Montag, Dezember 08, 2003

ஜெயலலிதா

-கருணாகரமூர்த்தி-


(1)

ஜெயலலிதாவுக்கு பூஞ்சையான அனீமியாத்தேகம். இடை வயிறு பிருஷ்டம் எல்லாம் ஏகத்துக்குப் பேதமின்றி சுள்ளல் வாழை போலிருக்கும். குடிசை வாசி. தென்னகத்து ஜெயலலிதாவின் ஐஸ்வரியங்களைக் கனவு காணக் கூடக்; தெரியாது. என்ன போகிற போகிற இடங்களில் ஏதாவது அவளுக்கு சுவாரஸிமானதாய் பட்டுவிட்டால் போதும் மணிக்கணக்கில் அதையே விடுப்புப் பார்த்துக்கொண்டு நிற்பாள். அவளுக்கு சுவாரஸியம் தரும் விஷயம் இன்னதுதான் என்றில்லை. அது நடுங்கல் சின்னவிக்கிழவனின் தலையோடு சேர்ந்து குலுங்குகிற குருவிக்குடுமியாயிருக்கலாம், தௌ;ளு உதறத் துள்ளும் ஒரு நாயாயிருக்கலாம், அல்லது கைலாசநாதர் வீசி எறிந்த சிகரெட்டுப் பக்கெற்றாகக்கூட இருக்கலாம். பார்க்கத் தொடங்கினாளானால்; ஒரு தபஸாக அதனுடனேயே ஒன்றிப்போய்;விடுவாள்.
பிறகு அவளை இந்த லோகத்துக்குத் திருப்ப எவராவது அவள் காதுக்குள் கூக்காட்டினால் சரி அல்;;;லது அவளாக எப்;;;போது மீளுவாள் என்று சொல்ல முடியாது.

அவள் தாய் லெச்சுமியோ அவளது இந்தப் பேய்ப்பார்வை பேச்சியம்மனின் குறைபாடென்று எத்தiயோ தடவைகள் அம்மனுக்கு கண்மடல் செய்வித்து அர்ப்பணித்தும் பூசாரியைக்கொண்டு கயிறு மந்திரிச்சுக்கட்டியும் விட்டாள். அம்மனும் குணமாக்கிவிட்ட பாடாயில்லை.

புத்தர் கலட்டி பௌத்த பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தவள் 1968 ஏப்றில் கலவரங்களுக்காக தொடர்ந்தாற்போல் பத்துநாட்கள் மூடியிருந்த பாடசாலை மீண்டும் திறந்தபோது -சேதுவேராக்காரங்கள் பள்ளிக்கூடத்துக்குள்ளே பூந்து புள்ளங்களை அள்ளிக்கொண்டு போறாங்களாம்- என்று கள்ளம் பண்ணிக்கொண்டு சேதுவார (சேகுவேரா) தினங்கள் முடிய பள்ளிக்குப்போக மறுத்தேவிட்டாள்.
உள்ளதுக்குள்ள ஆளுமோ அச்சுப்பிச்சு, அதுவும் படிப்புமில்லையென்றால் இவள் எப்படித்தான் தன் காலத்தைத் தள்ளுவாளோ என்ற கவலையில் தகப்பன் பொன்னனும் எவ்வளவோ சொல்லி அவளைப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப் பார்த்தான். அவனால் முடியவில்லை.
“அம்மாவுக்கும் படிப்பு பத்தாதுதானே............... கையெழுத்து வைக்கத்தெரியா............. அவவைப் போகச்சொல்லு முதல்ல.”
மடுத்தது மடுத்ததுதான்.

சிங்கப்பூர் பென்சனியர் கைலாசநாதர் புத்தர் கலட்டியில் மேற்குத்தெரு வெள்ளாளரின் பள்ளக்காணி ஒன்றுள் கொட்டில் போட்டு குடியிருந்த பொன்னன்-லெச்சுமி குடும்பத்தை மாதம் இருநூற்றைம்பது ரூபாய் சம்பளம் பேசி அந்திரானை ஏற்றத்தில் தன்னுடைய தென்னந்தோப்புக்கு காவலாய் குடியிருக்கச்சொல்லி கொட்டிலும் போட்டுக்கொடுத்துக் குடிவைத்ததிருக்கிறார். லெச்சுமி ஆரம்பத்திலேயே பென்சனியரிட்டை நிபந்தனையாய் சொல்லிப்போட்டாள்.

“சம்பளத்தை என்ர கையிலதான் தரவேணும். அந்தக்குடிகார ஏக்கி கையில கொடுத்திட்டு என்னை அலைய விட்டிடாதையும்.”

கைலாயரும் நல்ல மனுஷன். அவர்களுக்கு வெளியில போய் வேறு வேலைகள் செய்யப்படாது அப்பிடியிப்பிடியென்று எந்த நிபந்தனையுமே விதிக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் காணி பார்க்க வரும்போதே காசை எண்ணி அவள் கையில் கொடுத்துவிடுவார்.
பொன்னனும் லெச்சுமியும் தோப்புக்கு குடிவந்தது முந்தாநாள் மாதிரியிருக்கு. இன்றைக்கு பதினேழு வருடங்களாகிவிட்டன.

அவர்கள் அங்கே குடிவந்த வருஷம் பிறந்தவள்தான் ஜெயலலிதா. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம். ஜி. ஆருடன் வந்து தெறித்த ஜெயலலிதாவைக் கண்ணோடு பொன்னன் கொண்டுதிரிந்த வேளைபார்த்து இவளும் வந்து பிறக்க உடனே ஜெயலலிதா என்று பெயர் வைத்துவிட்டான்.

பென்சனியர் கொடுக்கிறது கவுண்மேந்துச்சம்பளம் மாதிரி மாதாமாதம் அவர்களுக்கு வள்ளீசா சாப்பிட்டுப் பிழைக்க போதும்.
லெச்சுமியும் வெங்காய வைப்பு, தாளரிவை , மிளகாய் பிடுங்க என்று அச்சுவேலி இடைக்காடு வளலாய் ஈறாகப்போய் ஏதாவது சம்பாதிப்பாள். சம்பாதிச்சு பொன்னனுடைய கண்ணில காட்டாமல் சேர்த்துச்சேர்த்து வைச்சிருந்திட்டு எங்கையாவது வட்டிக்கு கொடுத்து பெருக்குகிறேனென்று கொடுத்து ஏமாந்துவிடுவாள். பொன்னனுடைய பாஷையில தாயும் மகளும் படு பேச்சியள். விபரம் பத்தாததுகள்.

பொன்னன் பேர்போன குழிவாள் அரிவுகாரன். நல்ல உழைப்பாளி. அதுவும் தான் மேல்வாள் அரிவுகாரனென்று அவனுக்கு சரியான லெவெல். நீர்வேலி திருநெல்வேலி அரிவு பட்டறைகளிலே சாதாரண முட்டாள் தர தொழிலாளிகளுக்கு 20 அல்லது 30 ரூபாய் சம்பளமென்றால் பொன்னன் அவர்களுடன் சதுரஅடிக்கணக்கில் வேலையைப் பொருத்தத்தில் பேசி எடுத்து தினம் 50 ரூபாய் உழைத்துக்கொண்டு வருவான். எவ்வளவுக்கெவ்வளவு உழைப்பாளியோ அவ்வளவுக்கவ்வளவு சோக்காளி.

முப்பது ரூபாய்க்கு எப்படியும் குடித்துவிடுவான். லெச்சுமி கையிலேயும் காசு புழக்கமிருக்கென்று தெரிந்தால் அவளிடம் ஒரு சதமும் தரமாட்டான். வேலை முடிந்த பின்னால்; ஊரிலுள்ள கள்ளுக்கொட்டில்; எல்லாம் எண்ணித் தடவிக்கொண்டு அவனால் சைக்கிள்; எனச்சொல்லப்படும் துருவேறிய அந்த இரும்புக்குழலில் ஏறி
“ அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடன் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா- உன்
தாயகம் காப்பது கடமையடா................ ” என்று பாடிக்கொண்டு வீடுவந்து சேர இரவு ஒன்பது பத்து மணியாகும.;
பொன்னனின் லைட் இல்லாத அந்த வாகனத்தை அதை அவன் ஓட்டி வருகையில் அதன் சக்கரங்கள் தோசை சுடுவதுபோல ஒரு மாதிரி ஓவலாய் சுற்றிச் சுற்றிவர பெல்லைத் தவிர்த்து அதன் ஏனைய பகுதிகள் அனைத்தும் ஒவ்வவொரு வகையான சத்தம் எழுப்பும். அதை பொன்னனைத் தவிர நல்ல சைக்கிள் சேர்க்கஸ் வித்தை தெரிந்தவர்களன்றி மற்றவர்கள் ஓட்டிவிட முடியாது.

கோழி கேருவது மாதிரி கேரிக்கொண்டு அவன் சைக்கிள் தூரத்தில் வரும்போதே தாயும் மகளும் கண்டுபிடித்துவிடுவார்கள்.

ஏதாவதொரு நினைப்பு வந்து வடையோ, வாய்ப்பன்னோ அல்லது வேறேதாவது தின்பண்டமோ வாங்கிவந்தால் வாசலிலேயே “லலிதாக்குட்டி............ லெச்சுமிச்செல்வம்” என்று அன்பு பெருகச் சத்தமாகக் கூப்பிட்டுக்கொண்டு வருவான்.
லெச்சுமியும் நல்ல மூடிலிருந்தால் “ஓய்;...........ஓய்..........ஓய்” என்று கொண்டு வாசலுக்கே போய் அவனை வரவேற்பாள்.

பொன்னனுடைய ஒரு நல்ல பழக்கம் எத்தனை மணிக்குத்தான் இரவு வந்து படுத்தாலும் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைக்குப்போவான். அதனால் அவனது வேலை வட்டகையிலும் நம்பகமான ஒரு தொழிலாளியென்று அவனுக்கு நல்ல பெயர்.

பொன்னன் மனம் மிக மகிழும் மற்றொரு விஷயம் சினிமா.
நாடோடி மன்னன், மனோகரா, ஹரிதாஸை 50 தடவையும், மன்னாதிமன்னன் , பக்கீஷா, அஞ்சானாவை, கீத்தை 40 தடவையும், , பாசமலர், மர்மயோகி , சித்திரலேகா, அனார்க்கலி, சர்வாதிகாரி, உத்தமபுத்திரன், வணங்காமுடியை 30 தடவையும் பார்த்ததாகச் சொல்லுவான்.

பொன்னனுக்கு நல்ல குரல் வளம். கொஞ்சம் கள்ளு உள்ளேபோய் பிசிறுகள் எடுபட்டு தொண்டை திறந்த பின்னால் எடுத்த எடுப்பிலேயே மேல் ஸ்தாயியிலேறி-

எங்கள் திராவிடப்பொன்னாடே
கலை வாழும் தென்னாடே
இயலிசை நாடகம் அறம் பொருளின்பம்
இலங்கும் செந்தமிழ் நாடே................ என்று பாடினானேயானால் சும்மா டி. ஆர். மஹாலிங்கமே உயிர் பெற்று வந்துவிட்டது போலிருக்கும்.
“இவ்வளவு படம் பார்த்திருக்கிறியே................ ஒரு படத்துக்கும் லெச்சுமியைக் கூட்டிக்கொண்டு போறேல்லையே?”
“கட்டின புதிசில அவளையும் மூன்று நாலு படத்துக்கு கூட்டிக்கொண்டுதான் போன்னானணை................. அது பேய்க்கு கதை ஒண்டும் விளங்காதும். இடையில நாரியுக்கை உளையுது வீட்டைபோவம் எண்டுவள்............ கரைச்சல். இப்பிடித்தான் எங்க வீட்டுப்பிள்ளை பட இடைவேளைக்குப் பிறகும் கேக்கிறாள் இது வேறை படமோவெண்டு.............. எனக்குச் சங்கையீனமாய்போச்சும்.”

தனியப்போய் ஒரு சின்ன(அரை)ப்போத்தல் எடுத்து மடியிலை சொருகி வைத்துக்கொண்டிருந்து இடைசுகம் தொண்டையை நனைச்சுக்கொண்டு ஃபோர் ஏசெஸ் புகையை நெஞ்சுக்கு ஏத்திக்கொண்டு (அப்போதெல்லாம் தியேட்ருக்குள் சிகரெட்டுப் பிடிக்கலாம்) படம் பார்க்கிற சுதிக்கு லெச்சுமி மாதிரி ஆட்களின் கூட்டெல்லாம் இடஞ்சல்.
எம். ஜி. ஆரின் ஃபைட்டுகளுக்கு, லவ் சீன்களுக்கு எவ்வளவுதான் விசிலடிச்சிருந்தாலும், சிவாஜியின் எத்தனையோ படங்களுக்கு வெறியில்லாமல் அழுதுமிருக்கிறான். எம்.ஜி.ஆரோ சிவாஜியோ என்று விவாதம் வந்திட்டால் மாத்திரம் பொன்னன் எப்போதுமே எம். ஜி. ஆரின் சைட்தான்................... சிவாஜி ரசிகர்களை ஓரம் கட்டவே பார்ப்பான்.
அதுக்கொரு தக்க காரணமில்லாமலுமில்லை.
-ரசிகர் மன்றப்பத்திரிகைகள் எல்லாம் படிக்கிற, விஷயம் விளங்கின- யாரோ சொன்னவையாம்
சிவாஜியை ரசிகர்கள் அபிமானிகள் என்று சாமானியர் யாரும் போய் இலேசில் நெருங்கவோ பேசவோவெல்லாம் முடியாதாம். ஆனால் பொன்மனச்செம்மல் அப்பிடியில்லையாம். அவரைப் பார்க்கவென்று எந்தவொரு மனிதன்தான்; அவர் வீட்டுக்குப்போனாலும் ஒரு நிமிஷமென்றாலும் பார்த்து பேசி விசாரிச்சு சாப்பிடவைத்துத்தான் அனுப்புவாராம். சிலபேர் அவர் சும்மா பேருக்காகக் கொடுத்தார், புகழுக்காகக் கொடுத்தார், வாரிசு இல்லாததால கொடுத்தார் என்றெல்லாம் விமர்சிப்பாங்கள்தான்............ காரணங்கள் ஒரு பக்கம் இருக்கட்டுமே.................. மனுஷன் கொடுத்தான் அதுவல்லோ முக்கியம்;. அதனாலே அந்த வள்ளல் மேலே அவனுக்கு அபரிமிதமான அபிமானம், பக்தி .

அவர் குண்டடிபட்டு இருந்தபோது இவன் இரண்டு நாள் சாப்பிடவேயில்லை. பிறகு இந்தியாவுக்கு போன யாரிடமோ அவருக்கு இரண்டு போத்தல் ஹோர்லிக்ஸ்; வாங்கிக்கொடுத்து விட்டிருக்கிறானென்றால் பாருங்கள்.

பொன்னன் சனிக்குச்சனி எந்த ஊரிலிருந்தென்றாலும் கிடாய் பங்கெடுத்து முழுகத் தப்பமாட்டான். முழுக்கு நாட்களில் அவன் பாவிக்கிறதெல்லாம் வைள்ளைப்போத்தல் தான். அவன் அப்பிடி முழுகி கீறி சாப்பிட்டு நல்ல மூட்டோடு இருக்கிற மாலை நேரங்களில் பாடச்சொல்லியோ, பழைய படக்கதையோ கேட்டுப்பார்க்கவேணும். பிறகு படத்திற்கே போகத்தேவையில்லை.
படம் பிடிச்ச டைரக்டரே அத்தனை சீன்களையும் ஞாபகம் வைத்திருந்து அப்படி முழுக்காட்சிகளையும் ஒழுங்காய் விபரித்துவிடுவாரோ தெரியாது. பொன்னன் மிக நுணுக்கமாக விபரித்து சரியான கட்டத்தில சரியான பாடலைப்பாடி அசத்துவான்;. நித்திரையில்தான் எழுப்பிக்கேட்டாலும் மனோகரா, பராசக்தி, மஹாதேவி வசனங்கள் அனைத்தையும் பிசகாமல் பேசிக்காட்ட அவனால் முடியும்.

இவர்கள் வதியும் தோப்பை அடுத்திருப்பதுதான் முருகேசர் வளவு. இவர்கள் நயநட்டங்கள் நல்லது கெட்டதுகள் எல்லாத்துக்கும் ஒருவகையில் அந்தக்குடும்பம் ஒரு போக்கிடம் மாதிரி. முருகேசர் மனைவி நல்லபிள்ளையிடந்தான் லெச்சுமி பொன்னனைப் பற்றிய புகார்களையைல்லாம் கொடுத்து வைப்பாள். புகார்கள் அங்கே கோப்புக்கள் நிரம்பும்போது நல்லபிள்ளை பொன்னனைக் கூப்பிட்டு புத்திமதிகள் சொல்லுவார்.
லெச்சுமியும் விவரம் மட்டான ஆள்தான். கிழக்கே மட்டுவில் கண்ணகை அம்மன் கோவில், மேற்கே புன்னாலைக்கட்டுவன், வடக்கே மறவன்புலவு(பிறந்தகம்), தெற்கே வல்லிபுரக்கோவிலுக்கு அப்பால் இப்புவிப்பந்தில் வேறொரு சிற்றூரைத்தானும் அவள் பாதங்கள் பரவியதில்லை. வற்றாப்பளை அம்மனை ஜீவிதத்தில் ஒரு தடவையாவது தரிசித்துவிட வேணுமென்ற தீராத கனவு ஒன்று அவளுடன் எப்போதுமே உண்டு.

நல்லபிள்ளை வீட்டுக்கு ஒரு நாள் ஏதோ அலுவலாக வந்த லெச்சுமி இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு அவரிடம் குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டாள்:
“மெய்யாலுமணை............... இனிமேல் சின்னத்தம்பிதான் (அரியாலையிலிருந்து வந்து இவர்களது குடியிருப்புத் தோப்புக்குள் கள்ளுக்கட்டிறவர்) சி.ஐ.டியாம் எங்கவூருக்கு................?”

“ஆர்.............. சொன்னது?”

“இல்லை ஊருக்கை பரவலாய் பறையினம்............. எதுக்கும் என்னத்துக்கும் வீண் வில்லங்கத்தை.......... நீரெதுக்கும் ஆளோடை கண்டபடி கதை வச்சுக் கொள்ளாதையும்............”

குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளாவது தண்ணி அள்ள, சமையாத நாட்களில் கொஞ்சம் கறி சோறுவாங்க , துண்டுபொறுக்க (தைத்து மீந்தவை) என்று இப்படி ஏதாவது அலுவல் ஜெயலலிதாவுக்கும் அங்கு இருக்கும்.

ஜெயலலிதாவுக்கு அப்போது ஒரு பத்து வயதிருக்கும். ஒரு நாள் அவள் முருகேசர் வீட்டு முற்றத்தில் முழிசிக்கொண்டும் மயிந்திக்கொண்டும் நிற்கிறாள். அவர் நடுவில் மகன் ஆனந்தராகவன் கண்டு அவளை என்ன விசயமென்று விசாரித்திருக்கிறான்.
“ரெண்டு ஈச்சங்கொட்டையை விழுங்கிப்போட்;டன்.................. அதுதான் என்னாலும் செய்யுமோவெண்டு...................”
“எத்தினை?”
“ர்ர்ர்ர்ரெண்டு”
“அட நாசமே இனி வயித்துக்க முள்ளீஞ்சு முளைச்சு வாயாலேயெல்லே குலை தள்ளப்போகுது.................. அதுவும் ரெண்டு விழுங்கியிருக்கிறாய் ஒண்டு முளையாட்டிலும் மற்றது கட்டாயம் முளைக்குமென்ன......... எப்பிடியும் கட்டாயம் ஒப்பிறேஷன் செய்துதான் கொட்டையளை எடுக்கவேணும்........”
“என்ர ஐயோ...............!”
குழறிக்கொண்டு வீட்டுக்கு ஓடிப்போய்; அங்கும் தாயோடு சொல்லி குத்தி முறிஞ்சிருக்கிறாள்.
இரவு பார்த்தால் அழுது ஓய்ந்து விக்கிக்கொண்டிருந்த ஜெயலலிதாவை போர்த்தி மூடிக்கொண்டு கை லாம்பு வெளிச்சத்தில் கூட்டி வந்தாள் லெச்சுமி.

“மெய்யத்தான் இவளுக்கு ஒப்பிரேசன் பண்ண வேணுமோவும்?”

“போங்கடி வேலையத்த இவளுகளே...............”

நல்லபிள்ளை இருவரையும் ஏசி அனுப்பினார்.

(2)

இன்று பொன்னனும் வேலைக்குப்போய்விட்டான். தாயும் காய் (வெங்காய) நடுகைக்கு எங்கேயோ போய்விட்டாள். காலையிலே தாய் சுட்டுக்கொடுத்த தோசையைச் சாப்பிட்டுவிட்டு இருந்தவளுக்கு மொய்த்த மாதிரி ஒரு குட்டித்தூக்கம் சுழற்றிக்கொண்டு வரவே பாயை விரித்துப்படுத்தாள். பன்னிரண்டு மணிக்கு மேல் தற்செயலாக விழிப்பு வரவும் தாய் தன்னைக் கருவாட்டுக் குழம்பும் வைத்து சோறும் வடிக்கச்சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது. அரக்கப்பரக்க எழுந்து அலுமினியக் குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணிக்காக முருகேசர் வீட்டுக்கு ஓடினாள்.

அங்கே ஆனந்தராகவன் பல்கலைக்கழக புகுமுகத்தேர்வுக்கு இரண்டாந்தடவை தோற்றுவதற்குத் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறான். சோதனைக்கு இன்னும் எண்ணிப் பதினொருநாட்களே இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்திலும் மீட்பதற்கு மலையளவு விஷயங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா வழக்கம்போல ஆனந்தராகவன் படித்துக்கொண்டிருந்த அறை ஜன்னல் எதிரில் வந்து நின்றுகொண்டு வெள்ளோந்தி போலத் தலையைச் சாய்த்துக்கொண்டும் கண்வெட்டாதும் அவனைப் பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் அவனுக்கு எரிச்சல் பீறிட்;டுக்கொண்டு வந்தது.
அவளின் துவணை தவாளிப்புகள் ஏதுமற்ற நோஞ்சான் உடம்புக்குச் சம்பந்தமில்லாதவாறு கொந்தாலி மாதிரி முகைச்ச அவள் மார்புகள் சரியாக கவசமிடப்படாததால்;; செவ்வனே தெறியோ ஊசியோகுத்தப்படாத சட்டையூடாக துருத்திக்கொண்டு -வண் கேர்ள் ஷோ- காட்டுகின்றன. பார்வையை மட்டும் இப்படி எங்காவது ஃபோகஸ் பண்ணிவிட்டாளேயென்றால் இதுமாத்திரமல்ல அரையான்தான்; அவிழ்ந்து விழுந்தாலும் அவளுக்கு ஸ்மரணை இராது.

ஆனந்தராகவன் முன்பொரு தடவை அவளுடையை டிறேட் மார்க் பார்வையைப் பரிசோதிக்ப்போய் 1000கிலோ வோல்ட்ஸ் மின்சாரத்தால் தாக்குப்பட்டுமிருக்கிறான்.

ஒரு நாள் மாலை, வீதியால்; எங்கேயோ தன்னுடைய ஊர் வாசிகசாலையில் மாலைவேளைகளில் நண்பர்களுடன் சேர்ந்துவைக்கும் அரிவரங்கத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறான். எதிரில் வந்த ஜெயலலிதா இவனைப் ஃபோகஸ் பண்ணுகிறாள். அவளைத் தான் கடந்துபோன பின்னாலும் தன் பின்பக்கத்தையும் அப்படி ஃபோகஸ் பண்ணிக்கொண்டுதான் நிற்பாளோ என்றொரு ஐமிச்சம்; இவனுக்கு. சட்டெனத் திரும்பிப்பார்த்தான். அவள் நின்று அவனையே பார்த்துக்கொண்டுதான் நிற்கிறாள்.
ஏதாவது விஷமம் பண்ணவேணும் போலிருக்கவே மெல்ல ஒற்றைக் கண்ணை சுருக்கினான். சட்டெனப் பதிலுக்கு ஜெயலலிதா மின்னி அடித்தாளே கண். மார்லின் மன்றோ கெட்டாள் போங்கள்.
போலந்து வொட்கா ஒரு லிட்டர் -றோ-வாக இறக்கின மாதிரி தலைக்குள் கிறுகிறுத்தது அவனுக்கு.
அம்மா நல்லபிள்ளை மதியம் சமையலுக்கு மீன் வாங்கிவர காரைக்கூடல் வைரவர்கோவில் புளியடிப்பக்கம் போயிருக்கிறார். தம்பியும் தங்கையும் பள்ளிக்கூடம் சென்றுவிட்டிருந்தனர். அக்கா நீலாவதி மாதவிலக்கு இரண்டு மாசத்துக்குமேல் தள்ளிப்போனதால் ஐந்தாவது தடவையும் பிள்ளையோ என்ன கோதாரியோ என்ற பயத்தில் செக் பண்ணுவிக்க கிளினிக்குக்கு போய்விட்டாள்.
அவர்கள் திரும்புவதற்குள் முன் ஒரு கோல்ட் லீஃப் புகைக்கவேணும்.
இந்த நேரம் பார்த்து இவள் மோகினிப்பார்வையோடு வந்து நிற்கிறாள்.
“என்ன...?” வெறுப்பாகக் கேட்டான்.
கண்களை ஒரு நடன பாவத்துடன் தாழ இறக்கி குடத்தைக் காட்டினாள்.

அவன்தானே கிணற்றடிக்கு எழும்பிப்போய் அவள் குடத்திற்கு தண்ணீர் அள்ளி வார்த்துவிடவேண்டும். எரிச்சல் வராதா பின்னே?
“ நீ ஏன்டி புத்தர் கலட்டிக்குள்ள வந்து பிறந்து தொலைச்சாய்? ”
(ஜெயலலிதா மனதுள்: - ம்............... இல்லாட்டி வந்து தாலிகட்டிப்போடுவர்-)
“என்ன அங்க முணுமுணுப்பு?”
“ எணே சாத்திரியும் மெய்யாலும் சொன்னவர் என்ர குறிப்புப் பலனுக்கு எனக்குச் சீமையில பிறக்கிற யோகமாம்................ துர்க்கிரகமொண்டு எங்கையோ குறுக்கால பாத்து கணக்;கைக் கெடுத்துப்போட்டுதாம்...........”
போலியாக நீளப்பெருமூச்செறிந்தாள்.
“ ஆரை............. ?”
“ ...........என்னை.......... ”

ஊருக்கென்னவோ ஜெயலலிதா பேச்சிதான். அவளுடன் பழகுகிறவர்களுக்குத்தான் சரியான ரைமிங்கில் தடாலடிப்பதில்கள் தர அவளுக்குள் ஒரு ராணி அப்புக்காத்து இருப்பது தெரிய வரும்.

“வீட்டில ஒருதருமில்லை நீ சத்தம்போடாமல் தண்ணியை அள்ளிக்கொண்டு போ..”
“ஆத்தே.............. கமக்காறிச்சி கண்டால் கிளிச்சுக்காயப் போட்டிடும். ”
( அவள் -கமக்காறிச்சி- , -எசமாட்டி- என்று கிண்டல் மிகையாகுபெயர் கொண்டு அழைப்பதெல்லாம் அவனது தாயைத்தான். )
“அவ ஒண்டுங்காணமாட்டா............. நான் சொல்றன்....... நீபோய் அள்ளெண்டிறன்.......... எனக்கு கனக்கப்படிக்க வேணும்.”
“ நீ என்னத்துக்கு படிக்கிறாய்...............?”
“ஆங்............. என்னத்துக்கெண்டு இப்ப சொல்லேலுமே பன்னிரண்டாம் வகுப்பெண்டு வையன்.”
“ பெறவு........ பெரீய உத்தியோகம் கிடைக்குமாக்கும்.................”
“ நீ இதில நிண்டு ஞாயம் பண்ற நேரத்திற்குத் தண்ணி அள்ளிக்கொண்டு போடுவாய்......... போடி. ”

ஏதோ எதிர்காற்றில் நடப்பவள் போலப் பிரயத்தனப்பட்டு நடந்து போனாள். கிணத்தடிக்குப் போனதும் துலாவில் தண்ணியிறைக்கும் சத்தம் கேட்டு யாராவது மற்ற வளவுக்காரர்கள் பார்க்க நேரலாமென்று அவளுக்கு பயம் வந்தது. நல்ல நீளக்கயிறொன்று வளையமாடி கிழுவங்கதியாலில் கொழுவியிருந்தது. அதை எடுத்து தனது குடத்தில் கட்டி மெல்லக் கிணற்றினுள் இறக்கினாள். உருவுதடம் கழுத்தில் சரியாக இறுகவில்லை. குடம் தண்ணி மொண்டுகொண்டதும் கிணற்றுள்ளேயே நின்று கொண்டது.

“போச்சு போச்சு.................. ஓடியா............ ஓடியா.” என்று கைகளைக் காற்றில் வீசியபடி கத்திக்கொண்டு கொண்டு திரும்பி ஓடிவந்தாள்.
“என்னடி போச்சு................?”
“குடம் கிணத்துக்க விழுந்து போச்சு.”
“ ம்....... கெட்டிக்காரி.......... அதையேன் போட்டுத்தொலைச்சனி?”
விழிகள் வெளிப்பிதுங்க முழுசினாள்.
இவளிடம் விசாரணை வைக்க இது நேரமில்லை. வீட்டுக்கோடிக்கு ஓடிப்போய் அங்கு அசப்பிலிருந்த கொக்கைத்தடியை எடுத்துவந்து கிணற்றுக்குள் இறக்கினான் ஆனந்தராகவன். குடமிருந்த பக்கம்நிழல் விழுந்து இருட்டாகவிருந்தது. குடம் சரியாகத் தெரியவில்லை. அதன் வாயுள் சத்தகத்தைக் கொழுவ பகீரதப்பிரயத்தனம் வேண்டியிருந்தது. திரும்பத் திரும்ப முயன்றான். முதுகால் வியர்த்து வழிந்தது.

தானே தண்ணியை இறைத்துவிட்டிருந்தால் இந்த விபரீதமெல்லாம் ஏற்பட்டிருக்காதேயென்று தன்னையே நொந்துகொண்டு மீண்டும் கொக்கையை கீழே இறக்கினான். அது குடத்துக்கு வெளியே எங்கேயோ போனது.
“உனக்கு எடுக்கத்தெரியாது போலை கிடக்கு.....................”
அவளது விமர்சனத்துக்கு காது கொடுத்தால் இப்போ காரியமாகாது. மீண்டும் முயற்சித்தான்.
“உனக்கு எடுக்கத்தெரியாது போலதான் கிடக்கு....................”
அவன் எரிச்சலுடன் நிமிர்ந்து அவளைப்பார்க்க.........
ஜெயலலிதா அவனை மேற்கண்ணால் கிண்டல் பார்வை பார்த்துக்கொண்டு ஒரு சரச மூட்டில் நிற்கிறாள்.
இம்முறை ஒருவாறு கொக்கசை;சத்தகத்தின் அலகு குடத்தில் கொளுவிவிட்டது. மெல்ல மெல்ல மேலே தூக்கினான்.

“ அட.............க்கெட்டிக்காறன்தான்.................. ஆரும் எடுக்கிற மாதிரி எடுத்தா எடுபடுமென்ன.....................”
“ உன்னுடைய பாராட்டுக்கு மிச்சம் நன்றி. நீ கெதியாய் தண்ணியைக் கொண்டு இடத்தைக்காலி பண்ணு...... ?”
“எஎஎஎன்ன கலைக்கிறாய்............... என்னை................ நீயெல்லே முந்தி வளைச்சனி............?”

ஏதும் முற்பிறப்பு ஞாபகத்திலிருந்து பேசிறாளோ.............. இந்த நவீன சகுந்தலையைக் கண்டு ஆனந்தராகவனுக்கு திகில் உண்டானது.

“என்னடி............ என்ன பேத்துறாய்............?”
“ இல்லை......... முந்தி நீ என்னை வளைச்சதை அயத்துப்போனியோ என்டிறன.;...........”

“பேந்து.........?”

“ம்ம்ம்ம்..............பேந்து........ நான் வளைய................ தான்.............தொப்பெண்டு விட்டிட்டு. ”

“ நில்லிஞ்சை வேசைக்குமரி............... எப்பவடி நானுன்னை வளைச்சனான்.................... இண்டைக்கு உனக்கு இதால சாத்தாமவிடன்...........” என்றுகொண்டு அவள் குடத்துக்குப் போட்ட கயிற்றை நாலாய் மடித்துக்கொண்டவன் துரத்தத்தொடங்கவும்; தண்ணிக் குடத்துடன் ஓடி மறைந்தாள்.

இது வெறும் முசுப்பாத்தியல்ல. வரவர ஜெயலலிதா நல்லாய் கெட்டுத்தான் போனாள். பேச்சுத் தொனி மாத்திரமல்ல அவளின் போக்கு வாக்குகளிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். ஆனந்தராகவனுக்கு இவள் ஏதாவது வில்லங்கத்துள் தானாகவே போய் மாட்டிவிடுவாளோ என்று பயமாகவிருந்தது. இதைப்பற்றி யாருடன்தான் பேசமுடியும்?
ஒரு வயதுக்கு வந்திட்டமே என்ற பாங்கினை இல்லாமல் தன் பாட்டுக்கு குதிச்சுக்கொண்டும் குலுக்கிக்கொண்டும் திரிந்த ஜெயலலிதாவை நீலாவதி ஒரு நாள் கூப்பிட்டு -நீ இனிமேல் இதைப் போட்டுக்கொண்டுதான்; ஆட்களுக்கு முன்னால் வரவேணும்- என்று சொல்லி தன்னுடைய இரண்டு உட்சட்டைகளைக் கொடுத்தனுப்பினாள்.

அடுத்து தீபாவளி வந்த கையோடு பொன்னன் கையிலும் நல்ல காசுப்புழக்கம். ஜெயலலிதாவுக்காக நிறைய துணிமணிகள் வாங்கினான். நீலாவதியும் அவைகளில் நல்ல நவீன பாணிகளில் சட்டைகள் தைத்துக்கொடுத்தாள்.

புதுச்சட்டைகள் கிடைத்த பின்னால் ஜெயலலிதாவும் நல்லாய் ஸ்டைல் பண்ண வெளிக்கிட்டிட்டாள். எப்போ பார்த்தாலும் கியூட்டிகுரா பவுடர் வாசம் தூக்கியடிக்குது அவளிலை. மங்கி குறொப்பெல்லாம் வெட்டியிருக்கிறாள். பின்னலைப்பின்னி இப்போவெல்லாம் முன்னுக்குத்தான் விடுகிறாள். பாவாடைக்கு மாட்சாக அடிக்கடி அரைத்தாவணிகளை மாற்றிக்கொள்கிறாள். கூப்பன் கடைக்கு போவதென்றாலும் மறவாமல் கியூடெக்ஸ் எல்லாம் அடிக்கிறாள். மறவன்புலவிலிருந்து மாத்திரமல்ல வதுரி விழான் பக்கமிருந்தெல்லாம் விடலைப்பெடியள் இப்போ அடிக்கடி பொன்னன் வீட்டுக்கு மாமா மாமியென்று முறைகள் சொல்லிக்கொண்டு வருகினம். இரவிலை பத்துப்பதினொரு மணிக்குப் பிறகும் ஒரே அமர்க்களமாய் அந்தப்பக்கம் கதைச்சுச் கேட்குது.

ஆனந்தராகவனும் ஊரவர் எல்N;லாரும் வந்து கிணத்தில தண்ணி அள்ளிக்கொண்டுபோக அனுமதிக்கவேணும் என்று வீட்டில் பலதடவைகள் போராடித் தோற்றுப் போயிருக்கிறான்.
“ஊரோடினால் ஒத்தோடு............... தனித்தோடினால் பார்த்தோடென்றிருக்கு............ ஊரோடேக்கை நாங்களும் ஓடுவம். இப்ப தனித்தேடேலாது மகன்.”

“நாங்கள் முன்மாதிரியாய் செய்துகாட்டுவம்.......... ஊரும் பின்பற்றும்.”

“உடுவில் எம்.பி வீட்டில(அப்போது ஒரு தலித்து இருந்தார்) ஒரு பத்துப்பேர் போய் எங்கட வீடு ஒழுக்காய் கிடக்கு............... இண்டைக்கிஞ்சை படுக்கப்போறமென்று கேட்டுப்பாருங்கோ.............. இதென்ன பொதுமடமோ என்று உங்களைத்துரத்தாமல் படுக்க விட்டிட்டார் எண்டால் நானும் விடுகிறன்............. உன்ர வீட்டுக்கை உள்ளட்டுப்படுக்கிறன் என்கிறதும் உன்ர கிணத்தில தண்ணி அள்ளுறன் என்றதும் ஒருவகை அராஜகம் அத்துமீறல் மகன். தருமமில்லை. வீட்டுக்கிணறு வேறை பொதுக்கிணறு வேறை. என்னுடைய கிணத்தில யாரை அள்ளவிடுகிறதெண்டது என்னுடைய சுதந்திரம். இதில யாரும் தலையிடேலாது.”

தகப்பன் தத்துவம் பேசினார்.

இந்த விடாக்கொண்டர் இருக்கும்வரை அது சாத்தியப்படப்போவதில்லை என்றுதான் அப்போது நினைத்தான். ( பிறகு இந்த குலக்கொழுந்து முருகேசரின் சாதி அபிமானம் கோத்திரம் மரபுகளெல்லாம் மண்ணில் கொட்டுண்டு பரவுப்படுகிற மாதிரி ஆனந்தராகவன் பின்னாளில் வேறொரு காரியம் பண்ணினான். அவ்வூரில் ஜாதியத்தின் உக்கிரம் தணியும்படியாக அதுபோல் வேறும்பல சம்பவங்கள் நடந்தேறின. அவை பிறிதொரு சந்தர்ப்பத்தில்; தனியாக.)

(3)

பொன்னனும் லெச்சுமியும் வருஷத்தில் அனேகமான நாட்கள் சந்தோஷமாகவே இருப்பார்கள். எப்போதாவது பொன்னன் மிகையாக குடித்துவிட்டு வரும்நாளில் லெச்சுமி சமைக்காது விட்டிருந்தால் மட்டும் வந்ததும் ஏறுப்பாடுதான். அவர்கள் சண்டை கேட்க சுவாரஸியமாயுமிருக்கும். அடிக்கடி அவர்கள் வீட்டிலிருந்து கேட்கும் வசனம்

“ தங்காளைக்காட்டி அக்காளைக்கட்டி வைச்ச நாய்க்கூதியள்தானேடி நீங்கள்? ”

“ எட............ பனங்கள்ளு மொய்ப்போட பொம்பிளை பாக்க வந்து தலையைக் கவிண்டுகொண்டிருந்திட்டு........... தங்காளைப் பாத்திட்டுப்போன சொரமணையத்த சீமனோட வந்த என்னைக்கேளன். ”

சண்டை உக்கிரம் அதிகமானால் பனங்காய் விழுந்தமாதிரி லெச்சுக்;கு மொத்திக்கேட்கும். அனேகமாக அவனுக்கு அகப்படாமல் தோப்புவேலியிலிருக்கும் நீக்கலை விரிசலாக்கிவிட்டு ஆனந்தராகவன் வீட்டுக்கு ஓடிவந்து நல்லபிள்ளையிடம் முறையிடுவாள்.
மறு நாள் நல்லபிள்ளையின் பஞ்சாயத்து நடக்கும்.
“ ஏன்ரா தின்னி............ நீ உழைக்கிறதை அப்பிடியே கோப்பிறேசனில குடுத்திட்டு வந்தா உன்ர பெண்டில் பிள்ளையள் என்ன காத்தையே குடிக்கிறது? ”


“ எணே கண்ணாணை நேத்தும் அவளிட்டை அம்பது ரூபாய் குடுத்தனானும்................. அதைமுடிஞ்சு மறவன் புலவுக்கு அனுப்பிப்போட்டு இண்டைக்கு அரிசியில்லை சமைக்கேல்ல என்று மாய்மாலம் வடிக்கிறாள் நீலி கேளும். ”

பிறகு லெச்சுமிக்கும் தனியாக அர்ச்சனை விழும்.

“ மோளையுமெல்லோ வேலைக்கு கூட்டிக்கொண்டு போறனி.............. பிறகென்ன அரிசிப்பஞ்சம் வந்ததுங்களுக்கு............ பசியோட வாறவனுக்கு ஒரு சுண்டு வடிச்சுப் போடிறதுக்கென்ன உனக்கு............? ”

“.............. ம்ம்ம்ம்ம் அவளெங்கையணை உழைக்கிறாள்............... காய் அரிய வந்தால் மோட்டைப் பார்த்துக்கொண்டிருப்பள். மோட்டைப் பார்க்கிறதுக்கும் ஆரும் சம்பளம் குடுக்கினமே? ”

ஒரு இரவு நல்லபிள்ளைக்கு மாவிடிக்க உதவிக்கு ஜெயலலிதா வந்திருந்தாள். வீட்டிலிருக்க லெச்சுமிக்கும் பொழுதுபோகவில்லை. சற்றுநேரம் கழித்து அவளும் அங்கே வர ஜெயலலிதா தாயைக்கேட்டாள்: “எணை நான் அடுக்களைத் தட்டியைச் சாத்தாம வந்திட்டன்.............. இக்கணம் கோழி உள்ளட்டுக் கொத்தப்போகுது................. நீ வரேக்க சாத்தின்னியேணை?”
“ம்ம்ம்ம்…………............ அங்கே என்ன கிடக்கு கொத்த...................?”
ஒற்றை வாக்கியத்தில் வீட்டு நிலமை பிரத்தியட்ஷம்.
லெச்சுமி விறாந்தையில் சுவரோடு சாய்ந்து கால்களை நீட்டி உட்கார்ந்தாள்.


“காட்டிலே நரி முயலைப் பிடித்து இரையாகக்கொள்வது பழியில்லையென்றால்.................
புலி மானைப் பிடித்துப் புசிப்பது பாவமில்லையென்றால்...................
நான் மஹாதேவியை அடைய விழைவது மட்டும் அதர்மமாகுமோ? ஹஃஹஃஹஃஹா................!!!!!!!! அடைந்தால் மஹாதேவி...........!!!!!! அன்றேல் மரணதேவி............!!!!!!”

பொன்னனின் உணர்ச்சிகரமான மஹாதேவி பட வசனங்கள்; அவர்கள் வீட்டுலிருந்து வந்தன.
“வசனங்கள் தூள் பறக்குது..................கொப்பன் வந்திட்டான் போலை...?” நல்லபிள்ளை கேட்டார்.
“ஏதோ கோப்பிறேசனிலை வேளைக்குக் கள்ளொழிஞ்சுதாக்கும்...............” என்றுவிட்டு கழுத்தை நொடித்தாள் ஜெயலலிதா.
“வேலையாலை வந்தவனுக்கு பசிக்காதே............... இந்தப் மாவைக் கொண்டுபோய் அவனுக்கு புட்டைக்கிட்டைக் குத்திக்குடு.” என்று அவர் அரித்த மாவில் கொஞ்சத்தை பொட்டலம் பண்ணிக் கொடுக்கவும் லெச்சுமி வாங்கிக்கொண்டு போனாள்.

தாய் போன பின்னால் நல்லபிள்ளையுடன் பெரிய மனுஷித்தோரணையில் தகப்பனைப் பற்றிப்புகார்களை அடுக்கிக்கொண்டே மாவிடித்தாள்.
“ உவர் ஒரு பிள்ளையெண்டு என்னத்தை எனக்குத் தேடிவைச்சிருக்கிறார்.................... கோடி நிறைய சாராயப் போத்திலுவள்தான் கிடக்கு............. எவன் வரப்போறான் உதுக்கு?”

நல்லபிள்ளை வேறேதோ அலுவலாய் சற்றே விலகியதும் ஆனந்தராகவன் ஜெயலலிதாவைக்கேட்டான்:

“வெளியூர் நாய்களும் இந்தப்பக்கம் இப்ப கனக்கப் புழங்குது போலை..................?”

“………ம்ம்ம் உள்@ர் நாய் கடியன் எண்டால் ஏனாமணை வெளியூரானுகள் சுத்துது?”
பொல்லைக் கொடுத்து வாங்கிக்கொண்ட அடி வேகமாய்; அவனை அறைக்குள் செலுத்திற்று.

மாவிடித்து முடிந்து சாப்பாடானதும் ஜெயலலிதா காலால் நிலத்தில் வட்டம் போட்டுக்கொண்டு நல்லபிள்ளையிடம் சொன்னாள்:
“நாளைக்கு வல்லிபுரக்கோயில் சித்திரைப் பௌர்ணமி விசேசமாமணை. சனம் கொஞ்சம் வான் பிடித்துப்போகுது நாங்களும் பொங்கப்போறம்.”
நல்லபிள்ளை நாலாக மடித்த பத்து ரூபாய் நோட்டொன்றை அவளின் கைக்குள் வைக்கவும் இருட்டுள் ஓடி மறைந்தாள்.

அடுத்த நாள் பொங்கலுக்கு புதிய பானையும் வேண்டிய ஏனைய சாமான்களையும் வாங்கிக்கொண்டு ஜெயலலிதாவும் லெச்சுமியும் சி;ற்றுந்திலேறிக் குதூகலத்துடன் கோயிலுக்குப் போனார்கள். ஜெயலலிதாவிடம் தனியாக பத்து ரூபா பொன்னனும் கொடுத்துவிட்டிருந்தான்;.

சிற்றுந்தில் ஆரவாரமாய் வல்லிபுரக்கோவிலில் போயிறங்கிய ஜெயலலிதா அடுப்புக்கல்லுகளை நகர்த்தி வந்து பொங்கல் உலையேற்றும் வரையில் தாய்க்கு ஒத்தாசை பண்ணிக்கொடுத்தாள். உலை கொதிக்க நேரமாகும் போலிருக்க ஜெயலலிதா ஆசையாய் தேன்முறுக்கு ஒன்றை வாங்கிக்கடித்துக்கொண்டு கோயிலைச் சனத்தை கடைகளைச் சுத்திப்பார்ப்பமென்று புறப்பட்டாள்.

லைட் இஞ்ஜின்காரர் குலையுடன் நாட்டியிருந்த வாழைமரங்களில் உலக்கைநாத வெளிச்சங்களைப் பொருத்திக்கொண்டிருந்ததை சற்றுநேரம் வேடிக்கை பார்த்தாள்.
அது அவ்வளவு சுவாரஸியமாய்ப் படவில்லை அவளுக்கு. அப்பாலே மெல்ல நகர்ந்தாள்.
அச்சுவேலி பஸ்நிலையத்தில் வாடகைக்கார் வைத்திருக்கும் பிரபல உள்@ர் உயர் ஜாதிக்கொசப்பும் அங்கே சந்தையில் இரவில் உறையும் குறப்பெண்களைத் தூங்கவிடாது துரத்திக்கொண்டிருப்பவனும், மேற்படி சந்தைக்கு அம்பனிலிருந்து அம்சமாய் நல்ல வனப்பான கட்டுடம்புடன் பனங்கட்டி வியாபாரத்துக்கு வரும் கனகாவை கூட்டாளிகளுடன் பந்தயம் கட்டிக்கொண்டு; கடத்தியவனுமாகிய பரதன் கோயில் வளவின் ஒரு மூலையில் நிறுத்தியிருந்த தனது காருக்குள் காற்றோட்டமாக ஒற்றைக் கதவைத்திறந்து வைத்துக்கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு திறந்த மார்புடன் படுத்திருக்கிறான்.

தற்செயலாக அதற்குள் எட்டிப்பார்த்த ஜெயலிதாவை அவன் தில்லான் மீசையும் புலிப்பல்லுச் சங்கிலியும் கண்ணில்பட்டு அவை உலக மகா அதிசயங்களாக மயக்கித்தொலைக்கின்றன..................
“என்ன கிளி பார்க்கிறாய்.............?”
“சும்மாதான்..................”
“அப்ப இஞ்சையுள்ள வந்துபாரன்.”

போகிறாள்.
சற்று நேரத்துக்குள்ளெல்லாம் ஜெயலலிதாவோடு மற்றுமொரு நிசும்பனையும் ஏற்றிக்கொண்ட பரதனின் கார் உடையார்கட்டை நோக்கிக் அம்புருவிப் பறக்கிறது.

(4)

அன்று பொன்னன் வேலை முடிந்து திரும்புகையில் வழக்கமான கோப்பிறேசனுக்குள் போய் அமர்ந்து தாகந்தீர முதல் போத்தல் கள்ளைக் குடித்துவிட்டு அடுத்த போத்தலுக்கு ஓடர் பண்ணிவிட்டு பீடி ஒன்றைப் பற்றவைக்கையில்தான் வேலைத்தலத்தில் பெடியள் அச்சுவேலி லிபேட்டியில் அன்று குலேபகாவலி கடைசி நாளென்று கதைத்தது ஞாபகம் வந்தது.
மற்றைய போத்தலையும் வாங்கி அவசரமாகக் குடித்துவிட்டு சைக்கிளை அச்சுவேலிப்பக்கமாக விட்டான்.
புதுப்பிறின்டாக இருக்கவேணும். படம் முதன்முதல் வெளிவந்த காலத்தில் இருந்த மாதிரியே வலு கிளியராயிருந்தது. மஹா சந்தோஷம். அனுபவித்துப்பார்த்தான்.

-சய்க்................ இளமையும் அலையலையாய் தோள் நீளத்துக்கு தலைமயிரும் மந்தகாசப்புன்னகையும் எம். ஜி. ஆர் உண்மையில் ஆணழகன்தான். அந்த மகராசன்தான் உண்மையான ஏழைப்பங்காளி. என்ன கடவுள் ஒரு குழந்தையை குருத்தைக் கொடுக்காமல் விட்டிட்டுது. பரவாயில்லை. தலைவர் படத்தில இருக்கிற மாதிரி என்றைக்கும் இளமையாய் ஆரோக்கியமாய் இருக்கவேணும்.-
மனதார வேண்டிக்கொண்டான்.
படம் முடிந்து சைக்கிள் வாகனத்தில் ஏறியதும் பொன்னனுக்கு பாட்டுப்பாட்டாய் வந்தது. சத்தமாய் எடுத்து விட்டுக்கொண்டு சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்தான்.

“மயக்கும் மாலைப்பொழுதே நீ போ.........போ..........
இனிக்கும் இன்ப இரவே நீ வா.......... வா..........
இன்னலைத் தீர்க்க வா..............

பன்னீர் தெளிக்க பனிபெய்யுமே............
பசும்புல் படுக்க பாய் போடுமே.............
பொன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே...........

மயக்கும் மாலைப்பொழுதே ..........”

“டாய்.............. யாற்றா பண்டி இருட்டில பாட்டெழுப்பிறது............... இறங்கடா சைக்கிளாலை........ கழட்டடா காத்தை...........”
“காக்..........காக்........... காத்தைக்கழட்டிறது சரி.............. பிறகு அடிச்சுவிடப் பொம் வைச்சிருக்கிறியோ............?”

கேட்டுவிட்ட பின்னாலதான் பொன்னனுக்கு கிராம சபை லைட்டுக்கம்பத்து வெளிச்சத்தில நிற்;பது இரண்டும் பொலீஸ்காரர்களென்று தெரிந்தது.
சைக்கிளால் அவசரமாய் குதித்தான்.
“ஐயா................ தெரியாமலொரு பிழை நடந்துபோச்சு........... நா.......நா........நா........ நானாரோ பெடியள்தான் பகிடி பண்றாங்களெண்டு நெனைச்சிட்டன்.........”
-எஸ்- மாதிரி வளைஞ்சுகொண்டு சைக்கிளைப்பிடித்தபடி நின்ற பொன்னனைப் பார்த்த பொலிஸ்காரருக்கும் சிரிப்பு வந்தது.
“சரி போ...........போ...........”
தொண்டைமானாற்றில் இருந்து வல்லை வெளியால் செம்மணி நோக்கி நடந்த ஊதல் காற்று பொன்னனில் குளிரைப் போர்த்தியது.
சைக்கிளை உருட்டிக்கொண்டு ஒரு பதினைந்தடி போனவனுக்கு வாய் நமநமத்து பீடி ஒன்றடிச்சால் உவப்பாய் இருக்கும்; போலிருந்தது. பொக்கெற்றைத் தடவிப்பார்த்தான். பீடிக்கட்டைக் காணவில்லை. சைக்கிளால் குதிக்கையில்தான் கீழே விழுந்திருக்கவேணும.; திரும்பிவந்து லைட்டுக்கம்பத்து வெளிச்சத்தில் அவ்விடத்தைத் துழாவித்தேடினான்.
“என்ன தேடிறாய்.............?” பொலிஸில் ஒன்று கேட்டது.
“பீடிக்கட்டு விழுந்து போச்சையா...............”
எல்லாவிடத்திலும் தேடிப்பார்த்தான். காணவில்லை. இரவில் இனி எந்தக் கடையும் திறந்திருக்காதே.................. என்பதை நினைக்க பீடித்தாகம் அதிகமாகியது. பொலிசுக்காரரும் நல்லவர் போலயிருக்கு........... ஒன்று கேட்டுப்பார்ப்பமோ..............
சைக்கிளை மெதுவாய் ஒரு பொலிஸ்காரர் அருகில் உருட்டிக்கொண்டு வந்து சாரத்தை ஒதுக்கி பவ்வியமாக நின்றுகொண்டு கேட்டான்.
“அதைக்காணேல்லையாக்கும்................. ஐயாவிட்ட பீடியிருந்தால் எனக்கும் ஒன்று தந்து.......... நீங்களும் ஒன்றைப் பத்திறது........”

ஒரு பத்து இருபதுக்காவது வகைசெய்யும் வகையில் கிழக்கிலிருந்து ஒரு வைக்கோல் லொறிகூட வராத எரிச்சலில் இருந்தவனுக்கு கோபம் வந்தது.
“போடா எண்டுவிட்டால் குசும்பா பண்றாய் றாஸ்கல்............?” பொன்னனின் இரண்டு செவிகளையும் பிடித்து இழுத்து அரப்பு கசக்குவதுபோல் கசக்கி முறுக்கி விட்டான்.

கன்னங்கள் இரண்டு பக்கமும் அரத்தாளால்; தேய்த்ததுபோல் எரியஎரிய வீடு வந்துசேர்ந்தவனுக்கு வளவுக்குள் பத்துப்பன்னிரண்டு பேர் மௌனமாக நின்றுகொண்டிருப்பதைக் கண்டு ஒன்றுமாய் புரியவில்லை.
லெச்சுமி பொன்னனைக் கண்டதும் அழுதாள். பொன்னன் மேலும் கலவரமாக அங்கு நின்றவர்களில் ஒருவன் சொன்னான்.
“ஜெயலலிதா.................. "
" எ... எ... எ... என்ன.................. ஜெயலலிதா? "
" கோயிலடியில யாரோடையோ மாறிவிட்டாள்.”
“ஆ......ஆரோடை மாறினவள்..............?”
“அது தெரிஞ்சா விட்டிட்டு வந்திருப்பமே.....?”
“ லசுப்பீக்கரிலை சொல்லித் தேடினியளோ..........?”
“லசுப்பீக்கரிலை சொல்லியும் வராததிலைதான் எங்களுக்கு ஓடிவிட்டாளென்ற சமசியம் வலுத்தது.”
“அவளைத் தன்ர பாட்டுக்கு போகவிட்டிட்டு நீ எந்தப் பிரியனோடையடி பறைஞ்சு கொண்டிருந்தனி தோறை?”
இன்னும் என்னென்னவோ கெட்டவார்த்தைகள் எல்லாம் சொல்லி லெச்சுமியைத் திட்டினான். அவளுக்கு அடிக்க வேறு போனான். அவர்கள் தடுத்துவிட்டார்கள்.

யாருடன் ஓடியிருப்பாள் என்று எவருக்குந்தெரியவில்லை. பொன்னன் மறுநாள் வதுரிக்கும், மறவன்புலவுக்கும் போய் சந்தேகத்துக்குரிய பெடியங்கள் எல்லாரும் நிற்கிறாங்களோ என்று பார்த்துவிட்டு வந்தான்;. அவர்களைச் சோகம் விசாரிக்க வந்த உறவினர் பலரும் உணாவில் யோகர்சுவாமியாரிடம் போய் அருள்வாக்கு கேட்கும்படி சொன்னார்கள். போனான்.

சுவாமியாரைப் பல பிரச்சனைகளையிட்டும் தரிசிக்க வந்தமக்கள் கூட்டம் கோயிலுக்கு வெளியில் அலைமோத தண்ணியிறைப்பு மிஷின் திருட்டொன்றைப் பிடிக்க போயிருந்த சுவாமியார் நல்ல வெறியில் காரிலிருந்து இறங்கினார். இறங்கியதும் “ஆச்சி...... ஆச்சி.........” என்றுகொண்டு கோவிலுக்குள் புகுந்தவர் சுவரில் தொங்கிய பெரிய தேங்காய்ச்சிரட்டையாலான குடுவையுள்கையில் கைவிட்டு கொஞ்சம் விபூதி எடுத்துக்கொண்டு பொன்னன் நின்ற திக்கில் கையை நீட்டி “ஒரு குஞ்சைக் காணேல்லையென்று தேடிவந்தவன் சமூகத்துக்கு வா.” என்றார்.
சாமியாரின் பூடகப்பேச்சு புரியாமல் பொன்னன் திகைக்க அவனோடு கூடப்போன ஒருவன் “சாமி கூப்பிடுது முன்னே போ” என்றான்.
பொன்னன் சண்டிமடிப்பை அவிழ்த்துத் தளரவிட்டுவிட்டு துண்டை இடுப்பிலை கட்டிக்கொண்டு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு தயங்கித் தயங்கிப் போய் அவருக்கு முன்னே நின்றான்.
சாமியார் கண்களை மூடிக்கொண்டு அருள்வாக்கு அருளினார்:
“உன்ரை குஞ்சு மணவினைகாண வீட்டை விட்டு வெளிக்கிட்டிருக்கு. முடிஞ்சிருக்கிற மணம் நிலைக்காது, குஞ்சு வீடுதேடிவரும். ஆச்சியே அனுப்பி வைப்பா....................... எப்பவென்று கேளாதை, ஒருவெள்ளைக்கான (வெள்ளைப்போத்தல் சாராயம்) தட்ஷிணையை வைச்சிட்டு ஆச்சியை நம்பிப்போய்க்கொண்டே இரு.”

இரண்டு நாளாய் லெச்சுமி ஒன்றும் அடுப்பிலேயே ஏற்றவில்லை. பொன்னன் கூட எதுவும் சாப்பிடாமலே இருந்தான். கிட்டவிருந்த உறவுகள் கடையில் தோசை பலகாரங்கள் என்று வாங்கிக்கொண்டு வந்து கொடுத்திருந்தார்கள். எதுவும் சீண்டப்படாமலே கிடந்து காய்ந்தன. என்னதான் குடித்துப்புரண்டாலும் அவனுக்குள் இருந்த பிள்ளைப்பாசம் எல்லோருக்கும் ஆச்சர்யம் தருவதாயிருந்தது.

தினமும் பொழுது பட்டானபின் நல்லபிள்ளையிடம் போயிருந்து அரற்றிக்கொண்டிருப்பான்.
“எனக்கு மனசுல சோகம் முட்டிப்போச்சுதும். விளங்காத பிள்ளையெண்டாலும் நான் பெத்த பிள்ளை........... எங்கே போச்சென்டு தெரியேல்லை..............”
பொன்னனின் கண்கள் கலங்குவதைப்பார்க்க ஆனந்தராகவனுக்கும் பரிதாபமாயிருந்தது. தேற்றினான்.
“ஒண்டுக்கும் யோசியாதை பொன்னு......... அவள் நல்லபடி திரும்பி வருவாள்.”
“உணாவில் யோகியாரும் சொல்லியிருக்கிறார்................. உசுருக்கொரு வில்லங்கமுமில்லையாம். மணவினை நாடிப்போன நீ யாரோட எங்கையெண்டு சொல்லிப்போட்டுப் போயிருந்தால் இந்தப் பரிதவிப்பு எங்களுக்கு இருக்காதில்லை. நானே கவுரதையாய் பேசி முடிச்சுவைச்சிருப்பனில்லை. இப்பிடி நாலு சனம் பல்லிலை போடுற மாதிரி வந்திருக்காதே................ அவளுக்கிப்ப என்னவும் பதினேழுதானே நடக்குது இன்னும் கொஞ்சம் உலகம் பிடிபடட்டும் எண்டுதானும் நானும் விட்;டிட்டிருந்தனான்............ இப்பிடி நாறடிச்சுப்போட்டாளே................. எனக்கு இண்டைக்கு கள்ளுக்கும் மனமில்லை.”

சஞ்சலமும் ஏகாந்தமுமாய் மேலும் நாலு நாட்கள் கழிந்தன. ஐந்தாம் நாள் மாலை கருக்கட்டி ஒரு மைம்மல் நேரம். சாவகச்சேரிப் பக்கமிருந்து வந்த ஒரு சாம்பல் நிற சம்மர்செட்கார் நிதானமாக ஜெயலலிதாவை அவள் வீட்டுவாசலில் இறக்கிவிட்டுத் திரும்பிப்போனது.

ஜெயலலிதாவைக்கண்ட சின்னிக்கிழவிதான் முதலில் “ஓ........” வென்று ஒப்பாரி வைக்கவும் சனம் அதிலே கூடிவிட்டது.
“ உனக்கேன் புத்தி இப்படிப் போதலிச்சுப்போச்சு பிள்ளை...........?”
லெச்சுமி ஓடி வந்து மகளைக் கட்டிப்பிடித்து அழுதாள்.
கூட்டத்தில் ஒருத்தி மூளியாயிருந்த அவளைப் பார்த்ததும் துணுக்குற்று கேட்டாள்
“எங்கையடி காதான்?”
“ அதைப் பரந்தனில வித்துப்போட்டுத்தானே போத்தல் , சாப்பாடு எடுத்துக்கொண்டு அங்காலை கூட்டிக்கொண்டு போனவை.”
எங்கேயோ இருந்து ஓடி வந்த பொன்னன் ஜெயலலிதாவைக் கண்டு வாயடைத்துப்போய் நின்றான்.
சின்னிக்கிழவி கேட்டாள்.
“ஆரடி உன்னைக் கூட்டிக்கொண்டு போனது............... என்ன சொல்லிக்கூட்டிக்கொண்டு போனவங்கள்............?”
சனம் தெருவில் அமளிப்படுவதைக் கண்டு வெளியில் வந்த ஆனந்தராகவனைக் காட்டி -
“ ரெண்டுபேர்................. ஒராள் உவரை மாதிரி இருக்கும,; அவர்தான் கூட்டிக்கொண்டுபோய் கலியாணங்கட்டிறன் எண்;டவர். பெரீய்ய்ய மீசை வைச்சிருக்கிறார்;...........”
மோவாயில் விரலால் மீசை வரைந்து காட்டினாள்.
பினனர்; சைக்கிள் கான்டிலில் பிரம்புக்கூடையைக் கொழுவிக்கொண்டு கடைக்குப் போகப்புறப்பட்டு வந்த எதிர் வீட்டு சின்னத்துரை அண்ணை (வயது 45) யைக்காட்டி-
“ என்னை வச்சிருந்த மற்றவருக்கு உவற்றை வயதிருக்கும்.”
அவர் தலையில் கையை வைத்து “ என்ரை வாய்க்கால் தரவைக்கொம்பா................” என்று அலறினார்.

மற்ற நாள் பேச்சியம்மனின் கோவிலில் அவளுக்கு ஐந்தாறு நூல்கள் மந்திரிச்சுக் கட்டிவிட்டு மறவன்புலவிலிருந்து வந்த லெச்சுமியின் உறவுக்காரர் ஜெயலலிதாவை தம்முடன் கூட்டிக்கொண்டு போனார்கள்.

இரண்டு வாரம் கழிந்து ‘அவளுக்கு சோறுகொடுப்பித்தாயிற்று’ என்று சேதி காற்றோடு வந்தது. மாப்பிள்ளை வட்டித்தொழிலால் மறவன்புலவை வாங்கக்கூடிய பணக்காரனாம்.

கடைசிப்பாடம் சோதனை நன்றாக எழுதிய திருப்தியில் ஆனந்தராகவன் சைக்கிளில் வந்துகொண்டிருந்தான்.

ஜெயலலிதா பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு கல்யாணக்களையோடு எதிர்திசையில் வந்துகொண்டிருந்தாள்.
மைனர்சங்கிலி , டெர்லின்சேர்ட்; , ஒற்றை விபூதிக்கீற்றின் மேல் சந்தனப்பொட்டு சகிதம் மெட்டாக இருந்த அங்குட்டன் மாப்பிள்ளைக்கு முப்பத்தைந்து வயது இருக்கும், ஒருகாலும்; மற்றையதைவிட குள்ளம்போலும.; அவளுக்கு பத்தடிகள் பின்னே விந்தி விந்திக் கொண்டு நடந்து வந்தான்.
இப்போதும் ஃபோகஸ் பண்ணித்தொலைப்பாளோ....................?
ஆனந்தராகவனுக்கு மனதுள் சங்கடமாகவும் பயமாகவுமிருந்தது.
அவன் சைக்கிள் அண்மித்ததும் அவள் சட்டென வீதியின் மற்றப்பக்கத்திற்கு மாறினாள். நிலத்தைப் பார்த்துக்கொண்டு போகிற அவள் முகத்தில் வெட்கம் வழிந்து வழிந்து சொட்டுகிறது.
ஜெயலலிதா முதன்முதலாக வெட்கப்பட்டதை கண்டு ஆனந்தராகவன் ஆச்சர்யம் தாளமுடியாமல் அவர்களைக் கடந்த சென்ற பின்னாலும் திரும்பிப்பார்க்கிறான்.

அவர்கள் இருவரும் ஒருவர் கையை மற்றவர் பாந்தமாகப் பற்றியபடி சென்று கொண்டிருந்தனர்.


.......19.01.1999 ----- பூவரசு . ஜெர்மனி ---

Keine Kommentare: