிவான கவிதைஒன்று தோன்றி மறைந்தது.பின் இன்னொரு கவிதை..... அது மறைய இன்னொன்று.....அது மறைய இன்னொன்று...... ஒரு கணம் வானமெங்கும் கவிதைகள் இறைந்து கிடந்தன. எதைப்படிப்பது..... எதை விடுவது............?எல்லாமே சிருஷ்டியின் நோக்கமும், பிரபஞ்ச இரகசியங்களும் கூறும் மந்திரக்கவிதைகள். படிக்க முதலே மறைந்து மறைந்து போயின. ஓவியங்களிலிருந்து ஒறேஞ்சிலும், ஆப்பிள்பச்சையிலும்,குருவிச்சம்பழநிறத்திலும், இதழ்களால் ஒளி உமிழும் மலர்கள் மலர்ந்தாடின. வானவீதியில் முண்டாசு கட்டிய மனிதர்கள் மாடுகளை ஓட்டிச்சென்றனர். மலர்கள் எவற்றையும் மாடுகள் மிதத்துச்சேதஞ்செய்யாதிருக்க வேண்டுமென மனது கவலை கொண்டது.
இந்த ஜென்மத்தில் அந்த இடத்திற்கு முன்னெப்போதாவது வந்ததாக ஞாபகம் இல்லை. மலைப்பாங்கான குளிர்வலயத்தில் வளரக்கூடிய பன்னங்கள், நெ·ப்ரலொப்பிஸ், அந்தூரியங்களும்உலர்வலயத்திற்கான மூங்கிற்புற்கள், இலாமிச்சை , அலரி, அன்னமுன்னாச்செடிகளும் மண்டிய புதர்க்காட்டினூடாக அந்தப்பாதை நீண்டு கட்புலஎல்லையில் அடிவானத்தைத் தொடுவது போலத்தோன்றினாலும் அதற்கு அப்பாலும் நீண்டது.
பாதையை ஒட்டி இருமருங்கிலும் செறிந்த தேக்குமரக்காடுகள் இருந்தன. கடந்து செல்லச்செல்ல ஓக், பைன் மரங்களும் அடர்ந்து வானத்தை நோக்கிச் சென்றன. நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். எங்கள் தேகம் முழுவதும் ஹீலியத்தால் நிரப்பப்பட்டதுபோலும் மிக லேசாக இருந்தது. சிறு ஈரத்திற்காக துள்ளியபோது கூட முப்பது மீட்டர் தூரத்திற்கும் அப்பால்போய் விழுந்தோம். கனவும் நனவும்போல இரு அனுபவங்களைத் தொடர்பு படுத்தக்கஷ்டமாக இருந்ததால் நேரத்தை உணரமுடியவில்லை. ஹஷீஷ் புகைத்தமாதிரி நிறையற்று மேகங்கள் போல் அலைந்து திரிந்தோம். ஒருமுறை புகைத்தபோது இதைப்புகைக்கத்தொடங்கி அரைமணியிருக்குமா......... ஒரு மணியிருக்குமா....... அல்ல ஐந்தாறு மணிகளுக்கும் அதிகமாவென அறியமுடியாதிருந்தது.தற்செயலாய் துருத்திய அறிவு கேட்கிறது.... எந்தச்சிகரெட்டாவது மணிக்கணக்கில் புகையுமாடா?சரி..... அப்ப ஒரு பத்து நிமிஷந்தான் இருக்கும. மணி என்பது என்ன..... நிமிஷம் என்பதென்ன...... புரியமுடியாது மீண்டும் குழப்பியது. அனுபவங்களே மாயையோ..........?நாங்கள் நடக்கத்தொடங்கி எவ்வளவு நேரமிருக்கும்........?எவருக்குமே தெரியாது. இதை எண்ண சிரிப்புச்சிரிப்பாய் வந்தது. நான் பாட்டிற்கு இளித்துக்கொண்டிருக்கப்படாது. என் கெளரவம் என்னாகும். பட்டென நிறுத்திக்கொள்கிறேன். அவள் கண்டுகொண்டால் என்னை என்னவென்று நினைப்பாள்?........ என்னவாவது நினைத்துவிட்டுப் போகட்டுமே...... ஏன் நான் யாருக்காகவேனும் வாழ்ந்துகொண்டிருக்கிறேனா.........? இல்லைத்தான்.ஆனாலும் நான் அவள் மதிப்பிலிருந்து சரிந்து போதலாகாது.ஏன்.....? அவள் என்னை நம்பி வருகிறாள்....... என் பிரக்ஞையில், சித்தத்தில், அறிவில், திறமையில் நம்பிக்கை வைத்து........ தனி வழியில்.
அவளைத் தனிவழியே அழைத்துச்செல்லத் துணிந்தது என் பலமா..... பலவீனமா? தெரியவில்லை. கேட்டது "அழகியபெண்" என்றதும்....... கொஞ்சம் பரிவு, கொஞ்சம் காபந்துணர்வு, கொஞ்சம் ஆசை பிறந்ததென்னவோ உண்மைதான்.நவீனபெண்ணியவாதிகள் முதல் இரண்டும் "டூப்" மூன்றாவதுதான் நிஜம் என்பார்கள். ஏன் நான் பொய் சொல்ல வேணும்.........?நிலவில் இருப்பதைப்போல..... ஒரு பெண்ணின் அருகில் இருப்பதும் சுகமே. இவ்வுணர்வுகள் இயல்பூகமாக என் ஜீன்ஸ் வழி வந்தவை.
அப்போ காமம் தோன்றவில்லையா........?தோன்றுவதாவது........ அது எப்போதுதான் இல்லாதிருந்தது.....?ஒவ்வொரு இதயத்துடிப்பிலும்...... ஒவ்வொரு உணர்வின் தெறிப்பிலும்கலந்தேகிடக்கிறதே. காமம் நீங்கிய நான் அசாத்தியம்.அதைச்சொல்லவில்லையே.......? இக்கேள்வியில் உனக்கப்படியில்லை என்கிற பாசாங்கிருக்கு....... இருக்கட்டும். ஒவ்வொரு துளி இரத்தத்திலும்...... தசையிலும் அது உறைந்திருப்பதை உணர்ந்திருந்தும் பலரிடமும் இப்பாசாங்கிருக்கு.
திரும்பிப்பார்க்கிறேன்..........அவள் வந்துகொண்டிருக்கிறாள். ஆரோக்கியமான ஒல்லியான உடல்வாகு இடையில் வைன்கிளாஸை மாதிரி மேலும் ஒடுங்கிப்போகிறது. மெல்லிய ஊதாகலர் பின்னணியில் அடர்கத்தரிப்பூ வர்ணத்தில் சின்னச்சின்னப்பூக்கள் உடலெங்கும் செறிந்த கைத்தறிச்சேலையைக் கச்சிதமாக உடுத்தியிருக்கிறாள்.தனி முத்துப்பதித்த தோடுகள் அழகுபடுத்தும் பெரீய காதுமடல்களைத் தொடரும் கன்னக்கதுப்புக்களில் படர்ந்திருந்த மென்பூஞ்சுரோமங்களிலும், அம்மாலை ஒளியில் மஞ்சள் குளித்தது போலிருந்த அவள் தோற்றத்திலும் ஏராளமாய் பெண்மை வழிகிறது.பெரீய்ய தோற்பையொன்று தோளில் தொங்க முந்தானையின் ஒரு தலைப்பை எடுத்துப்போர்த்தியிருக்கிறாள்.
முதலில் அவள் முகத்தையும் விழிகளைளும் கவனிக்கப்படாது என்பதில் பிடிவாதமாயிருந்தேன். கவனித்தால் அவை ஹரிகேசனாகியஎன்னை விடுத்து எனக்குள்ளே இன்னொருவனுடன் பேசும். அவன் நொடியில் பலஹீனகேசனாகி விடுவான். அவள் விழிக்கோளங்களிருக்கே......... கொக்கயின் பார்ட்டி........ அவை கால்பவைதான் எவ்வகைக் கதிர்கள்? சும்மா பட்டமாத்திரத்தில் சித்தம் தடுமாறிப்போகுதே......கூடாது...... அவைகளை நான் நோக்கவேகூடாது...... நெப்போலியன் சுண்டெலிக்குப் பயப்படும் இந்த இரகசியம் அவள் அறியவேகூடாது.
2.
அவள் என்னை நம்பி வருகிறாள்.தன் உடமைகளைப் பறித்து விடமாட்டேன் என்று நம்புகிறாள். தன்னைப்பறித்து விட மாட்டேன் என்றுநம்புகிறாள்.தன் உயிரைப் பறித்துவிடமாட்டேன் என்றும் நம்புகிறாள்.என்னைத்தொடர்ந்து வருகிறாள்.அவள் என் அருகாக வரட்டும் என்று என் நடையின் வேகத்தைச்சிறிது தளர்த்தினேன்.அருகில் வந்ததும் கேட்டாள்: "உங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வீர்களோ........."
"அவ்வப்போது பேசிப்பேன்..... தர்க்கிப்பேன்...... சண்டையெல்லாங்கூடப்பிடிப்பேன்........ வெளியில தெரியாது........ ஆனால்........ விடயத்தின் உஷ்ணந்தாங்காது போனால் மட்டும் வார்த்தைகள் எப்போதாவது தெறித்து வெளியில் விழுவதுமுண்டு."
" இப்பவும்....ஏதோ விழுந்தாப்போல......"
"இருக்கலாம்..... ஒரு விவாதமொன்று நடந்துகொண்டிருந்தது."
"சுவாரஸ்யமானதாக இருந்தால் நானும் பங்கேற்கலாமா.......... ரொம்ப அந்தரங்கமானது என்றால்........ வேண்டாம்........."
"அந்தரங்கமாவது........ அறிவார்ந்த விஷயமென்றால் எனக்கு எல்லாமே வெளிப்படைதான்....."
"என்னவாம்.......?" (குரலில் கொஞ்சம் கிசுகிசுப்புடன்)
"பெண்களாலதான் உலகமே அழகாகிறதென்கிறேன்...... இல்லை என்கிறது உள்ளேயிருந்து ஒரு முரட்டுக்குரல்......"
" எப்படி......?"
"பெண்கள் பூஞ்செடிகளைப் போல அழகும் வனப்புமாய் இருக்கிறார்கள்....... ஒரு பூஞ்சோலை ஊரின் எழிலைக்கூட்டுவதில்லையா....... அப்படித்தான்."
"ஆண்கள் பார்வையில் எனறிருந்தால்.........சரி"
"அப்போ..... ஆண்களுக்கொரு உலகம்..... பெண்களுக்கொரு உலகமென்று இருக்கவேணும் ........ ஒரு பெண்ணின் அழகை இன்னொரு பெண் ஒத்துக்கொள்ளமாட்டாளா என்ன...........?"
"ஒத்துக்கொள்ள மாட்டாள் என்றில்லை......... ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் அழகுணர்ச்சியில வேறுபாடு உண்டு........ ஆணுக்குப் பெண்ணிடத்தில் கவர்ச்சி ஏற்பட அவமீதான காமந்தான் காரணம்"
"இல்லை... என்றலை..... காமம் என்பது ஒன்றும் விலக்கப்பட்ட சபிக்கப்பட்ட வஸ்த்தோ, உணர்வோ இல்லையே..... இன்னும் சரியாகச சொல்லப்போனால்...... காமந்தான் வாழ்வின் அடிப்படையே என்பேன்....... அனாதியிலிருந்தே பெண்தான் ஆணை ஆகர்ஷிப்பவளாக இருந்திருக்கிறாள்.........."
"பெண் போதைப்பொருள் அல்ல என்ற வாதமிருக்கே.....?"
"இல்லை என்றலை...... பாலை, பழமையை வைச்சு ஒருத்தரை இன்னொருத்தர் ஆளுமை செய்யறது தப்பிலுந்தப்பு....... ஆனால் ஆண் பெண்ணிடையேயான இயல்பான லயிப்பை கேலியாக்குதலோ, ஆகாதென மறுத்தலோ மடமையான குருட்டாம்போக்கே என்பேன்....... நீ இதைத்தான் ரசிக்கலாம்,இதை ரசிக்கவேகூடாது என்று யாருக்கு யாரும் கட்டளையிட முடியாது...... இந்த உரிமை உலகத்தில யாருமே எடுத்துக்கொள்ள முடியாது. ஹோமோஸெக்ஸ¤வல்ஸை பாருங்கள்..... நாம தப்பு என்றதால இல்லையென்றாகிவிடுமா.......?"
"இதை பெண்ணிலைவாதிகள் ரொம்ப விவாதிக்கிறாங்க இல்லை.....?"" விவாதிக்கிறாங்க சரி..... ஆனால் ரொம்ப வரட்டுத்தனமாயிருக்கு... பெண்களில்லாத உலகத்தில ஆண்களும், ஆண்களில்லாத உலகத்தில பெண்களும் உற்சாகமாயிருக்க மாட்டார்கள்... சின்னச்சின்ன வேற்றுமைகளைப் பெரிது படுத்திக்கொண்டு ஆணும் பெண்ணும்தர்க்கிச்சு அடிச்சுக்கொள்றத போல முட்டாள்த்தனம் வேறில்ல."
"அப்போ.... என்னசெய்யலாங்கிறீங்க?"
"முதல்ல..... இந்த வேண்டாத விவாதங்கள நிறுத்திட்டு.......ஆணும் பெண்ணும் சேர்ந்து அறிவு பூர்வமா சிந்திச்சு இந்த உலகத்தை இன்னும் அழகா.... ரம்யமா பண்ணவேணும். அன்பைபரவிப்பரவி எல்லைகள் அற்றதாய் இதை விஸ்த்தரிக்கவேணும்...... எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...... என்று பூரிக்கிறானே.... ஒரு கவிஞன்..... இருப்பதை நுகர்வோம் களிப்போம்."
" கடவுள் நம்பிக்கை வர்றதா?"
"ஆஸ்த்திகனாகவோ.... இல்ல நாஸ்த்திகனாகவோ இருக்கக்கூடிய ஞானம் இன்னும் எனக்குக் கைவரவில்லை என்பதே சரி."
மாலைக்காடு இன்னும் மஞ்சள் குளித்துக்கொண்டிருந்தது.வானத்தில் பொருளும் நடையும் புதிய கவிதைகள் மேலும் பல தோன்றித்தோன்றி மறைந்து கொண்டிருந்தன.
"எதுவரை படித்தீர்கள்?" என்றேன். "ஆரம்பத்திலே சூனியம் தவிர்த்து எதுவுமேயிருக்கவில்லையாம். பின்பு எங்கிருந்தோ இவையெல்லாம் மெல்ல மெல்ல வந்து சேர்ந்துதாம். சிக்கல் கொண்டுதாம்........ இந்தச்சிக்கலை அதன் கட்டமைப்பை புரியற மாதிரிக் கொஞ்சம் படித்திருக்கேன்.........ஆனா இதெல்லாம் எதிலிருந்துதான் வந்தன...... ஏன் வந்தன......எதுக்குச்சிக்கல் கொண்டன...... எதன் வழிகாட்டலில போய்க்கொண்டிருக்கின்றன இதுகள்தான் புரியமாட்டேங்கிறது."
"நான் அந்தக் கவிதைகளைக் கேட்டேன்."
"நம்ப பாரதி கவிதைகள் மாதிரி எல்லாம் எளிமையாய்த்தான் இருந்தன..... ஆனாலும் எதுவுமே அர்த்தம் பிடிபடல்ல...... உங்களுக்கு?""நான்கூட வேகமாய்ப்படிக்கிற வகையில்லை...... ஒரு கவிதையைத்தானும் முழுசாய்ப்படித்து முடிக்கல..... சில கவிதைகள் மெற்றா·பிஸிக்ஸ் பற்றிப்பேசின மாதிரியிருந்துதே?" பிரபஞ்ச இரகசியத்தைப் பிட்டுவைக்கிற மந்திரக்கவிதைகளை அநியாயமா மிஸ் பண்ணிவிட்டோமோ........ கவலையாயிருந்தது.மனிதநடமாட்டமே இல்லாதிருந்த அந்தப்பிராந்தியத்தில் அக்கவிதைகளைப் புரிந்துகொண்ட ஜீவனேதாவது இருக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். சில கழுதைகள் ஆவரசுப்புதர்ப்பக்கமாக மேய்ந்துகொண்டு நின்றன.
3.
"ஆறாவது, ஏழாவது, எட்டாவது புலன்கள் நீங்கள் நினைப்பதுண்டா........?"
கடித்துக்கொண்டிருந்த தேன்புல்லைத் துப்பிவிட்டு "விளக்கமாகச் சொல்லுங்கள்" என்றாள்.
"இப்போ எம்மைச்சுத்தி எத்தனை ரகமான மின்காந்த அலைகளில எத்தனை மொழிகளில எத்தனை விதமான இசைகள் மிதந்து கொண்டிருக்கே...... எதையாவது கேட்கிறோமா?"
"இல்லை"
" அதை வடித்துச் செவியில செலுத்த ரேடியோ என்றொரு சாதனம் தேவைப்படுகுதில்ல....... இது போல எமது புலன்கள் கடந்த சக்திவீச்சுக்கள் இந்தப் பிரபஞ்சவெளியில எமக்குப் புலப்படாம இருக்கலாம்....... இன்னும் பல மில்லியன் வருஷங்களில பரிமாணம் அடைந்திருக்கப்போற மனிதன் அந்த சென்ஸ்களை எல்லாம் உணர்பவனாயிருப்பான் அவனுக்கு பிரபஞ்ச இரகசியங்கள் எல்லாம் புரிவதாயிருக்கும்."
"அவன் அந்த சென்ஸ்களையெல்லாம் அடைகிறவரையில் இருக்கிற தலைமுறை மனிதர்கள் பூமியை விட்டுவைத்திருப்பார்களா?"
" சும்மா ஒருஎதிர்பார்ப்புத்தான்."
"இந்த மாயைத்தத்துவம் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?"
"அது என்னை நல்லாவே குழப்புது"
"எப்படீன்னு சொல்லுங்க?"
"அது வஸ்த்துக்கள் எதையுமே இல்லேன்று நிராகரிக்குதில்ல.......எமக்கு சென்ஸ்..... அதாவது புலனுணர்ச்சி இருக்கிறதாலதான் எமது இருப்பையும், பிறவஸ்த்துக்களையும் பிரபஞ்சத்தையும், சூனியத்தையும் சொல்லமுடியுது........ ஸ்த்தூலவுடம்பு கொண்டிருக்கிற பொறிகள் இந்த உலகத்து வஸ்த்துக்களோட பெறுகிற அனுபவங்களாலதான் மனுஷனுக்கு அறிவோ, ஞானமோ பிறக்கிறது. இந்த ஞானத்தின் பிறப்பிடம் இருப்பிடம் வேற மனசா ஆத்மாவா என்றொரு கேள்வி இருக்கு..........மனசு என்று வைச்சா அந்த மனசைக்கொண்டிருக்கிற ஸ்த்தூல உடம்பு மாயை, அதன் அறிவு, ஞானம் எல்லாமே மாயை என்று நிறுவலாம்.........ஆத்மா என்றாகிறபோது இவ்வளவு ஞானம் வாய்த்திருந்தும் எதுக்குப் போய் கன்மாவில சிக்குப்படிறது என்பது புரியல........மேலும் கன்மாவின் வேலைகளைப் பார்க்கிறபோது ஏதோ பழிவாங்கற மாதிரியெல்லாம் படுது...... தவிர நான்கொஞ்சம் ஆச்சர்யப்படற மாதிரி ஒரு தியறி இருக்கென்றால்.........அது அத்வைதந்தான்."
"அதாவது சத்து, சித்து, சிவம் என்னாமல் எதையாவது புரியும்படி பேசறதா?"
"அத்வைதம் எதையுமே மறுக்கல்ல....... ஒன்றேயான பிரமத்தின் வேறுபட்ட தோற்றங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் வஸ்த்துக்கள் என்று விபரிக்குது. இதில அற்புதம் என்னவென்றால் தத்துவம் விஞ்ஞானத்திற்கு முந்திப்போய் எலக்ரோன் நுணுக்குக்காட்டி இல்லாமலேயே மூலகங்களுக்கு அல்லது தனியன்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைச் சொல்லுது......... இது ரொம்ப அபூர்வமான விஷயந்தான்....... ஆனால் இதுகள் எதனாலுந்தான உயிர், சிருஷ்டிப்பு, அதன் நோக்கங்கள் இதுகள்ல எனக்குத்தெளிவு கிடைக்கல.........பரமாத்மாவே ஆணவம், கன்மம் மாயையால பற்றுண்டு ஜீவாத்மாவாகி பின் பிறப்புக்களால ஸம்ஸ்காரம் பண்ணிக்கொண்டு பரமாத்மாவா ஆகிறதென்கிறதைதோ என் பிரக்ஞை ஒப்புதில்ல."
" விஞ்ஞானி நாப்பது மில்லியன் வருஷங்களுக்கு முன்னே பூமியில் உயிர் இருக்க வாய்ப்பேயில்லையென்று அடிச்சேசொல்லிடறான்........ அப்போ அதுக்கு முன்ன ஸம்ஸ்காரம் எல்லாம் எங்க நடந்திச்சாம்?""வேறொரு மண்டலத்திலயாயிருக்கலாம்."விழுந்து விழுந்து சிரிச்சாள். அவள் கனிந்து மகிழ்ந்து குலுங்கிச்சிரிப்பது மனதில் எங்கேயோ செல்லமாகக்கடிக்கிறது." இந்த உலகத்தில நீங்கள் பார்த்து ரொம்ப அதிசயிக்கிற..... அல்லது உயர்வானது என்று கருதிற விஷயந்தான் என்ன.?""இந்த உயிர் எங்கிற விஷயமும் பிரம்மம் மாதிரியே எங்க அறிவுவட்டத்தில சரியா பிடிபடாமத்தான் இருக்கு........ அதை விடுத்துப்பார்த்தால்....... நான் மனித உணர்ச்சிகளைத்தான் சொல்லுவேன்....... ஏன் மனிதன் என்று குறிப்பிட்டுச் சொல்கிறேன்னா மற்ற விலங்குகளில அது அவ்ளவா பரிணாமிக்கவில்லை...... இந்த உலகத்தை இன்னும் அழகாக்கிடறதா...... இல்லை கொழுத்திடறதா என்று தீர்மானிக்கறது நாளைய மனுஷன்ட உணர்ச்சிகளின் கைக்குவந்தாச்சு........ உலகத்து வளங்களை நுகர்றதில மனுஷருக்குள்ள சமத்துவம் இல்லை என்கிற அடிப்படை உண்மை ஒருத்தனுடைய உணர்வில தாக்கினதாலதான் பொதுவுடமைத்தத்துவமே தோன்றிச்சு. இன்றைய உலகில யார் அதிநாகரீகன் என்றால்...... எவனொருவனிடம் சூப்பர் ஸென்ஸிடிவ் மனம் இருக்கோ அவன்தான் என்று கையைக்காட்டுவேன்......... அஹிம்சை கருணை காருண்யம் என்கிறதெல்லாம் ஹை ஸென்ஸிடிவ் மனதாலதான் சாத்தியம். முழுதா விபரித்துவிடமுடியாத அபூர்வஉணர்ச்சிகளை அருட்டக்கூடியசக்தி கலை, இலக்கியம், இசை, இயற்கையழகு இதுகளுக்கும் இருக்கிறதால நான் இவைகளில்லயும் லயித்துப்போவதுண்டு.........."
இப்படிப் பேசிக்கொண்டே போனோம்.
4.ஒரு திண்மக்கோணத்துக்கு(Radian) ஆயிரத்திற்கும் மேல் ஒளிர் வெள்ளிகள் நிறைய சேஷ்த்திரம் பகலாகியது. ஒவ்வொரு முகிலும் ஒவ்வொரு வர்ணத்தில் தோய்ந்துகொண்டு எல்லாத்திசையிலும் சுயாதீனமாய் திரிந்துகொண்டிருந்தன.கட்சி மாநாடொன்றுக்குச் சென்று திரும்புபவர்கள் போல அணில்களின் கூட்டமொன்று எதிர்த்திசையிலிருந்து வந்துகொண்டிருந்தது. கடந்து செல்லும் எந்தவொரு அணிலாவது எம்மை ஏறிட்டும் பார்க்கவில்லை.எதையாவது மிதித்துவிடாமலிருக்க பாதங்களை நிதானமாகத்தூக்கி வைத்து நடந்தோம்.பின் ஒரு கூட்டம் அகிழான்கள் வந்தன. சில பாத்தினடியில் புகுந்து கிச்சுக்கிச்சுமூட்டின. அவள் பயந்துபோய் பதிவாயிருந்த கொய்யா மரமொன்றின் கிளை¨யான்றில் ஏறிக்க¦¡ண்டாள். அகிழான்கள் கடந்து போனபின் என்னைத் தொடர்வதற்காக ஓடிவந்தாள்.
“ அகிழானுக்கே பயந்தாலெப்படி............... இனிக்கரடிகூட வரலாம். ”
“ சும்மா பயங்காட்டாதீங்க............. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் .”
“ நீங்கள் வந்த பின் காப்பான் "டைப்"பா........? ”
“ அதிபுத்திசாலி........... சாமர்தியசாலி.......... தைர்யசாலி.......... என்று நினைப்பதற்குரிய எவருடைய உரிமையையும் நான் மறுக்கேல்ல.........”
இரண்டு பக்கமும் ஈரலிப்பான பள்ளமான வயற்காட்டுப் பிரதேசங்களிருக்க நடுவே அணையைப் போன்றவொரு மேட்டுத்திடலில் பாதை தொடர்ந்தது. மேலே செல்ல இருமருங்கிலும் இருவாட்டி வயல்களில் சோளம் விளைந்து கதிர் தள்ளியிருந்தது.அவள் கீழே இறங்கிப்போய் நல்ல பால் பருவத்தில் பொத்திகளை முறித்து வந்து மடலையும் குந்துகளையும் நீக்கிச் சுத்தம் செய்துவிட்டுப் பவ்யமாக என்னிடம் நீட்டினாள். தானும் ஒன்றைக் கடித்து "சூப்பராயிருக்கு" என்றபடி இன்னும் பக்கமாக வந்தாள்.
“ சோளமென்றால் உங்களுக்குப்பிடிக்குமா.............? ” கேட்டேன்.
“ பொதுவா அடுப்பில ஏத்தாம கிடைக்கிற இயற்கையான காய்கனிகள்ல இஸ்டம் அதிகம். இளனி.........கரும்பு........கெக்கரி.............. இப்படியொரு பட்டியலேயிருக்கு. ”
“ சரி............... இப்படி பிடித்த விஷயங்களாய் இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்............. ”
“ மைல்கணக்கில நீள்ற பட்டியல்லயிருந்து............. எதைச்சொல்றது எதை விடறது............ ரொம்பக்கஷ்டம்........... ஏதோ கொஞ்சம் முயற்சி பண்றேன். ”
“ பண்ணுங்க......... ” “ ஆனந்தவல்லி என்கிற என்னை. ”
“ வெண்ணிலாவென்றல்லா கூப்பிட்டார்கள்? ”
“ என் ஒரிஜினல்பேர் ஆனந்தவல்லிதான்................ ஏன் கர்நாடகமாயிருக்கா? ”
“ அப்படி நான் சொல்லேல்லையே. ”
“ யாருமே நேர்ல உன் பேர் கர்நாடகமாயிருக்கென்று சொல்லிடமாட்டாங்க........ குறிப்பா ஆண்கள்னா................. ஆ.....அதுவா........"லவ்லி.....ஸ்வீட்"என்பாங்க. ”
“ ஏதோ ஆண்கள் என்றாலே பெண்களோட போட்டிபோடவென்றே ஜனிக்கிற ஜென்மங்கள் மாதிரித்தான் நீங்களும் நினைக்கிறீங்கள்..............சரி....மேல.”
“ எங்க குடும்பம்..........., எங்க ·பிலோசபி புரொபெஸர் அச்சுதனைப்போல இன்டெலெக்சுவலா........... ஈகோவில்லாம......... உண்மையான நேசத்தோட பழகுகிற ப்ரெண்ட்ஸ்.........., மற்றும் துறை போந்தமேதைகள், ஞானிகள், பெரியவா இவர்களுடைய அருகாமை, குழந்தைகள், பூக்கள், மரங்கள், பச்சைப்புல்வெளிகள், தோப்பு........ மலை, அருவி, கடல் என்று இயற்கையை அனுபவிக்கப்பண்ற பயணங்கள், உழைப்பும் நம்பகமுமான ஒரு கார், மழை, நாளையைப்பற்றின கவலையில்லாமலிருக்கும் பறக்கும் ஒரு பறவை, சுதந்திரமாய் நீந்திற ஒரு மீன்......... போதுமா?”
“ இன்ரெறெஸ்டிங்............. இன்னுங்கொஞ்சம். ”
“ புத்தகங்கள் , Zen , Surfism, Confuziusஸோ தத்துவங்கள், நாவல், கவிதை, பரதநாட்டியம், கர்நாடகஇசை.”
“ வாவ்................! ”
“ என்ன? ” என்பதாகப்பார்த்தாள்.
“ இத்தனை விஷயங்களுமே எனக்கும் பிடித்தவையென்றால் நம்புவீர்களா......? ”
“ நம்புவேன். ”
“ நானென்றால் இந்த முதற் பட்டியலிலே இன்னுமொன்றையும் தப்பாம சேர்த்துக்குவேன். ”
மீண்டும் அதே"வித"மாகப்பார்த்தாள்.
“ அது ரொம்ப பேர்ஸனல்............. அந்தரங்கம்..... ஆனா நான் இதுல உண்மை பேசிறேனென்றால் சொல்லியே ஆகணும் . அது......... வந்து.........வந்து......”
“ தைரியம் பத்தலயா.......... சொல்ல? ”
“ ச்சே........... அப்பிடியெல்லாமில்ல.”
“ அப்ப......... இருந்தா சொல்லிடுங்களேன். ”
“ காதலுடன் கூடிய செக்ஸ்.........!”
விழிகளை மேலே எறிந்துவிட்டு "காட்ச்" பிடித்தாள். அதை ஆமோதிப்பு என்பதா........மறுப்பு என்பதா............கிண்டல் என்பதா........? சரி விஷயத்தை மாற்றவேண்டும்.
“ கர்நாடக இசை என்றால் என்ன? ” என்றேன்.
" கர்ணம் எங்கிறது காது. செவிப்புலனுக்கு அதனால கிரகித்துக்கொள்ளக்கூடிய மேல்"கீழ் ஸ்ருதி எல்லைகளிருக்கு. இது விலங்குக்கு விலங்கு வேறுபடக்கூடச்செய்யும்.......... மானுஷச்செவியில புலனாகக்கூடிய எல்லா இசைவகையும் கர்நாடக இசைக்குள்ள அடக்கம்.”
“ ரொம்பத்தான் ஆசை......... சரி. நீங்கள் இசை கற்றுக்கொண்டீர்களா?”
“ கற்றுக்கொண்டது கொஞ்சம்.......... கேட்டதுதான் அதிகம். ”
“ பாடுவீர்களோ............?”
“ அடிக்கடி பாடுவேன்.................... எனக்குள்ளேயே அலாதியாய் ஆலாபனைகள் பண்ணிக்கொண்டு , சில வேளைகளில மிகமிக விஸ்த்தாரமாய்ப் முடிவேயில்லாம கற்பனைகளை வளர்த்துக்கொண்டு..................... பாடிக்கொண்டேயிருப்பேன்........ ஆனா பார்க்கிற யாருக்கும் தெரியாது. ”
“ இப்போ எனக்காகவும். ”
இயல்பாக முதலில் வெட்கப்பட்டாள். வானத்து மஞ்சள் முகத்தில் தெறிக்கிறது. சமாளித்துக்கொண்டு "பிகு" ஏதுமில்லாமல் பாட ஆரம்பித்தாள்.தாழ்தொனியில் பூஞ்சிறகொன்று காற்றில் அசைந்து அசைந்து மிதந்து வருவதைப்போல ஹிந்தோளத்தை மிக மிருதுவாக ஆலாபனை பண்ணினாள்.ஸ்ருதி மெல்ல மெல்ல மேலே ஏறி, ஏறிவிட்ட பட்டமொன்றின் வாலைப்போல அங்கங்கு சுழித்தும் ஒடித்தும் துடித்தும் ஜாலங்கள் காட்டியது.ஒரு வண்ணத்துப்பூச்சி பறக்கப்போதுமான லேசான பிரயத்தனத்துடன் அனாயாசமாய் சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்தும் நுழைந்தும் மீண்டது. அந்த ரசானுபவத்தில் திளைத்துச்சிலிர்த்து என்ன இவள் கூடப்பறக்கிறேனா, நடக்கிறேனா என்பது புரியாமல் மயக்கமாகவிருந்தது. வளமான பிரயோகங்களாலான ஆலாபனை முடிந்து அவள் தரையிறங்கவும் “ சபாஷ் ” என்றேன்.
“ நிஜமாலுமா..............?”
“ நிஜமாலும் இத்தனை அற்புதஞ்செய்வீர்களென்று நான் நினைக்கவேயில்லை!”
தலையைச்சாய்த்துப் பாராட்டை ஏற்றுக்கொண்டு “ மேலே பாடவா........? ” என்றாள்.
"ஜோராய்! ”
“ மா......... ரமணன்..........உமாரமணன்................. மலரடி பணி மனமே தினமே........ ”
பாபநாசசிவன் கீர்த்தனை. எத்தனை கேட்டாலும் திகட்டாத காந்தர்வக்குரலில் நிரவல் செய்து ஸ்வரங்களில் மந்த்ரங்களைத் தூவும் கற்பனைகள் காட்டி சாஹித்யத்தில் பாவங்களை உருகி ஓடவிட்டாள்.தாளம் போட நான் தடுமாறவும் கையில் "ரூபகம்" காட்டித்தந்தாள். கார்வைகளும் அதில் ராகத்தைத்தெறிக்க வைக்கும் நளினம்பொருந்திய அசைப்புகண்டன்கூடிய பிருகாக்களும் என்னே சுகம்! இதயத்தின் மிக ஆழத்திலிருந்து வானவில்லொன்று பிரவகித்து உயிர்பூரா வியாபிக்க மனம் சிறைப்பட்டுப்போகிறது.கீர்த்தனை முடிந்ததும் என்னையும் ஏதாவது பாடும்படி வற்புறுத்தினாள்.
“ இவ்வளவு சுதி சுத்தமாய்...........நுட்பமாயெல்லாம் பாட வராது........... ஏதோ கொஞ்ச நாள் வீணை படிச்சேன். அதுக்கான நேரத்தை ஒதுக்கி உழைச்சு என் குருத்தினிக்கு நான் 'சின்செயரா'ராயில்லை..................அதனால பாதியில நிறுத்திட்டன்.”
“ பரவாயில்லை....... முடிஞ்சவரையில தெரிஞ்சமாதிரி பாடுங்க..... இங்க வேறு யார்தானிருக்கா......... கலைங்கிறதே கற்றுக்கொள்றதும் தெரிஞ்சுக்கிறதுமான விஷயந்தானே?”
அவள் விடுகிறமாதிரியில்லை. எதைப்பாடுவது........... என் கீழ் மத்திமக்குரலுக்கு ஏற்றதாயிருக்க வேணுமே.......... ? யோசித்துவிட்டு ஹம்சநந்தியில் நேரடியாகவே“ ஸ்ரீநிவாஸ திரு வேங்கடமுடையாய் ஜெயகோவிந்த முகுந்த அனந்த தீனசரண்யன் எனும்பெயர் கொண்டாய் தீனன் எனைப்போல் வேறெவர் கண்டாய்...... ஸ்ரீநிவாஸ
ஜெகம் புகழும் ஏழுமலை மாயவனே திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே ஜெகந் நாதா சங்கு சக்ர தரனே திருவடிக்கபயம் அபயம் ஐயா.........ஸ்ரீநிவாஸ ”என்று பாடிமுடித்தேன்.
“ பரவாயில்லை......... நல்லாவே பாடறீங்களே! ”
எனக்கும் தெரியும் இது பரவாயில்லை ரகந்தான்.
“ நீங்க வற்புறுத்தினதுக்காக ஏதோ முயற்சி பண்ணினேன்............... இதெல்லாம் சங்கீதத்துக்குள்ள வராது. ” "நோ.....நோ.....நோ..... யூ ஆ ரூ மொடெஸ்ட்......... நல்லா ஸாதகம் பண்ணினாத்தேறிடுவீங்க........... எங்க இன்னொன்று.”
“ ஐயையோ............. இன்னொன்றா............ அவ்வளவுக்கு வருத்திக் கொள்ளத் துணிஞ்சாச்சா................. சரி........ ஒரு தில்லானா? ”
“ சூப்பர்.......!”
ஸ்ரீ ரஞ்ஜனியில் மஹராஜபுரத்தார் தானே கொம்போஸ் பண்ணி அடிக்கடி பாடும் தில்லானா ஒன்று ஞாபகம் வருகிறது.
"தகதீம் ததீம் நாகிருதீம்ததோம் திருதீம் திரனா தனதிரனாநாகிருதாநி தோம் திருதீம்நாகிருதாநி தோம் திருதீம்தரிகிட தீம் தரிகிடதீம் தரிகிடதீம்தரன தீம் திரனா திரனாகிடதக தரிகிடதீம் தக்கிட தரிகிடதீம்தாகிட ததீம்த தக தளாங்கு தகதீம்தளாங்கு தக தீம் தளாங்கு தா தீம் தளாங்கு தக தீம்."
கையில் "ஆதி" போட்டவள் கைப்பையை என்னிடம் தந்துவிட்டு மெல்லிய விரல்களைக்காற்றில் வீசி நளினமாக ஆடினாள்.கலை தரும் வகை தெரியாத பரசவத்தில் ஆழத்தோய்ந்தோம். பின் தானாகவே அம்புஜம் கிருஷ்ணன் காபியில் கொம்போஸ் செய்த
"அரவிந்தப்பதமலர் நோகுமோ அடிமை எனக்கிரங்கி ஆட்கொள்ளவந்திடில்"
என்கிற உருப்படியை பாவம் பிழியப்பிழிய உருக்கினாள். தொடர்ந்து இந்தியில் "பஜன்" ஒன்றைப் பாடவும் இலேசான அவள் குரல் வானம் வரை ஏறிப்பின் காட்டுப்புலம் முழுவதும் பரவ களைப்பின்றி நாம் நடந்தோம்.
கீழே பதிவில் தாழ்நிலவயலிடையே குட்டையொன்றில் பொன்வானம் பிரதிபலித்துப் பாரிய தங்கத்தாம்பாளமென மின்னியது. மேலும் நடக்கையில் சிறிய கண்மாயொன்று வந்தது. அதிலே அமர்ந்தோம். வயல்களுக்கான பாசனவாய்க்காலொன்று அதன் கீழே “ கிளுக் ” “ கிளுக் "கென்றது.
“ சாப்பிடலாமா....? "என்றாள்.
“ ஏது? ”
“ புளியோதரை கொண்ணாந்திருக்கிறேன்.”
தன் தோற்பையைத் தூக்கிக்காட்டினாள். வாய்க்காலில் கையை அலம்பிவிட்டு சாப்பிட்டோம். வாழைமடலில் கட்டியிருந்த புளியோதரையை கட்டுச்சாப்பாட்டுக்கேயுரிய வாசனையுடன் திவ்யமாகவிருந்தது.மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். வானத்து நட்ஷத்திரங்கள் ஒவ்வொன்றாக மெல்ல விடைபெறத்தொடங்கின. பாதையின் இருமருங்கிலும் நின்ற நாணல்களும், பால்மொண்டிகளும் பூனைவாலொத்த குந்துகளாலும், கதிர்களாலும் எம்மை வருடின.கோவை, கூழாம்பழங்களை வைத்து நன்னிக்கொண்டிருந்த சிறுகுரங்குகள் நெற்றியில் கைவைத்து எம்மை நோக்கிவிட்டு விரைந்து மரங்களில் தாவின.எமது காலரவத்தைக் கேட்ட குழிமுயல்கள் குட்டிகளுடன் விரைந்துபோய் புதர்களுள்ளும், பற்றைகளுள்ளும் ஒளிந்துகொண்டன.மேலே நடந்து செல்லவும் பாதை மணற்பாங்கானதாக மாறியது. வருவது ஒரு ஆற்றுப்படுக்கையாக இருக்கலாம். அதை ஊர்ஜிதம் செய்வதுபோல காற்றும் அதீதமான குளிரை அள்ளிவந்து போர்த்தியது.
“ குளிருதே.............. ஸ்வெட்டரைக் கொண்டு வந்திருக்கலாம்............"என்றாள்.
“ ஆமாம்.............. எடுத்து வந்திருக்கலாந்தான்............ ” என்றேன் நானும் என்னிடமும் ஸ்வெட்டர் இருப்பதைப்பால.தனியாகப் பறந்து வந்த கொக்கு ஒன்று தன் இடது சிறகைப்பதித்து அரைவட்ட "டைவ்" அடித்துத் திசையை மாற்றிக்கொண்டு பறந்தது. மீதமிருந்த வெள்ளிகளும் ஓய்வெடுக்கச் செல்லத்தொடங்கின. ஆற்றின் படுகையிலிருந்து தொடர்ந்த மணற்பாதை புல்லுகளும் செடிகளும் செறிந்து வளர்ந்த மண்பாதையாகியது அதைக்கவனித்தே நடக்க வேண்டியிருந்தது. நடைபாதையைவிட்டுக் கொஞ்சம் விலகினாலும் தொட்டாற்சுருங்கியும், நாயுருவியும் கால்களைப் பிராண்டின.பழுக்கக் காய்ச்சிய இரும்பைப்போல தகதகத்துக்கொண்டிருந்த வானம் மெல்ல மெல்ல ஆறிப்போக வயல்வெளிகளின் பின்னே தெரிந்த காடுகளும் இருட்டில் இல்லாமற்போயின.மேலே செல்ல மிருதுவாகவும் பாதங்களுக்கு சுகமாகவுமிருந்த மணற்பாதை ஈரமானதாகக் காணப்பட்டது. பாதை மெல்லச் சரிவாகச் சென்று பள்ளத்தில் இறங்கியது. அங்கே “ சிலுங் ” “ சிலுங் ” “ சிலுங் ” கென்று சிற்றருவியொன்று நடந்துகொண்டிருந்தது. பாலியாறு என்பது இதைத்தானோ?ஆழம் அதிகமில்லை. இலகுவாகக் கடந்து வெளியேறினோம். தூரத்தில் புள்ளிப் புள்ளியாக மினுக் மினுக்கென்று வெளிச்சங்கள் தெரிந்தன. அவை ஏதேனும் வீடுகளிலிருந்து வரும் வெளிச்சமா இல்லை காவற்கொட்டில்களிலிருந்து வருகின்றனவா தெரியவில்லை. வேட்டைக்குப் போவபவர்களின் சூழ்களாகக்கூட இருக்கலாம். இருள் அதிகமான அதிகமாக என்னை நெருங்கி நெருங்கி நடந்தாள். அவள் நாசியும் என் தோட்பட்டையும் ஒரே உயரமாகவிருந்ததால் அவள் மூச்சின் உஷ்ணம் என் கழுத்தையும் தோட்பட்டையையும் சுட்டது. அந்த நெருக்கமும் அவளிடமிருந்து வந்த பெண்வாசனையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமயத்தில் தோளும் தோளும் உராய்ந்தன. சில தடவைகள் பாதையிலிருந்த கிடங்குகளில் காலிடறுப்பட்டு விழப்போனாள். அடுத்த தடவை அவள் காலிடறியபோது தெறிவினையாக அவள் இடது கையைப்பற்றினேன். பாதஇரசம் கொண்ட பாத்திரத்தினுள் கையைப்புதைத்த மாதிரி சில்லென்றிருக்கிறது. இது எதனால்................. பயத்தினாலா?நான் அவள் கையைப்பற்றிக் கூட்டிப்போவது ஒன்றும் தப்பாகப்படவில்லை. மிகவும் நியாயமாகவே இருந்தது. அவளும் ஆட்சேபிக்கவில்லை. பூனைவால் பூவைப்போல மிருதுவாயிருந்த அவள் விரல்களுக்கு வலிக்காமலும், அதேவேளை பறிபட்டுவிடாத அளவுக்கு அழுத்தமாகவும் பற்றிப்பிடித்தேன். குளிர்ந்திருந்த அவள் கையும் நேரமாக ஆக உஷ்ணமாகிறது. இந்த ஸ்பரிஸத் தொடுப்பூடாக ஏதோவொரு அதிர்வெண்ணில் மாய அலையொன்று என்னுள் செலுத்தப்பட என்னுள்ளிருந்த ரயில் எஞ்ஜின் அருட்டப்பட்டு அதன் பகுதிகள் சூடாகி ஜிவ்ஜிவ் என்கிறது. அந்த ஸ்பரிசம் தேவையாகவுமிருக்கிறது. அத்தொடுகை மட்டும் அறுந்துவிட்டால் உயிர் இயங்காதுபோகச் சக்தியற்றுச் சாய்ந்துவிடுவேன் போலுமிருந்தது.இந்த உரிமை எப்படி வந்தது என்று சிந்திக்க விருப்பமில்லாதிருந்தது. இடையில் அந்த சண்டைப்பிரகிருதி “ விட்றா கையை அயோக்கியப்பயலே............” என்றால் அந்த சுகத்தை இழந்து போய்விடுவேனோ? இந்த படவாவின் முகத்தை இப்போது கண்ணாடியில் பார்க்கவேண்டும். என்ன திருடனைப் போலிருப்பான்.இது ரொ¡ம்பவும் தப்பென்றால் அவள் கையை உதறிவிட்டிருக்கலாமே..................அவளும் என்னைப்போலவே தன்னுள் போராடுகிறாளோ............ கையை உதறுதல் என்னை அவமதித்ததாகவோ புண்படுத்தியதாகவோ இருக்கும் என எண்ணுகிறாளோ?முழங்காலுக்குக் கீழும் அலம்பல் கட்டால் விளாசியதுபோல “ சரக்"கென்று முள்ளம்பன்றியொன்று அடித்துவிட்டு என்னைத் தேய்த்து உராய்ந்துகொண்டு குறுக்கே ஓடவும் “ ஐயே ” என்று அலறிக்குதித்தவள் தள்ளிக்கொண்டு என்னில் தாவிச்சாய்ந்தாள். அடுத்து மேலே என்ன கரடிதான் விழுந்து பிடுங்கப்போகிறதோவும் தெரியாது............. அவளும் பயப்படவேண்டாமேயென்று “ என்ன முயலாக்கும்.” என்றேன்.
அவளின் மொத்தலால் மார்பின் மென்மையான ஸ்பரிசம்பட்டு மனம் நெக்கி அலைந்தது.
“ இவ்வளவு பக்கமிருக்கே......... சும்மா அலையாமல் அள்ளேன்டா பரதேசி.”
அவன் சொன்னான். என்னை வம்பில் மாட்டிவிட்டுவும் சொல்லுவானவன். அவனை முழுவதும் நம்பிவிடவும்கூடாது.என் உணர்ச்சிகளை அவள் முழுவதும் புரிகிறாளா...............? புரிந்துகொண்டுவிட்டு “ ப்பூ................. இவ்வளவுதானா நீ.................?” என்று துப்பினாளேயானால்.............. எப்படி நான் நொறுங்கி ஒடுங்கிப்போய் விடுவேன்?
5.
என்றோ ஒரு நாள் அரைத்தூக்கத்தில் கேட்டுவிட்டு மறந்துபோன ஒரு ஹிந்துஸ்தானி மெலடி, பின்னால் பலதடவைகள் நான் அதை நினைவில் கொண்டுவர முயன்றும் அதன் கட்டமைப்போ இல்லை சாயலின் ஒரு சிறு கூறுதானோ நினைவுக்கு மறுதரிசனம் தரமுடியாதென்று முரண்டு பண்ணியது.......... இப்போ வலியவே பூரணமாய்ப் பெருகி வந்து என் இசைப்புலம் முழுவதையும் நனைத்தது.மின்மினிகள் குறுக்கும் மறுக்கும் பறந்தன. எமது அரவத்தை உணர்ந்து கொண்ட ஆட்காட்டிப்பறவைகள் குரல் கொடுத்தன.மணற்பாதை அகன்று மணற்பாங்காகி பாதங்கள் ஈரத்தை உணரத்தொடங்கவும் மீண்டும் அருவி குறுக்கிட்டது. அருவியின் இருமருங்கிலும் ஓங்கி வளர்ந்திருந்த மருதமரங்களின் கிளைகள் குனிந்து அருவியைத் தொட்டுக்கொண்டு நிற்பது இருட்டில் பல இராட்சத அரக்கர்கள் அப்படி அணிவகுத்து நிற்பதைப்போலிருந்தது. அவளையும் அவை அப்படித்தான் பயங்காட்டினவோ என்னவோ................ உரசல் இப்போது அதிகமாகவேயிருந்தது.இந்தப்பாதையும் அருவியுமென்ன இருட்டில் கில்லித்தாண்டல் விளையாடுகின்றனவா? பின்னல் ஜடையின் பிரிகளைப்போலத் தம்பாட்டில் பிணைந்தும் பிரிந்தும் ஒன்றோடொன்று பின்னிச்செல்கின்றனவே?நடந்தோம். மறுபடி அருவிவந்தது. இம்முறை நாலைந்து அடிகள் வைத்தவுடனே நீர் மட்டம் முழங்கால்வரை ஏறியது. நடுவில் ஆழம் அரைக்கு மேலேயே போகலாம். முழங்கால்வரை சேலையை மடித்துச் சிரமப்பட்டாள். எனக்கு ஒரேவழிதான் புலப்பட்டது. கேட்டேன். “ நான் வேணுமென்றால் சேலை நனைந்துவிடாமல் உங்களைத் தூக்கிக்கொள்ளவா...............?”அவள் “ வேண்டாம்” என்று மறுக்கவே அவகாசம் தராது நான் லங்கோட்டுடன் நின்றுகொண்டு வேஷ்டியை மடித்து உத்தரீயம் போலத்தோளில் போட்டுவிட்டு அவளை ஒரு வாழைக்குட்டியைப்போல அலாக்காய்த் தூக்கிக்கொண்டு நடந்தேன்.ஆழம் இடுப்புவரை இருக்கத்தான் செய்தது. உணர்ச்சிகளை முறிக்கவேண்டிய தண்ணீர் என்னுள் இன்னும் அனலைமூட்டி வளர்க்கிறது. மயிர்க்கால்கள் வேறு சிலிர்க்கின்றன. " கீலா"விலிருந்த காவாலித்தவளை ஒன்று எங்கிருந்தோ உரத்து விசிலடிக்கிறது.கொஞ்சம் இறுக்கமாகவே...................... அணைத்தேன்.பட்டாக அரைத்த மாவினுள் விழுந்து புரண்டு அளைந்த மாதிரி அவள் தேகம் தந்த சுகம் “ மோடி கிறுக்குதடி தலையை................. கனியே நினது இன்பம் வேணுமடி.........!” என்று ஏங்க வைத்தது. சற்றே தேவைக்கு அதிகமாகவே கைகள் இறுக்கி அணைத்துக்கொண்டன. தண்ணீர் மட்டம் முழங்காலளவுக்கு வந்தபோது இறங்க எத்தனித்தாள். மேலும் இறுக்கினேன்.ஒரு மானைப்போலத் திமிறி விடுவித்துக்கொண்டு தள்ளிப்போய் நின்றாள். என் ஆசைகள் அருவியில் கொட்டப்பட்டு சங்கடம் நிறைந்த கணம் நகரா நிற்கையில் அவன் வந்து “ வந்தனங்கள் அனந்தம்” என்றான். (முன்பொரு முறை சுவரில் ஆணி அடிக்கும்போது விரலில் சுத்தியலால் அறைபட்டுத் துடித்துக்கொண்டிருக்கையில் வந்து "வந்தனம்” சொன்ன பிரகிருதி அல்லவா? ) அவளுக்கு 'சொறி' சொல்லவேணுமா............... வேண்டாமா என்று குழம்பித் தவிக்கையில் அவன் எந்த ஆணையோ அட்வைஸோ தராமல் சும்மா என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். என்னுள் ஆற்றாமையும் கோபமும் பிரவகிக்கின்றன.
என் வட்டத்தில் எத்தனை “ அழகு ரூபிணிகளை"க் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறேன். அனைவரும் அலர் அகவைப்பருவத்து மாணவிகள். இயற்பியலில் ஓட்டமின்னியல் பாடம். அன்று கரும்பலகையில் மின்சுற்று ஒன்றை வரைந்துகொண்டிருக்கிறேன். காதில் கேட்கிறது. “ மாஸ்டருக்கு வடிவான பல்லடி.”
“ போடீ கட்டைத்தாரா............... அவர் எனக்குத்தான் மாட்ச்!”விமர்சனங்களைக் காதில் போடாதிருந்தால்தான் பாடம் நடத்தலாம். முன் பெஞ்சில் ஒருத்தி “ கிசு கிசுப்பான” குரலில் சொன்னாள்:
“ சேர்............ இவ உங்கள அத்தானாம்...........!”
யார்தான் அந்தத் துணிச்சற்காரி?"சட்"டெனத் திரும்பினேன். என்னையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த வகுப்பின் ஹீரோயினான அழகி நாணித் தலைகவிழ்கிறாள்.
இன்றைய இச்சலனத்தின் மூலவேர்தான் என்ன? அவளது கலையா...............? எளிமையா...............? அறிவா? அல்லதுஎம் தனிமையா................? அவள் தொடர்ந்து வரவில்லை. சற்று நின்றேன். வருவதாயில்லை. “ எங்குதான் போய்விடப்போகிறாள்..............?” மனது வக்கிரம் கொள்கிறது. மெதுவாக நடந்தேன். பாதையை விட்டிறங்கி காட்டினுள் மெல்ல ஒளிந்திருப்போமா? அப்போது என்னதான் செய்கிறாளென்று பார்ப்போம்.வேண்டாம். நிஜமாகவே அவள் என்னைத்தொலைத்து விட்டாளாயின் எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்? நளன் காலத்திலிருந்து வரும் பழி.அவள் ஓடி வரும் காலடி அதிர்வு கேட்கிறது. அருகில் வந்ததும் மூச்சு வாங்கிய படியே "சொறி ஹரிகேசன்” என்றாள்.
“ எதுக்காம்.....?”
“ இவள் அருவியில் மூழ்கியே போவதாகவிருந்தாலும் உங்களைத்தொட்டுத் தூக்க நான் வைத்திருந்திருக்கப்படாது....... It's absolutely my fault!..... Yes I admit it......I admit it. நானும் ஒரு நிமிஷம் மயங்கிவிட்டேனென்று வைப்போமே............ நாளைக்கு உங்களுக்கு இன்றைக்கு என் மேல இருக்கிற அபிப்பிராயம் இருக்காதில்ல................?”மாடுகளுக்கு குறியிழுத்த மாதிரி தோலும் உரோமமும் சேர்ந்து கருகும் மணம் காற்றில் எழுந்து வந்து குமட்டியது.மெளனமாக நடந்தோம். பனியில் குளித்த தேன் புற்கள் பாதங்களை நனைத்தன. உடலின் முன் பக்கம் கெழுத்தி மீனைப்போலவும், பின் பக்கம் டொல்·பினைப் போலவுமிருந்த விலங்கொன்று வானில் "டைவ்" அடித்துப்போனது.நாங்கள் கவனிக்காத கணமொன்றில் சூரியனிலிருந்து உடைத்துக்கொண்டு வந்துவிட்ட ஒரு பெரிய துண்டுபோல் ஒரு வெள்ளி வடகிழக்கில் தோன்றித் துள்ளித்துள்ளி எறித்தது.“ அதோ விடிவெள்ளி.......!” என்றாள்.வானத்தின் வெள்ளிப் பனித்திட்டுகளிடையே ஸ்லெட்ஜ்களில் குள்ளமான மனிதர்களிருக்க அதில் பிணைத்திருந்த ஏழெட்டு நாய்கள் அதை வேகமாக இழுத்துக்கொண்டு வழுக்கின.
"Fritjz Capra வோட Tao of Physics படித்தீர்களா.............?” கேட்டாள்.
“ கேள்விப்பட்டிருக்கிறேன்............... இனிமேல்த்தான் படிக்கவேணும்.”
கீழ்வான விளிம்பில் மெல்லச் சிவப்பேறியது. புலர்வானத்தின் புதுநிறங்கள் உத்வேகம் தந்தன.
“ ம்ம்ம்............ பார்த்தீர்களா.................. வானத்தை அது விடிவெள்ளியேதான்!”
குதூகலித்தாள்.மல்லிகை, முல்லை, சம்பங்கி, மருக்கொழுந்து, இரவுராணிப்பூக்களுடன் என்றுமே பார்த்திராத ஆயிரம் மலர்கள் எல்லாமே இதழ்களால் ஒளி உமிழ்வனவாய் வானத்தில் மேலும் பூக்க பவனத்தில் மேலும் சுகந்தம் நிறைந்தது.
'Teddy bear' ஐப்போலிருந்த முகிலொன்று தூரத்தே காட்டில் இரகசியமாய் வழுக்கி வழுக்கி இறங்கிக்கொண்டிருந்தது.
இன்னும் பாதை அடிவானம் நோக்கி நீள்வதாயிருந்தது.
ஆனால் தெளிவாகவிருந்தது.
நாங்கள் நடந்தோம்.

***************************

(இன்னுமொரு காலடி" லண்டன்" 1998)