Montag, November 22, 2004

ஆமோ........ அ.·.தோ சங்கதி!

பொ.கருணாகரமூர்த்தி

டைநடுச் சங்க கவிகளிடையே காமம் அதிகம் கொண்டு விளங்கியவராகக் கருதப்படும் கவிஞர் மொத்தினார்க்குமினியர் ஆவர். இவர் பன்னிய ' புலுணிவிடுதூதெனும் ' காதலருங்காப்பியத்தின் முதல் அத்தியாயாத்தில் வரும் 31வது பனுவல் தற்கால வழக்கில் அச்சிட முடியாத பல வார்த்தைகளைக் கொண்டிருப்பதாகப் பழந்தமிழ் வல்லாளர் கூறுவர்.அல் (இரவு) + கொல் => அல்கொல் என்பதே மருவி அல்குல்லாகியது என்பதை ஆய்ந்து நிறுவியவரும் இவரேயாவர்.
அவர் தம் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான சம்பவமொன்றுண்டு.
கற்றவருக்கான பொதுவிதியாக இப்புலவருக்கும் வருமானமோ மிகக்குறைவு.
அவருக்கு ஊருக்கு வெளியில் போய் விவசாயமோ, வாணிகமோ உடலாலான ஊழியமோ புரிந்து பொருளீட்டிவரும் வல்லபங்களும் கிடையாது. சும்மா வீட்டையும் மனைவியையுமே வளைய வந்துகொண்டிருப்பார்.
ஒரு நாள் புலவர் மனைவிதான் அயலவர் வீடொன்றில் போய் கொஞ்சப் பணம் கடன் வாங்கிக்கொண்டு போய் கடற்கரையில் மீன் வாங்கிவந்து அதை அரிந்து வைத்துவிட்டு அதைச் சமைப்பதற்காக புதுமிளகாயை எடுத்து வந்து வீட்டின் தலை வாசலை ஒட்டியுள்ள திண்ணையில் அமைந்திருந்த அம்மிக்கட்டில் கூட்டு அரைக்கலானார்.
பொழுது போகாத புலவர் மனைவியின் அருகில் போய் காற்பலகை ஒன்றைப்போட்டு அமர்ந்து கொண்டு தன் கவித்துவத்தைப் பற்றியும், தன் கவிதைக்குப் பொருள் சொல்லமுடியாமல் திணறித்தோற்றுப்போன புலவர்களைப் பற்றியும், தான் எந்தெந்த மன்னர்களி;ன் சபைகளிலெல்லாம் போய் கவிதைகள் பாடிப் பரிசுகள் வென்று வந்தேனென்றும் பழங்கதைகளைப் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்க வேறு வகையில்லாத மனைவியோ புலவர்பிரான் கூறியவற்றுக்கு " ஊம் " கொட்டிக்கொண்டிருந்தார். திடீரெனப் புலவருக்குத் நீர்த்துளி ஒன்று தெறித்துத்தன் கண்ணில் விழுந்தாற் போலிருக்கவேஅவர் அலறலானார்:
"ஐயைய்ய............ ஐயைய்ய.......... அடியடியயடியடியடியடி......... பத்தி எரியுதடி பத்தி எரியுதடி என்னிரு கண்களுமே பத்தி எரியுதடி"
" என்னாச்சு உங்களுக்கு......... ஐயோ என்னாச்சு உங்களுக்கு? "மனைவியும் பதறலானார்.
"அனலாய் அழத்துதடி அப்பாலே தெரியாமல்பக்கத்தில் நானிருக்கும் சித்தமேயற்று நீயும் மொத்தினார்க்கு மினியன் மேலே காரப்புதுமிளகாய் சேர்த்தரைத்த செந்நீரை எத்திவிட்ட பாதகத்தி செப்பு இனி இயல்பதாக எப்படி நான் கவிதை செய்வேன்? எப்படி நான் கவிதை செய்வேன்?இன்றெனக்கு அவையிலே பட்டளித்து மன்னன் தரும் பொற்கிளியும் புண்ணாச்சு போ! "
என்று புலம்பித் துடித்தார்.
மனைவியோ " ஐயகோ ஏனிந்த அபாண்டம் சொன்னீர்............. நானெங்கே சுவாமி உங்கள் மேல் நீர் தெளித்தேன்? அது கோழியின் திருவிளையாடல்........... இங்கே எனக்கும் இரண்டொரு துளிகள் பட்டிருக்கு" என்று சொல்லி " கீழே பாருங்கள் " என்று கையைக் காட்டினார்.
வீட்டின் தாழ்வாரத்திலிருந்து வழிந்து ஒரு பழைய மட்பாண்டத்தில் தேங்கியிருந்த மழைநீரை அங்கே சில கோழிகள் குடிப்பதுவும் தலையைச்சிலுப்பி அலகால் பக்கவாட்டில் தெறிப்பதுவுமாக இருந்தன. அப்போது மேலும் சில துளிகள் அவர் மேல் தெறித்தன.
"ஆமோ........... அ·தோ சங்கதி! நானேதோ நீர்தான் மிளகாய்கூட்டுத்தண்ணீர் தொட்டகையைத்தான் என்மேல் உதறினீரோ என்று எண்ணிவிட்டேன்............. அது போகட்டும்............ நீர் விரைவாய் சமையும் " என்றார் புலவர்.




Keine Kommentare: